“ஏய்...எனக்கே இப்பதான் மினு தெரியும்....”
அதற்குள் கவினும் வேரியும் இவர்களைப் பார்க்க....அப்புறம் என்ன ஒரே பாச களேபரம் தான்.
சற்று நேரத்தில் மிர்னா குளிக்க செல்ல வியன் கவின் அருகில் இருந்த வேரியிடம் வந்தான்.
“அண்ணி நீங்க ஒரு ஹெல்ப் பண்ணனும்...”
வியன் மிர்னா வருகையால் மிகவும் பூரித்து இருந்தாள் வேரி. ஏதோ ஒரு வகையில் தான் ஒதுக்கபடவில்லை என்ற உணர்வு.
வியன் அவளை வார்த்தைக்கு வார்த்தை அண்ணி அண்ணி என்று சொல்லிக் கொண்டு கவினையும் மிர்னாவையும் இவளிடம் கிண்டலடிக்க மிகவும் குளிர்ந்து போனது அவள் உள்ளம்.
இப்பொழுதும் அவளிடம் வந்து அவன் உதவி என்றதும்...தன்னால் முடிந்த எதையும் செய்ய தயாராயிருந்தாள் அவள்.
“அண்ணி எனக்கு புரிஞ்ச வரை உங்க ஹெல்த் இஷ்யூஸ் எதுவும் மிர்னாவுக்கு தெரியலை.... உங்க வீட்ல அதை எப்படி அவளுக்கு தெரியாம மெயின்டெய்ன் செய்தீங்கன்னு தெரியலை... ஆனா இப்போ அவளுக்கு தெரிய வேண்டாம்...இன்னும் ஷார்ட் பிரியட்ஸ்ல ஒலிம்பிக்ஸ் இருக்குது....அது முடியுற வரைக்கும் அவமனசை டிஸ்டர்ப் பண்ற எந்த விஷயமும் அவளுக்கு வேண்டாமே....ப்ளீஸ்....உங்கள அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும்...விஷயம் தெரிஞ்சா ரொம்ப வருத்தப் படுவா....”
கேட்டிருந்த வேரிக்கு மிர்னாவையும் வியனையும் இன்னுமாய் பிடித்தது. இவன் சொல்வதும் உண்மை தானே...உனக்கு கவினை பிடிக்கவில்லை என்றால் இப்பொழுதே வந்து கூட்டி போகிறேன் என்று இவளிடமே சொன்னாள் தானே மிர்னா.
இப்பொழுதும் தான் கவினுடன் மகிழ்ச்சியாய் இருப்பதை பார்த்த பின் தானே கவினிடம் பேசி இருக்கிறாள். வியனுக்கும் தான் மிர்னாவின் மீது எத்தனை அக்கறை. கவினைப் போல அவன் தம்பியும் தனக்கானவளை தங்க தட்டில் வைத்துதான் தாங்குகிறான்.
வியனின் கோரிக்கையை மகிழ்ச்சியாக ஏற்றாள் வேரி.
மறுநாள் வியனின் பிறந்த நாள். வெளியிலிருந்து யாரையும் அழைக்காமல் நால்வரும் மட்டுமாக கொண்டாடினால் போதும் என்றுவிட்டான் வியன்.
எளிமையாக ஆனால் மகா இன்பமாக சென்றது கொண்டாட்டம். ஒருவாரமும் ஓடி மறைய பல இன்பநினைவுகளை சுமந்து கொண்டு புத்துணர்ச்சியுடன் விடைகொடுத்துக் கொண்டனர் இரண்டு ஜோடிகளும்.
உண்மையில் அந்த ஒரு வாரமும் நால்வருக்குமே புது உற்சாகத்தை பிறப்பித்து இருந்தது.
மிர்னா விடை பெறும் போது வேரிக்கு அழுகை வந்தது. ஆனால் தூத்துகுடி விமான நிலையத்தில் வியனையும் மிர்னாவையும் வழி அனுப்பி விட்டு வீட்டிற்கு இவர்கள் திரும்பும் போது நீலாவும் மனோகரும் தங்கள் மூத்த மகன் மருமகளுக்காக கவினின் வீட்டு வரவேற்பறையில் காத்திருந்தார்கள்.
வியன் மிர்னா வரவால் வேரியிடம் ஏற்பட்ட புத்துணர்வையும் உற்சாகத்தையும் பார்த்த கவின் தன் பெற்றோரிடம் அவர்கள் தாத்தா பாட்டியாக போவதை சொல்ல, பறந்து வந்திருந்தனர் பெரியவர்கள்.
நீலாவும் மனோகரும் தாயாக இருக்கும் மருமகளை தாங்கிய விதத்தில் வேரிக்கு ஒதுக்கி வைக்க பட்டவள் என்ற அத்தனை காயமும் காணாமல் போனது. மனமும் கவினை நினைத்து குழம்பாமல் புலம்பாமல் இருந்தது. சுகநாட்கள்.
எல்லாம் அந்த மெயில் இவளுக்கு வரும் வரை தான்.
வேரிக்கு நெருங்கிய நட்பு என்று கூட யாரும் கிடையாது என்பதால் இ மெயில் எஃப் பி என எதிலும் ஈடுபாடு கிடையாது.
