“உங்க ஆவி ஆத்மாவில இருக்கிற அத்தனை காயங்களும் யேசுவின் தழும்புகளால குணமாகட்டும், தேவையில்லாத எந்த உணர்ச்சி கட்டுகளும் யேசுவின் நாமத்தால உடைந்து போகட்டும், உள்ளார்ந்த விடுதலை ,சுகம் கிடைக்கட்டும். ஆமென்.”
கண்மூடி அமைதி காத்த நிரல்யாவின் தலை முதல் கால் வரை பரவியது இளஞ்ச் சூடான பனியாறு. கண்களில் மௌனமாய் நீர்ப் பாதை.
இப்படி ஒரு பெண்ணா? இத்தனை அன்பும் அக்கறையும் இந்த இதய கூட்டுக்குள் எப்படி வந்தது. ஆரோக்கியமாய் இருப்பவன் அடுத்தவனுக்கு வைத்தியம் பார்ப்பது நடை முறை சாத்தியம். காயம் பட்டவள் காயம் கட்டுவதென்றால்?????? காயம் பட்டவருக்குதான் வலி புரியும் என்பதாலா? அடி வாங்கிய அத்தனை பேரும் இவளை போலவா நடந்து கொள்கிறார்கள்??? இந்த ஆரணி எனும் என் தங்கை அனைத்து நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும். அதற்காக என்னால் முடிந்த எல்லாவற்றையும் நான் செய்வேன் தெய்வமே!
“எல்லாம் சரியாயிட்டுன்னா இப்ப என்ன ப்ரச்சனை ஆருமா? ரொம்ப பயந்து போய் இருக்கிற!” தமக்கையின் தவிப்பாய் வெளிப்பட்டன வார்த்தைகள்.
“உங்களத்தவிர வீட்ல யார்ட்டயும் நான் இந்த விஷயத்த சொல்லல, அந்த அகன இன்னும் ரச்சு ஃப்ரெண்டாத்தான் நம்புறான். அகன் இப்ப இங்க வந்துருக்கான். நம்ம வீட்டு ஜெப கூட்டம், சர்ச் எல்லாம்....வர்றான், பயமாயிருக்குது”
“ஆருமா இத அண்ணாட்ட சொல்லியிருக்கலாம்தானே!!” கனிந்திருந்தது நிரல்யாவின் குரல், கட்டாய படுத்தபடுவதாக அவள் நினைத்துவிட கூடாதே.
இதழ் விரித்தாள் ஆரணி. வறண்ட புன்னகை.
“உங்கப்பா இரண்டு வருஷம் முன்னால உங்களோட காண்ராக்ட் ஒர்க்கை அண்ணா கம்பெனிக்கு குடுத்தாராம். அப்படித்தான் உங்க குடும்பத்தோட தொடர்பு ரினியூ ஆச்சுதாம். அந்த டைம்லயே அவனுக்கு உங்க மேல ஸ்பெஷல் இன்ட்ரெஸ்ட். இருந்தும் 2 வருஷம் கவனமா காத்திருந்து, ஏற்ற நேரம்னு பார்த்து உங்க அப்பாட்ட பொண்ணு கேட்டுருக்கான். எப்பவாவது அவன் உங்களை பார்க்கவோ, பழகவோ டிரை பண்ணியிருக்கானா? அதுதான் ரச்சு. பொண்ண பிடிச்சிருக்கா, பொறுமையா இருந்து , அந்த கல்யாணம் கடவுள் சித்தம்தானான்னு தெரிஞ்சுகிட்டு, முறையா பொண்ணு கேட்க்கணும்னு நினைக்கிறவன், அவன்ட்ட போய் என் கதைய நான் எந்த மூஞ்ச வச்சுகிட்டு சொல்ல?.............அதோட விஷயம் தெரியிறப்ப அவனுக்கு வலிக்குமே.........அவன் என்னை எப்படி பார்த்துபான் தெரியுமா?.....அதான் இப்பல்லாம் அவனுக்கு சின்னதா ஒன்னுனாலும் ரொம்பவே டென்ஷனாயிடுது....... நீங்க எப்படியாவது ரச்சுவ அகன விட்டு விலக வைங்க நிரு....ப்ளீஸ்”
“அதுக்காக என்னால முடிஞ்ச எல்லாத்தையும் செய்வேன் ஆரு, ஆனால் ஒரு சந்தேகம்.......எல்லாம் சரியாயிட்டுன்னு சொல்ற நீ எதுக்காக கல்யாணம் பண்ண மாட்டேன்ற?” கரிசனம், கண்டனம், நல்லது நடப்பித்துவிடும் நல்லெண்ணம் எல்லாமும் இருந்தது அக்கேள்வியில்.
