“அக்கா. அப்பா ஊருக்கு போறாறாம். என்னை அத்தை வீட்டுல கூட்டிட்டு போய் விட்டுட்டு ஊருக்கு போறாராம். என்னை ரெடி ஆகி இருக்க சொன்னார்” என்றாள் பவித்ரா.
“எப்ப ஊருக்கு போறாறாம். என்னவாம்” என்றாள் ஜோதி.
“நைட் போறாறாம். நிலத்துல வேலை இருக்காம்.”
“ம்ம்ம்.”
“அக்கா. நான் இங்கேயே இருக்கவா” என்றாள் பவித்ரா.
இனியாவோ திகைத்து நிற்க, ஜோதிக்கு அது ஒன்றும் பெரிய வியப்பாக இருக்கவில்லை.
“பவித்ரா. என்னாச்சி. ஏன் இப்படி சொல்ற. அத்தை உன்னை நல்லா பார்த்துப்பாங்களே” என்றாள் இனியா.
“ஆமாக்கா. அத்தை என்னை நல்லா தான் பார்த்துப்பாங்க. அதுல என்ன டவுட்.”
“அப்புறம் ஏன் இங்கேயே இருக்கேன்னு சொல்ற”
“உங்க கூட இருக்கலாம்னு தான். அங்க போனா என்ன தான் இருந்தாலும் தனியா தானே இருக்கணும்”
“புரியுது டா. ஆனா அத்தையும், சித்தப்பாவும் இப்ப தான் சேர்ந்திருக்காங்க. நாம எல்லாம் ரிலேசன்னு தெரிஞ்ச உடனே எங்களையே அத்தை எப்படி கவனிச்சிக்கிட்டாங்க தெரியுமா. இன்னும் நீ அவங்க சொந்த தம்பி பொண்ணுன்ன உடனே உன்னை நல்லா கவனிச்சிக்கணும்ன்னு அவங்களுக்கு ஆசை இருக்கும் இல்ல, அதை நாங்க என்ன சொல்லி தடுக்க முடியும். அதுவும் அத்தைக்கு பொண்ணு இல்லல்ல, அதனால பொதுவாவே அத்தைக்கு பொண்ணுங்கன்னா ரொம்ப பிடிக்கும், அதனால உன் ப்ராஜெக்ட் முடியற வரைக்கும் உன்னை அவங்க வீட்டுலையே வச்சிக்கறேன்னு சித்தப்பா கிட்ட சொல்லிட்டாங்களாம். இதுல நாங்க என்ன சொல்ல முடியும்”
பவித்ராவிற்கு புரிந்தது. இதற்கு மேல் தான் தயங்கினால் எல்லோரும் என்னவென்று யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்று, எனவே சிறிய சிரிப்புடன் “சரிக்கா, அப்படின்னா எனக்கு கம்பனி கொடுக்கறதுக்காக நீங்க அங்க சீக்கிரம் வந்துடுங்க பர்மனென்ட்டா. சரியா”
“ம்ம்ம். சீக்கிரம் வந்துடுவா. நீ ஒன்னும் கவலை படாத” என்றாள் ஜோதி.
“சரிக்கா. நீங்க ரெஸ்ட் எடுங்க. நாங்க போறோம்” என்று இருவரும் வெளியே வந்தனர்.
வெளியே வந்த பின் தன் அன்னையிடம் சென்ற ஜோதி எதற்கும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று “அம்மா. ஏன் பவித்ரா நம்ம வீட்டுல இருந்தே ப்ராஜெக்ட் செய்யலாம் இல்லை. எதுக்கு அத்தை வீட்டுல போய் இருக்கணும்” என்றாள்.
“என்னடி பேசற. என்ன தான் நாம எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒன்னு மாதிரி பழகினாலும், அவங்க கூட பிறந்தவங்க இல்லையா. அதை நம்மளால மாத்த முடியுமா. அவங்களுக்கு உரிமை இருக்கு இல்ல. இதுல நாம என்னத்தை சொல்றது. ஏன்டா பவித்ரா அங்க ரெண்டு நாள் இரு. பெரியம்மாவை பார்க்கணும்ன்னு இங்க ஒரு நாள் வந்து இரு. அப்படி இருந்தா உனக்கும் ஒன்னும் தெரியாது. ராஜி அண்ணியும் ஒன்னும் நினைச்சிக்க மாட்டாங்க” என்றார்.
“சரி பெரியம்மா”
அவள் முகம் சரியில்லாததை குறித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார் ராஜி.
ஜோதி பவித்ராவை தோளோடு அணைத்துக் கொண்டாள்.
பவித்ராவிற்கு அந்த பரிவு தேவைப் பட்டது.
“பவித்ரா”
“அக்கா” என்று பவித்ரா ஜோதியின் தோளில் சாய்ந்து கண்ணீர் விட்டாள்.
கண்ணீர் வந்துக் கொண்டே இருந்தது.
ஜோதி அவளின் முகம் திருப்பி “ஏய் இங்க பாரு. பவித்ரா. அழாத” என்றாள்.