ஆனால் இப்பொழுது மிர்னாவுடன் தொடர்பில் இருக்க அது உதவும் என்று சொன்னார் நீலா. குறிப்பாக ஃபோட்டோக்கள் பகிர்ந்து கொள்ள உதவும் என்று மாமியார் சொல்லவும் ஒரு மெயில் ஐடி தனக்கென உண்டாக்கி ஒரு எஃப் பி அக்கவுண்ட் ம் தொடங்கிக் கொண்டாள் வேரி.
சில வாரங்கள் செல்ல வேரியின் எஃப் பி அக்கவ்ண்டிற்கு ஒரு மெசேஜ் வந்திருந்தது.
கவின் குடும்பத்திற்கு வேரியின் பாட்டி வேரிக்கு கொடுத்த நிலம் 40 ஏக்கர் மீது குறி. காரணம் அந்த நிலம் கவினின் எரிபொருள் தொழிற்சாலைக்கான நிலத்திற்கு அருகான நிலம். ஏதோ நில அளவை தவறுதலால் அந்த எரிபொருள் தொழிற்சாலையை இவளது இடத்தில் கட்டிவிட்டனர்.
பணி முடியும் தருவாயில் நடந்துவிட்ட தவறை உணர்ந்த கவின், அந்த இடத்தை தனதாக்க முயலுகிறான். குடும்பத்தின் மொத்த பொருளாதாரத்தை முதலீடு செய்து அந்த தொழிற்சாலையை கட்டி இருப்பதால், இப்பொழுது அதை வேரியின் இடத்திலிருந்து இடித்துவிட்டு, கவினின் இடத்தில் மாற்றி கட்டுவதற்கு கவின் குடும்பத்தினரிடம் பணம் இல்லை.
அதோடு அந்த எரிபொருள் தொழிற்சாலையை இப்பொழுது துவங்காவிட்டால் ஏற்படும் இழப்பு, அவர்களது பிற தொழில்களையும் கபளீரம் செய்து விடும். பேங்கரப்சி தான். ஆக அந்த 40 ஏக்கர் அவர்களுக்கு கட்டாய தேவை. அதற்காக அண்ணன் தம்பி, அம்மா அப்பா என அனைவரும் சதி செய்கின்றனர்.
இடத்தை விலைக்கு வாங்கிவிடலாம் என்றால் இத்தனை இக்கட்டில் அந்த நிலத்தை வாங்க முயல்கிறார்கள் என தெரிந்தால் மாலினி போன்ற பேராசைகாரர்கள் இவர்கள் மொத்த சொத்தையும் விலையாக கேட்பார்களே....
அதனால் திருமண வழியை தேர்ந்தெடுத்தனர்.
அந்த நிலம் மிர்னாவின் பெயரில் இருப்பதாக தவறாக புரிந்து கொண்டுதான் தங்கள் குடும்ப பொருளாதாரத்தை விட தாழ்ந்த பின்ணணி கொண்ட மிர்னாவுடன் கவினுக்கு திருமண ஏற்பாடு செய்தனர்.
மிர்னாவிற்கு இத்திருமணத்தில் விருப்பம் இல்லை என்பது அவர்களுக்கு தெரியும். ஆயினும் திருமணம் நடந்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
ஆனால் கடைசி நிமிடத்தில் உண்மை தெரிய வர, வியனைக் கொண்டு விருப்பமில்லாமல் இருந்த மிர்னாவிற்கு உதவுவது போல் அவளை கடத்திவிட்டு, வேரியை திருமணம் முடித்தனர்.
பண ஆசை கொண்ட மாலினி இப்படி ஒரு திட்டத்தை முன் வைப்பார் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு. மாலினி இதை கோராவிட்டாலும் அவர்களே இதைத்தான் செய்திருப்பார்கள்.
வேரியாக விரும்பி நிலத்தை எழுதி கொடுக்கும் வரை தான் வேரிக்கு அந்த வீட்டில் இடம். மறு நிமிடம் அவளுக்கு மிர்னாவின் கதை தான் ஏற்படும்.
மிர்னாவின் ஒலிம்பிக் கனவிற்காக வியன் கூடவே இருந்து உதவுவது வேரிக்கு நல்லெண்ணம் ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால் மட்டுமல்ல, சாட்சி இன்றி மிர்னாவை கொலை செய்ய வேண்டும் என்பதாலேயும் தான்.
பாட்டியின் சொத்தில் நாளை பேத்தி என்ற வகையில் மிர்னா உரிமை கோரி விடக் கூடாது மற்றும் மிர்னா விஷயத்தை கண்டுபிடித்துவிடவும் கூடும். அதனால் தான் வெளி நாட்டிலேயே மிர்னாவை கொலை செய்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் இது புரியாமல் மிர்னா வியனின் காதல் நாடகத்தில் ஏமாந்திருக்கிறாள். இதை எல்லாம் சொல்லி உங்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் எனக்கில்லை. உண்மையை ஒத்துக் கொள்கிறேன், வியனை பழி வாங்கி நடுத்தெருவில் நிறுத்தவே உனக்கும் உன் தங்கைக்கும் உதவ முன்வருகிறேன். புத்தி இருந்தால் பிழைத்துக் கொள்..
என்று சொன்னது அந்த செய்தி.
தொடரும்
{kunena_discuss:831}