“அது...எல்லா ஆண்களுக்கும் தன் மனைவி மேல ஒரு பொஸஸிவ்னெஸ் இருக்கும்..... ஆசபட்டு என்ன கல்யாணம் பண்ணிகிட்டாலும் அந்த பொஸஸிவ்னெஸ் தல தூக்கிறப்பல்லாம்......என் விஷயத்தில்.......ரெண்டு பேருக்கும் அது நரகமாயிடும், அதோட எனக்கு என் தேர்வில நம்பிக்கை செத்து போச்சு.” ‘வேண்டாமே, விட்டுடேன் என்பதுபோல் ஒரு முகபாவம் ஆரணியிடம்.
‘அப்படி எப்படி விடமுடியும், உன் பேச்சை வச்சே உன்ன பிடிக்கிறேன் பார்’ “ பேச்சுக்கு பேச்சு கடவுள் கடவுள்னு சொல்ற.....விதவை திருமணத்தை எவ்வளவு ஆணித்தரமா பேசுது கடவுளோட வார்த்தை, அதுவே முடியுறப்ப இது முடியாதா....? உன் தேர்வில நம்பிக்கை இல்லனா, ரச்சு செலக்க்ஷன்னு இப்ப பாரட்டினியே, அந்த ரச்சு ஃப்ரெண்ட் ஜெஷுரன்னு...”
பேச்சை தொடர விடவில்லை ஆரணி. அலறினாள். “அவன் தான் அகன். அகன் ஜெஷுரன் ஆஃப் ஆயில்ஸ் அண்ட் ஆயில்ஸ் ”
அப்படியானால்?????? இப்போது அவன் திட்டமென்ன?????? அடுத்த குறி யார்???????? ஏன்?????????????
நேராக நிரல்யா சென்றது ரக்க்ஷத்தின் அலுவலகத்திற்குதான். சென்ற நோக்கம் ஜெஷுரனை துரத்துவதுதான்.
இவள் சென்ற நேரம் ரக்க்ஷத் கான்பிரன்ஸ் ஹாலில் இருந்தான். நீள் செவ்வக அறையின் ஒரு பக்கம் நின்று அவன் ஏதோ பேசிக்கொண்டிருக்க, நீண்ட மேஜையை சுற்றிலும் மரகன்றுகளாய் மனித தலைகள்.
அனுமதி கேட்க்காமல் அறை கதவை திறந்தாள். இவளை பார்த்ததும் வேகமாக வாயில் நோக்கி வந்தவன் இவள் வலக்கை பற்றி இவளையும் தன்னோடு அறைக்கு வெளியே அழைத்து இல்லை இழுத்து வந்து அறை கதவை தனக்கு பின்புறமாக இடக்காலால் மூடினான்.
ஏனெனில் இடம் பொருள் ஏவல் எதுவும் பார்க்காமல் நிரல்யா அழுதுகொண்டிருந்தாள்.
ஆரணியிடம் அழ இவளுக்கு பயம். அவளுக்கிருக்கிற தைரியத்தை இவள் கலைத்தது போன்று ஆகிவிட கூடாதே. ஆனால் ஆரணியின் அந்தரங்கத்தின் தாக்கத்தை தனியே தாங்க இவளுக்கு தெம்பில்லை. அந்நிய ஆணின் தொடுகையின் அருவருப்பு எப்படி இருக்குமென நிரல்யாவிற்கு அறிமுகம் உண்டே! அந்த மிருகம் அன்று அவளை தொட்ட போது இவள் துடித்த துடிப்பென்ன? தொடுகையே அப்படியெனில் ஆரணி அனுபவித்த கொடுமை எத்தனை எத்தனையாய் அவளை வதைத்திருக்கும்! எப்படியெல்லாம் அவளை கொன்று தின்றிருக்கும்!.
