(Reading time: 30 - 59 minutes)

ங்கல்யாவை காணமலே கிளம்பிச் சென்றுவிட்டான். மருத்துவமனையில் அம்மாவிற்கு ஒன்றுமில்லை வாயு பிடிப்புதான் என சொல்லிவிட்டப் போதும் எல்லாம் முடிந்து திரும்ப நேரமானது. இப்பொழுதும் அவளிடம் பேசிவிட வேண்டும் என தான் அவன் வந்ததே. அவன் மனதில் இன்னுமொரு ப்ரச்சனை வேறு ஓடிக் கொண்டிருந்தது.

ஒரு வேலைக்காரப் பெண் இவளிடம் வாயாடும் அளவில் தான் சங்கல்யாவின் நிலை இருக்கிறது அரணது வீட்டில். அரணும் சுகாவும் திரியேகன் அங்கிளும் இவளை நடத்துவது போல் வேலைக்காரர்கள் நடத்தப் போவதில்லை இவளை. அவர்களைப் பொறுத்தவரை இவள் இன்னொரு வேலையாளாக தெரிந்தால் ஆச்சர்யம் இல்லை.

ஏனெனில் யாருக்கும் அவள் கதை தெரியாதே. வேலைக் காரர்கள் என்னமும் நினைத்துவிட்டுப் போகட்டும், ஆனால் அவர்களது வார்த்தைகளுக்கு மத்தியில் இவள் ஒரு மாத காலம் தங்கும் போது இவளுக்கு எப்படி இருக்கும்? அவள் இந்த நிச்சயத்தை எண்ணி பயந்து அழுது கொண்டெல்லாம் இல்லை. ஆனால் திருமணம் செய்ய சம்மதிக்கும் மன நிலையிலும் அவள் இல்லை.

‘எப்டியும் திரும்பி வந்து அவளத்தான் கல்யாணம் பண்ணப் போற? அவளுக்கும் இந்த எங்கேஜ்மென்ட்ல எந்த அப்ஜெக்க்ஷனும் இல்லனா.... இதுல உனக்கென்ன ப்ரச்சனை?’

இந்த வார்த்தைகள் மனதில் ரீங்காரம். அவளைத் தேடி அரண் வீடு சென்றால், இந்த முறை அவளது அறையில் இருந்தாள் அவள். அங்கு சென்றான். கதவை தட்டும் போதே திறந்து கொண்டது அது. அதில் ஆச்சர்ய பட எதுவுமில்லைதான். ஆனால் அடுத்து அவன் காதில் விழுந்த வார்த்தைகள்

“இல்ல வேணாம்…ப்ளீஸ்…”

இந்த அவளது வார்த்தைகள் அவனுக்குள் இன்ஸ்டண்ட் அமைதியின்மையை கொண்டு வந்தது ‘யாரிடம் கெஞ்சுகிறாள் அவள்?’

சட்டென யோசிக்காமல் கதவை திறந்து கொண்டு உள்ளே போய்விட்டான் அவன்.

“வேணாம் எனக்கு யாரையும் பிடிக்க வேண்டாம்…….” தூக்கத்தில் மன்றாடிக் கொண்டிருந்தாள் அவள்.

இரவில் வெகு நேரம் தூங்காமல் இருந்ததிலும், காலையிலும் சீக்கிரம் விழிப்பு வந்துவிட்டதாலும் இப்படி பகலில் அவளே அறியாமல் தூங்கி இருந்தாள் அவள். அதனால் தான் கதவை கூட உட் தாழிடவில்லை. அப்படி ஒரு அமைதியின்மை, தவிப்பு அவள் முகத்தில். படுக்கையை நோக்கி என்ன செய்யவென தெரியாமலே நடந்தான் இவன்.

“ப்ளீஸ் வேணாம் …” இந்த முறை கெஞ்சலில் அத்தனை வலி தெரிந்தது.

அவளருகில் சென்றுவிட்டான்.

“எனக்கு கல்யாணம் வேண்டாம்….”

இவன் அவளை மனம் வலிக்கப் பார்த்தான். இவன் முடிவுகள் அவளை இப்படி பாடாய் படுத்துகிறதோ?

“அந்த பொறுக்கி மாதிரி தான் எல்லோரும்….”

இவன் அவளையே பார்த்தபடி நின்றான்.

“ஏமாத்தி விட்டுட்டுப் போய்டுவான்….”

‘இதுதான் பயமா?’ இவன் மனம் ஓட

“அந்த ஆளு அப்பா இல்ல பொறுக்கி”

அவள் தன் பெற்றொரைப் பற்றி எதுவும் சொன்னதில்லை. இப்பொழுது எதோ, ஒரு வேளை இதுதான் எல்லாமோ? புரிந்தது அவனுக்கு. எங்கேஞ்ச்மென்ட் நடக்கட்டும் என்ற முடிவுடன் தூங்குகிறவளை எழுப்பாமல் திரும்பி வந்துவிட்டான் அவன். உள் மனதில் இவன் மீது அவளுக்கு விருப்பம் இருக்கிறது ஆனால் அவள் பயம் அதற்கு அனுமதியோ சம்மதமோ தரப் போவதில்லை. அவளிடமிருந்தே அவளை காப்பாற்ற வேண்டிய நிலை இவனுக்கு. அதற்கு இந்த எங்கேஜ்மென்ட் ஹோல்ட் உதவும் என்பது அவனது எண்ணம்.