“என்னால முடியலைக்கா”
ஜோதியும் என்னவென்று கேட்கவில்லை, பவித்ராவும் எதுவும் சொல்லவில்லை.
லக்ஷ்மியின் குரல் எங்கேயோ கேட்க பவித்ரா கண்ணை துடைத்துக் கொண்டு இப்படியும் அப்படியும் பார்த்தாள்.
ஜோதி மெலிதாக சிரித்து “ரெண்டு பேரும் இதுல மட்டும் ஒன்னா தான் இருக்கீங்க” என்றாள்.
“ஆமா இதுல மட்டும் தான்” என்றாள் பவித்ரா விரக்தியுடன்.
“பவித்ரா எதுவும் நினைக்காத. தேவையில்லாம எதையும் நினைச்சி நீயே உன்னை கஷ்டப் படுத்திக்காத”
அவள் ஏதும் கூறவில்லை.
அவள் நினைவு முழுவதும் அந்த வீட்டிற்கு சென்று எப்படி இருப்பேன் என்பது மட்டும் தான். ஆனால் அவளுக்கு தெரிந்தது. அங்கு செல்லாமலும் இருக்க இயலாது என்று.
பவித்ரா அவள் தந்தையுடன் சென்றாள்.
பவித்ராவை ராஜி வரவேற்று அவளிடம் அன்பாக நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.
பவித்ராவிற்கு இருதலைக்கொள்ளியின் நிலை தான். அவளால் இயல்பாக அந்த அன்பை ஏற்றுக் கொள்ளவும் இயலவில்லை. அதே நேரம் தன்னிடம் அவ்வளவு அன்பாக இருப்பவரின் அன்பை உதாசீனம் செய்யவும் மனமில்லை.
தன்னால் முடிந்த வரை முயற்சி செய்து அவருடன் இயல்பாக இருக்க ஆரம்பித்தாள்.
சந்துரு வீட்டிற்குள் நுழையும் போது பவித்ராவின் சிரிப்பொலி தான் கேட்டது. அவளும் அவன் தாயும் சேர்ந்து ஏதோ பேசிக் கொண்டே சிரித்துக் கொண்டிருந்தனர்.
ஒரு நிமிடம் நின்று அதை கவனித்தவன் பின்பு சுய நினைவுக்கு வந்து உள்ளே சென்றான்.
அவனை கண்ட பவித்ராவின் சிரிப்பு பட்டென்று சுவிட்ச் போட்டார் போல் மறைந்து விட்டது.
அதைக் கண்டவனின் மனம் கனத்தது.
இதில் யார் மேல் குற்றம் சொல்வதென்று அவனுக்கு தெரியவில்லை. ஆனால் யோசித்து பார்த்த வரையில் அவன் மனம் அவனை தான் குற்றம் சொன்னது.
என்ன தான் இருந்தாலும், ஏற்கனவே ஒரு பெண்ணை விரும்பியவன் இன்னொரு பெண்ணை சிறிது நேரமென்றாலும் ஆர்வமாக பார்த்தது தவறு தானே. அதனால் தான் இன்று இப்படி அனுபவிக்கிறோம் என்று எண்ணிக் கொண்டே அவர்களை கடந்து சென்றான்.
“சந்துரு”
“என்னம்மா”
“என்னடா. வந்துட்டு நீ பாட்டுக்கு உள்ளே போற”
“வேற என்னம்மா செய்ய சொல்றீங்க.”
“என்னடா. என் கிட்ட ஒரு வார்த்தை கூட பேசாம போற. அதை கூட விடு. பவித்ரா வீட்டுக்கு வந்திருக்கா. என்னன்னு ஒரு வார்த்தை கூட பேசாம, அவளை விசாரிக்காம போற, உனக்கு நான் இந்த அளவு தான் மரியாதை எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கேனா”
“என்னம்மா நீங்க. நான் ஏதோ யோசனை பண்ணிட்டே போனேன்” என்று சமாளித்தான்.
ஆனால் ராஜி அதை ஏற்றுக் கொண்டால் தானே. அவனை வாட்டி எடுத்து விட்டார்.
கடைசியில் சந்துரு “என்னம்மா. விருந்தாளியை தானே கேட்பாங்க. நம்ம வீட்டு ஆளுங்களை கூடவா விசாரிக்கணும்” என்றான்.
அவ்வளவு நேரம் தலை குனிந்தவாறு இருந்த பவித்ரா தலை நிமிர்ந்து அவனை பார்த்தாள். சந்துருவால் அந்த பார்வையை தாங்கிக் கொள்ள இயலவில்லை.
பார்வையை விளக்கிக் கொண்டு “அம்மா. ஒரு முக்கியமான வேலை. ப்ளீஸ்” என்றவாறு அங்கிருந்து நகர்ந்தான்.
அதன் பிறகு ராஜி என்ன பேசினார் என்றே பவித்ராவிற்கு தெரியாது. அவள் சிந்தனை எல்லாம் எங்கேயோ இருந்தது.