என் அபிநயா முகத்தில் எப்பவும் நான் பார்க்க விரும்புறது சந்தோஷம் தான்… அது என் சகிக்கும் தெரியும்… இந்த அழுகை என் அபி முகத்தில் இருக்கும் அந்த சந்தோஷத்தை மறைச்சிடுது… எனக்கு என் அபியோட அழகான நயம் தான் வேணும்… அவளோட ராமிற்கு எதுவும் ஆகாது… ஏன்னா ராம் உயிர் அவனோட சீதையிடம் தான் இருக்கு… அவ சிரிச்சா அவளுக்குள்ளே இருக்குற இந்த ராம் நானும் சிரிப்பேன்… அவ அழுதா நானும் துடிப்பேன்… இப்போ என் சகி என்ன பண்ணப் போறா?... என்று அவன் கேட்க…
அவனின் அத்தனை வார்த்தைகளும் அவள் இதயம் தொட, என் ராம் சிரிச்சிட்டே இருக்கணும்…. அதான் எனக்கும் வேணும்… நான் அழலை… என்றாள் வந்த கண்ணீரை அடக்கி ஏங்கிக்கொண்டே… அவளின் விசும்பல் அவனுக்கும் கேட்டது… அவளைத் தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக்கொள்ள அவன் உள்ளம் பெரும் தவிப்புக்கொண்டது… அவன் அணைப்பு இப்போது அவளுக்கு ஆறுதல் அளிக்கும் நிச்சயம்.. ஆனால் இந்த நேரத்தில் அது சாத்தியமன்று… என்ன செய்து தன்னவளை மாற்ற என்று அவன் யோசித்தபோது…
எனக்கு உங்க தோள் சாஞ்சிக்கணும் போல இருக்கு… ஆனா அது இப்போ முடியாதுல்ல… எனக்கு உங்க குரல் கேட்கணும்…. தர்ஷ் பாடுறீங்களா?... என்று அவள் கேட்டதும் ஒரு கணம் கூட தாமதிக்காமல் சரிடா குட்டிமா என்றான் அவன்…
அவன் மனதில் உள்ளதை அப்படியே அவளிடத்தில் அந்த பாடல் மூலமாக உரைத்தான்...
“கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா…
அடி நீதான் என் சந்தோஷம்….
பூவெல்லாம் உன் வாசம்…
நீ பேசும் பேச்செல்லாம் நான் கேட்கும் சங்கீதம்…
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி…
நீ இல்லை என்றால் நானும் இங்கே ஏழையடி….
…
நெடுங்காலமாய் உறங்காமலே… எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே…
உனைப் பார்த்ததும் உயிர்த் தூண்டவே… உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே…
தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக….
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி…
நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி…
….
மழை மேகமாய் உருமாறவா… உன் வாசல் வந்து உயிர்த்தூவவா…
மணம் வீசிடும் மலராகவா… உன் கூந்தல் மீது தினம் பூக்கவா…
கண்ணாக கருத்தாக உனைக் காப்பேன் உயிராக…
உனைக் கண்டேன் கனிந்தேன் கலந்தேனே… அட உன்னுள் உறைந்தேனே…
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே… உனை என்றும் மறவேனே….
….
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா…
அடி நீதான் என் சந்தோஷம்….
பூவெல்லாம் உன் வாசம்…
நீ பேசும் பேச்செல்லாம் நான் கேட்கும் சங்கீதம்…
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி…
நீ இல்லை என்றால் நானும் இங்கே ஏழையடி….”
…
அவனின் காதல் அவளுக்குள் மாற்றம் தந்ததா… இல்லை அவனின் பாடலா?... அவளுக்குப் பிரித்துப் பார்க்க தெரியவில்லை… அவன் பாடலில் குரலில் கரைந்து அவனின் காதல் நதியில் அப்படியே கலந்து விட்டாள் அந்த கடல் இளவரசி…
பொதுவாக கடலில் தான் நதி கலக்கும்… ஆனால் இங்கே அவனின் காதல் நதியில் கரைந்து காணாமல் போய்விட்டது கடல்…
அவன் பாடல் மனதோடு நிறைந்துவிட்ட சந்தோஷத்தில் அவள் அலுவலகத்திற்கு சென்று நிம்மதியுடன் வேலையை முடித்துவிட்டு மாலையில் வீடு திரும்பியவள் அவனுக்கு மிஸ்ட் கால் கொடுத்துவிட்டு அவளின் பரத நாட்டியத்தை தொடர்ந்தாள்...
அவனுக்கும் அவள் தகவலும் அவன் பணியமர்த்திய இருவர் தகவலும் வர நிம்மதியுடன் அன்றைய நாள் முடிந்த நிறைவுடன், அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்...
அவள் மாலை 5.30 மணிக்கெல்லாம் வீட்டிற்கு சென்றுவிடுவாள்... அதன் பின் வெளியே அவள் வந்ததில்லை.. அப்படியே அவள் வெளியே செல்வதானாலும், அது பெரும்பாலும் தினேஷ், காவ்யா, மயூரியுடன் தான்... அதும் இந்த மூன்று மாதங்களாக அவள் வெளியே சென்றதில்லை.. அவன் பணி அமர்த்திய ஆட்கள் இருவரும் இரவு 7 மணிக்கு கிளம்பிவிடுவார்கள்... மீண்டும் அதிகாலை 5 மணிக்கு வந்து தங்கள் பணியை தொடர்வார்கள்...
