அடுத்த இரண்டு நாட்களில் சாரதாவின் பெற்றோர் வந்து அவளை அழைத்து சென்று விட்டனர் பிறந்த வீட்டிற்கு..அவர்களிடமும் ஆடித் தீர்த்து விட்டாள் ராஜம்..
"சொன்னது நினைவிருக்கோன்னோ.சாரதா உங்கப்பாவண்டை சொல்லி வை..திரும்பவும் பொண்ணுன்னு சேதி வரப்படாது நேக்கு..என்ன சம்பந்தி..அடுத்தது என் காதுல விழற சேதி என் பேரன் பொறந்தாங்கறதா மட்டும் தான் இருக்கனும்..புரிஞ்சிதா..இல்லாட்டி நீங்கோ திரும்பி வரவே வேண்டாம். இப்போ கூட்டிண்டு போங்கோ", என்று நிர்தாட்சன்யமாய் சொல்லி விட்டாள்.
துக்கம் தொண்டையடைக்க கிளம்பியவர்களை பார்த்து ஒரு வித குரூரத்துடன், "இன்னொன்னும் சொல்லிடறேன்..எம் பிள்ளை என்னை மீறிண்டு வர மாட்டான்.. அப்படியே அங்கே அவன் வந்து பார்த்தான்னு தெரிஞ்சுது..அவன் திரும்ப வரும் போது என் பொணம் தான் இருக்கும்.. புரிஞ்சிண்டு நடந்துப்பேள்னு நினைக்கறேன்", என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.
இரண்டு மாதங்கள் கழியும் முன்னர் ஓர் நாள் சாயங்கால வேளையில் வலி எடுத்தது சாரதாவுக்கு..அங்கேயே பக்கத்தில் உள்ள ஒரு பிரைவேட் ஹாஸ்பிடலில் அவளை சேர்த்தனர் அவள் பெற்றோர்..
அங்கே..
தனியறை கிடைக்காததால் ஒரு அறையில் இரண்டு நோயாளிகள் தங்கும் படியான செமி பிரைவேட் அறையில் இருந்தாள் சாரதா.. இன்னமும் முழுமையாய் வலி துவங்கியிருக்கவில்லை..
டாக்டர் வந்து பார்த்துவிட்டு வலி முழுமையாய் தொடங்கியதும் லேபர் ரூமுக்கு அழைத்து போகலாம் என்று சொல்லிவிட்டார்கள்.. பற்களை கடித்தபடி வலியை தாங்கிக் கொண்டிருந்தாள் சாரதா..
மனம் முழுதும் ஒரே பயம் அப்பிக் கிடந்தது.. மீண்டும் பெண்ணாகிவிட்டால்?..பெரிய கேள்விக்குறி அவள் முன்னே தோன்றியது.. பயத்தில் நெஞ்சம் படபடக்க படுத்திருந்தவளுக்கு தடுப்பின் அந்தப்பக்கத்திலிருந்து வந்த ஓயாத அழுகை மனதை பிசைந்தது.. யாராக இருக்கக் கூடும்?..என்ன பிரச்சனையோ என்றவாறு கண்மூடி படுத்தவள் வாய் வலியை மறக்க பாடத் துவங்கியது..
"நீ தயராதா..
காதெனவா ரெவரோ?
கல்யாண ராமா"
என்று வசந்த பைரவியில் ராமரை மீண்டும் இறைஞ்சத் தொடங்கினாள்.
{kunena_discuss:909}