செவியில் விழுந்த செய்தியால் செத்தவளாய் வந்தவளுக்குள் மனம் திறக்க கூடிய மற்றவனைக் கண்டதும் உணர்வெனும் ஆழியிலிருந்து ஊழிக்காற்று உயிர்பெற்றது. அது ஆவி, ஆத்மா, சரீரத்திலிருந்து சத்தணைத்தையும் சடுதியில் எடுத்துக்கொண்டு ஜீவனுள்ள குமுறலாய் கூத்தாடியது. கட்டவிழ்ந்த கண்ணீரையும் அது துணை கொண்டாடியது.
நிரல்....சற்று அழுத்தமான அவனது அழைப்பு ஆழிக்கும் ஊழிக்கும் அடைப்பெதையும் அடிகோலவில்லை. மாறாக மனதிற்குள் மறைந்திருந்த மறுமொழியை தளம் காணச் செய்தது. “எனக்கு என் அம்மா வேணும்.”
சிறு வயதில் தாயை இழந்தவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை இது. ‘என் அம்மா இருந்திருந்தால் எல்லாம் சரியாக இருந்திருக்கும்.’
அந்த வகையில் இப்பொழுது நிரல்யா தன் தேவையாக உணர்ந்தது தன் தாய் மடியைத்தான்.
தலை வால் புரியாமல் தட்டாமாலை சுற்றினாலும் தான் மணக்க இருப்பவளின் தற்போதைய மனநிலை பசித்தால் மட்டுமன்றி வலித்தாலும், பயந்தாலும், தாய்ப்பால் தேடும், மாதங்கள் மட்டுமே மண்ணில் கண்டிருக்கும் மழலைக்கு ஒப்பாயிருக்கிறது என்பதை புரிந்து கொண்டவன், வளாகத்திலிருக்கும் அனைவருக்கும் காட்சிபொருளாக விரும்பாமல், அடுத்திருந்த அறை கதவை அவசரமாக திறந்து அவளை உள்ளே கூட்டிப்போனான். உள்ளே சென்றவனை உட்காரகூட விட வில்லை அவள். அழுது தீர்த்துவிட்டாள் ‘அம்மா வேணும்’ என்பதை தவிர வேறு எந்த விஷயத்தையும் வெளியிடாமலே.
ஊழி புயல் கரை கடக்க கண்ணில் மழை நிறுத்தம். சுயம் வேலை செய்ய தொடக்கம். சூழ்நிலை புரிய மெல்ல விலகினாள். பர்பிளும் கறுப்பும் சிறு கோடுகளாக மாறி மாறி ஓடிய அவனது சட்டையின் இதயப் பகுதி ஈரமாகியிருந்தது கண்ணில் பட்டது. சே!
இத்தனைக்கும் இவளை அவன் விலக்கி நிறுத்தவில்லையே தவிர கையால் தொடவுமில்லை. தாமரை இலை தண்ணீர் போல் நின்றிருந்திருக்கிறான்.
அன்றும் மருத்துவமனை படுக்கையில் இவள் தவித்த போது ஜெபத்தோடு தலையில் கை வைத்ததோடு சரி. கண்ணியம் காப்பவன். அவன் மணக்க இருப்பவள் ஆசீர்வதிக்கபட்டவள்.
தன் தவறு புரிய குன்றி நின்றவளால் நிமிர்ந்து அவன் முகம் பார்க்க முடியவில்லை. இவளை உணர்ந்தவனாய் அவன் முகக்காட்சி தாங்குமளவு இவள் சமனப்பட வழி சொன்னான்.
“வாஷ் ரூம் அந்தபக்கம் நிரு”
தாய்மையின் குரலாய் ஒலித்தது அது. எதிலும் இவள் இதம் காண்பவன். தாயுமானவன். இருவிழி நிமிர்த்தி அவனை ஒரு பார்வை பார்த்தாள்.
“என்ன லயு?”
“இனி எனக்கு அம்மா இல்லனு தோணாது”.