அன்றும் அவர்கள் அவ்வாறே 7 மணிக்கு கிளம்பி சென்ற பின், தான் வரைந்து வைத்திருந்த தன்னவனின் ஓவியத்தை பார்த்து ரசித்தவள், திடீரென என்ன நினைத்தாளோ, ஒரு புடவையை எடுத்து உடுத்தினாள்... அவருக்குப் பிடிக்கும் தானே புடவை... என்று மனதினுள் எண்ணியவாறு...
பரதம் ஆடிக்கொண்டிருந்தவளின் கண் முன், தனது அந்த அலங்கோல தோற்றம் வர, அப்படியே நிலை குலைந்தாள்.. ஏனோ அவனைப் பார்க்க வேண்டுமென்று தோன்ற, கோவிலுக்குச் சென்று வரலாம் என்று முடிவெடுத்தாள்...
இந்நேரம் போகிறோம் என்றால் யாரும் அனுமதிக்கமாட்டார்கள்... அதனால் சொல்லாமல் செல்லலாம் என்று முடிவெடுத்தவள் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டாள்...
அவள் மற்றவரிடம் சொல்லாமல் இருந்திருந்தாலும் அவளின் தர்ஷிடமாவது சொல்லியிருக்கலாம்... ஆனால் அவள் அவனுக்குத் தெரியப்படுத்த வேண்டுமென்ற எண்ணமே இல்லாமல் கோவிலுக்கு சிறிது நேரம் இருந்துவிட்டு, அவனை சந்தித்த நாள் முதல் இந்நாள் வரை நடந்த அத்தனையையும் அசைப்போட்டவாறு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தவளின் முன் ஒரு கார் வேகமாக மோதுவது போல் வந்து நின்றதில் மயங்கி சாலையில் சரிந்தாள் சாகரி....
அலுவலக வேலையைப் பார்த்துக்கொண்டிருந்த தினேஷிற்கு அந்நேரம் போன் வர... இந்த நேரத்தில் யார் என்று சுவரைப் பார்க்க, கடிகாரம் 9 மணி என்று காட்டியது... யாராக இருக்கும் என்றவன் செல்போனை எடுத்துப் பார்க்க, திரையில் ஒளிர்ந்தது சாகரி அழைக்கிறாள் என்று...
சட்டென்று எடுத்தவன், என்னம்மா... எதும் வேணுமா?... அங்கே வீட்டிற்கு வரணுமா? என்று கேட்க, அவளோ அண்ணா, நான் அப்பாவைப் பார்க்க ஊருக்கு கிளம்பிட்டேன்... கொஞ்ச நாள் அவங்களொட இருந்துட்டு வரேன்... வச்சிடுறேன்.... என்றபடி துண்டித்துவிட்டாள் அழைப்பை...
திரும்ப அவன் அழைத்த போது சுவிட்ச் ஆஃப் என்று வந்தது... சரி அப்பா-அம்மா நியாபகம் வந்திருக்கும்... கொஞ்ச நாள் இருந்துவிட்டு வரட்டும்... ஹ்ம்ம்... சின்னப்பொண்ணு தானே... என்றவாறு மயூரியிடமும் மனைவியிடமும் தகவல் சொன்னான் தினேஷ்...
மறுநாள் ஆதர்ஷிற்கு வழக்கம் போல் அவளிடம் இருந்து போன் வரவில்லை... அவன் காவலுக்கு வைத்திருந்த ஆட்களிடமிருந்தும் தகவல் வரவில்லை... என்னாயிற்று என்று யோசித்தவன் அவளின் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆஃப் என்று வர, சார்ஜ் இல்லாமல் இருக்கும் என்றெண்ணியவன் அடுத்து அந்த இருவரில் ஒருவருக்கு அழைத்த போது அவர்கள் அவள் வீட்டை விட்டு இன்னும் வெளியே வரவில்லை என்று கூறியதும் முகிலனின் அலுவலகத்திற்கு விரைந்தான்... அங்கே அவள் இல்லாது போக, தினேஷிற்கு போன் செய்தான்...
பொதுவான பேச்சு வார்த்தைக்குப் பின் சாகரி மொபைல் சுவிட்ச் ஆஃப்-ல் இருக்கு என்று இழுத்தவனிடம், அவ ஊருக்குப் போயிருக்கால்ல ஆதர்ஷ், அப்பா-அம்மா கூட இருக்கணும்னு ஆசைப்பட்டு போயிருக்கா... அதான் நானும் நாளைக்கு பேசிக்கலாம் என்று விட்டுட்டேன்... நீயும் நாளைக்கு பேசு சரியா?... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க... என்று சிரித்துவிட்டு இன்னைக்கு ஒரு நாள் தானே... என்றபடி போனை வைத்துவிட்டான்...
ஆதர்ஷிற்கு ஒன்றுமே புரியவில்லை.. சின்ன ஸ்டிக்கர் பொட்டு வாங்கினால் கூட தன்னிடம் சொல்லாமல் அவள் இருந்ததில்லையே... இன்று ஊருக்கு அதுவும் சொல்லாமல் எப்படி சென்றாள்???... என்று யோசித்தவன், சரி தினேஷ் சொன்னபடி நாளை வரை காத்திருக்கலாம் என்று முடிவெடுத்தான்... ஆனால் அது அவனுக்கு சுலபமாயில்லை... அந்த நாளை கடத்துவது பெரும் சங்கடமாய் இருந்தது ஆதர்ஷிற்கு...