அவளுக்குத் தேவை ஆதாரப் பூர்வமான நம்பிக்கை. இவன் மீது அவளுக்கு ஒரு பிடி இருக்க வேண்டும். அதற்கான முதல் படியாக இது இருக்கட்டும். அதனால் தான் அவள் கண்ணீரைக் கண்ட பின்பும் அவன் நிச்சய விஷயத்தில் பின் வாங்கவில்லை.

ன்றைய நிலையில் அவள் இவனிடம் பேசும் மன நிலையில் இல்லை என்பதால் அன்று மொபைலை மட்டும் கையில் கொடுத்துவிட்டு திரும்பி இருந்தான். இன்று அவளைக் கண்டு பேச முயன்ற பொழுது இவனை வாய் திறக்க அனுமதிக்கவில்லை அவள். சரி அவள் இவனிடம் பேசும் நிலைக்கு வந்து கொள்ளட்டும் அதன் பின் பேசிக் கொள்ளலாம் என மனதை ஒருவாறு தேற்றிக் கொண்டு வந்து விட்டான்.

ஆனால் அவள் இவனை ஏர்போர்ட் வரை தேடி வந்துவிட்டாள். அது அவனுக்கு ஒரு நல்ல அறிகுறியாக தோன்றிய போதும், அவளிடம் இவன் கொஞ்சம் அதிகமாக தன் மனதை காண்பித்து விட்டதாக ஒரு சிறு உறுத்தல் அவனுக்கு. இவன் தேங்கஸ்டா விற்கு அவள் முகம் போன விதம் மனதில் நிற்கிறது. வேறன்ன தன்னை இன்னுமாய் இவனிடமிருந்து விலக்கிக் கொள்வாளோ என்ற பயம் தான்.

இவன் நெருங்குவதை உணர்ந்தால் அவள் இவனிடம் அதிகமாக விலகுவாள் என்பது அவனது புரிதல். இவனது கோபங்கள் அவளை இவனிடம் பாதுகாப்பாக உணர வைப்பதையும் அவன் கவனித்திருக்கிறான். ஆக இனி அவளிடம் கவனமாய் நடந்து கொள்ள  வேண்டும் என நினைத்திருந்தான். இப்பொழுதும் இந்த நேரத்தில் அரண் அழைக்கவும் ப்ரச்சனை பெரிதாய் நிச்சயமாய் அம்மா அல்லது  லியா சம்பந்தப்பட்டதாய் இருக்கும் என்று அறிந்துதான் பதற்றமாய் அவன் இணைப்பை ஏற்றதே. மற்ற எதற்காகவும் அரண் இப்படி போட்டிக்கு கிளம்பும் நேரத்தில் அழைக்க மாட்டான் என்பது இவனுக்கு உறுதி.

ஆனால் அரணே அவளை சந்தோஷமாக வழி அனுப்பி வை என சொல்லவும் ப்ரச்சனையை லியா இவனிடம் சொல்ல வேண்டாம் என்கிறான் என புரிந்துவிட்டதோடல்லாமல் சங்கல்யாவின் ப்ரச்சனை அரணால் சமாளிக்க முடிந்த அளவு விஷயம் தான் எனவும்  தெரிந்துவிட, ஒரு வகையில் நிம்மதி ஆனாலும் பின் அரண் ஏன் இவனை அழைத்தான் என்ற கேள்வி மனதில்.

அதுவும் இவன் இணைப்பை ஏற்ற பின் லியாவிடம் பேசக் கொடுக்கிறேன் என்றெல்லாம் சொல்லி மொபைலை கொடுக்காமல், அவள் எண்ணிலிருந்தும் அழைக்காமல், தன் எண்ணிலிருந்து அழைத்து லியாவிடம் பேசக் கொடுத்திருக்கிறான் என்றால்??? இவன் அரண் அழைப்பை ஏற்றதும் லியாவுக்காக இவன் பதறுவதுவான், அது அவளுக்கு தெரிய வேண்டும் என்றா? அப்படியெனில் இவன் மீது நம்பிக்கை இழந்து அவள் எதையோ பெரிதாக செய்து வைத்திருக்கிறாள்.

இந்த நிலையில் அவளது ஐ மிஸ் யூ……அப்படியானல்  அவள் மிகவும் உணர்ச்சி வசப்படும் படி ஏதோ நடந்திருக்கிறது. அதோடு நாளைக்கு என்ட்ட ஒன்டைம்மாவது பேசுங்க என்ற அவளது கெஞ்சல். ஆக தன் தப்பை உணர்ந்துமிருக்கிறாள் அவள். மீண்டுமாய் அரண் எண்ணை அழைத்தான்.

இதற்குள் மொபைலை அரணிடம் நீட்டி இருந்தாள் அவள். அழைப்பவர் பெயரைப் பார்த்துவிட்டு “அவன் தான் .. உன்ட்ட பேசத்தான் கூப்டுவான்” என்ற படி காரை விட்டு இறங்கிவிட்டான் அரண்.

“ ஜோ..ஜோனத்”

“ என்ன பேசிட்டு இருக்றப்ப காலை டிஸ்கனெக்ட் செய்துட்ட…?”

“அது….நீங்க பேசலைனதும்…”

“சரி என்ன விஷயம்னு இப்ப சொல்லு….”

“இல்ல நாளைக்கே சொல்றேன்…”

“ஆர் யூ ஷ்யூர்?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.