“ஏய் செல்ல குட்டி நீ தூங்கிட்டு இருக்கன்னு நினச்சனே நீ விழிச்சுதான் படுத்திருக்கியா…… பாரு உன்னைப் பார்க்க யார் வந்திருக்கான்னு…..இதான் உங்க சித்தப்பா….” குழந்தையை கொஞ்சலாக சொல்லியபடி ஏந்தி வந்தவள் மிக கவனமாக அவனை மித்ரனிடமாக நீட்டினாள்.
அந்த நொடி மித்ரனின் முகத்தைப் பார்க்க வேண்டுமே…..ஆசையும் பூரிப்பும் சிறு பதற்றமுமாய்…… “ஹேய் மனு எனக்கு இவ்ளவு சின்ன பேபிய தூக்கிலாம் பழக்கம் இல்லை….” மறுப்பாய் வார்த்தைகள் வந்தாலும் குழந்தையை கையில் வாங்கிக் கொள்ள தேவையான அத்தனையையும் செய்தான்….
“ஹேண்ட் வாஷ் செய்யாம பேபிய தூக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்கல்ல…..” சொல்லியபடி இவள் வீட்டு டைனிங் ரூமிலிருந்த வாஷ்பேஷினில் சென்று லிக்விட் ஹேண்ட் வாஷினால் கை கழுவி…பார்த்து பார்த்து அங்கிருந்த டவலால் கை துடைத்துவிட்டு வந்து..…குழந்தைக்காக கை நீட்டினான்.
“தலையையும் உடம்பையும் சேர்த்து இப்டி ஒரு கை வைங்க….இங்க ஒரு கை…..நான் எப்டி தூக்கியிருக்கேன்னு பாருங்க இப்படியே தான்” ஒவ்வொன்றாய் சொல்லியபடி மெல்ல அவன் கையில் குழந்தையை கொடுத்த மனோவின் பார்வை பிள்ளையை கையில் வாங்குகிறவன் மீது சென்று பரவுகிறது..
மித்ரன் எதற்காகவும் தன் தோள்களை குறுக்கி இதுவரை மனோகரி பார்த்ததே இல்லை….நிதானமாய் நடந்தாலும் சரி….வேக நடை என்றாலும் சரி….ஒரு வித அலட்டலற்ற கம்பீரம் இருக்கும்….அத்தனை சூழ்நிலையும் அவனுக்கு அடங்கி இருக்கிறது என்பது போன்ற ஒரு அமைதியும் ஆளுமையும் அதில் இருக்கும்…..நிமிர்ந்து, விரிந்த தோள்கள் அதற்கு முக்கிய காரணமாய் இருக்கும்…..
இப்போது அவன் தோள்கள் குறுக்கி….படு பவ்யமாய்…. சிறு பதற்றமாய்…. முழு கவனமாய்….முகம் பரவி இருந்த களிப்புமாய் குழந்தையை கையில் வாங்கிய அந்த காட்சி…..ஏனோ இவனா குடும்பத்தை மதிக்காதவன் என்ற எண்ணத்தைக் கொண்டு வந்து சேர்க்கிறது அவளுக்கு…..
இவன்ட்ட அவன் வீட்ல உள்ளவங்க ஒழுங்கா நடந்திருந்தா கண்டிப்பா எல்லாமே ஒழுங்கா இருந்திருக்கும்…. இப்படியாய் இவள் மனம் சற்று இளக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவள்….. அதுவரை குழந்தை மீதே கண் வைத்திருந்த மித்ரன், விழி உயர்த்தி இவள் கண்களைப் பார்க்கவும் தான்…. தான் இமைக்காது, மறைக்காது அவனை அத்தனை அருகில் நின்று இப்படி விழுங்கப் போவது போல் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதையே உணர்கிறாள் இவள்.….
அவசரமாக அவனிடமிருந்து இவள் பார்வை விலக்கி, கண்களை குழந்தையின் மீது கொண்டுபோக….இவள் காதருகில் சொல்கிறான் அவன்… “மனு நம்ம நிறைய குழந்தைங்க வச்சுக்கனும் என்ன….? மினிமம் த்ரீ பேபிஸ்”
இப்போது இன்ஸ்டெண்டாய் மனோவுக்கு காதுவரை சிவந்து ஏறுகிறது. கண்டிப்பாக காதலினால் அல்ல…..வந்த கோபத்தினால்…. நிமிர்ந்து பார்த்து நீக்கமற முறைத்தாள் எதிரில் நின்றவனை.
“சரி சரி மூனுன்னு குறையா சொல்லிட்டேன்னு இவ்ளவு முறைக்காத…..நாம அப்றமா பேசி முடிவு பண்ணிப்போம்….” இவளை இன்னுமாய் சீண்டினான் அவன்…..
“அடு…”. இவள் பதிலுக்கு எகிற ஆரம்பித்த நேரம்…. “அண்ணி உன்ட்ட பேசனும்னு நின்னுட்டு இருக்காங்க பாரு…போய் பேசிட்டு சீக்ரமா வா…” என்று அவள் கவனத்தை கலைத்துப் போட்டான்.
அப்பொழுதுதான் உணர்ந்தவளாக மனோவும் விஜிலாவிடம் போனாள். கண்டிப்பாய் மித்ரனை இவள் அறிமுக படுத்திய விதமும், குழந்தையை எடுத்து வந்து அவன் கையில் கொடுத்த முறையும் விஜிலாவிற்கு ஒரு பதிலடி வாங்கிய உணர்வை கொண்டு வந்திருக்கும்…அடுத்தும் இவள் விஜிலாவிடம் பேசாமல் மித்ரனிடமே நின்றிருந்தால் விஜிலாவிற்கு மிகவும் மனம் வலிக்க கூடும்….இந்த வீட்டில் தங்க வேண்டாம் என அவள் நினைக்கும் படியாய் நேர்ந்துவிடும்…..
ஆக இப்போதைக்கு பார்வையால் பக்கத்தில் இருப்பவனை கழுவில் ஏற்றுவதை கைவிட்டு விஜிலாவிடம் பேசப் போனாள்.
“வாங்க விஜிலா மேல போய் பேசலாம்….” என்றபடி.
மாடியை அடையும் வரையும் இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை….மௌனம்.
விஜிலாவிற்கு இதற்கு மேல் தான் சொல்ல வந்ததை சொல்வதில் அர்த்தமே இல்லை என்றிருந்தது. காலையில் தான் மித்ரனைப் பத்தி அவ்வளவு சொல்லி இருக்கிறாள்……இதில் இதற்குள் வந்து இன்னும் ஒன் வீக்ல வெட்டிங்க்னு வீட்ல அத்தனை பேருமா முடிவு பண்ணிருக்காங்க……மனோவை இந்த மோசமான மேரேஜ்ல இருந்து காப்பாத்தனும்ன்றதுதான் விஜிலாவோட எண்ணம்… ஆதங்கம். அதைத் தான் மனோவிடம் சொல்ல அவள் கூப்பிட்டதே…..அந்த நேரத்தில் அவளிடம் ‘நீ மித்ரனை ஒழுங்கா நடத்து…என்ன இருந்தாலும் அவன் உன் சொந்தக்காரன்’ என்பது போல் மனோ நடந்து கொண்டபின்…. இப்போது அவள் என்ன பேசுவதாம்? என்ன செய்வதாம்? இனி இந்த வீட்டில் தங்குவது கூட தர்மசங்கடமாக படுகிறது.