'இன்னும் சரியா அரை மணி நேரம் தான்....... உங்க வீடியோ ரிலீஸ் ஆயிடும் , இன்னும் சரியா கால் மணி நேரம் தான்..... மேடையில் நடன நிகழ்ச்சி நடக்கும் போதெல்லாம் மேடையின் பின்னால் இருந்து அவரை கைப்பேசியில் அழைத்து சொல்லவும் தவறவில்லை ரிஷி.
ஒவ்வொரு நடிகர்கள் நடித்த திரைப்படங்களில் இருந்தும் காட்சிகள் திரையிடப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கபட்டுக்கொண்டிருந்தன. அடுத்து மேகலா மேடை ஏற வேண்டும்.
அடுத்ததா நம்ம மேகலா மேடம். சும்மா மேகலா அப்படின்னு சொன்னா எப்படி??? அவங்க என்னென்ன வேலை எல்லாம் செஞ்சு இருக்காங்க??? எவ்வளவு சாதனை எல்லாம் பண்ணி இருக்காங்க அப்படின்னு சொல்ல வேண்டாமா??? நான் அதை என் வாயாலே சொன்னா அவ்வளவு சுவாரஸ்யமா இருக்காது. அதனாலே அதை பத்தி ஒரு வீடியோ கிளிப்பிங் வெச்சிருக்கேன் அதை இப்போ பார்க்கலாமா??? ரிஷியின் குரல் மைக்கில் ஒலிக்க, கால்கள் நடு நடுங்க உடல் மொத்தமும் வியர்வையில் குளித்திருக்க மேடை ஏறினார் மேகலா......
அந்த நொடியில்..... சரியாக அந்த நொடியில்..... இங்கே மருத்துவமனையில்...... அவனை பழைய நினைவுகளில் இருந்து தரை இறக்கியது ஜானகி அம்மாவின் குரல்......
'ரி...ஷி... ரிஷி.... நீ என் பிள்ளைடா... ' பழைய நினைவுகளில் மூழ்கி கிடந்தவனுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லைதான். கொஞ்சம் அதிர்ச்சி கலந்த பார்வையுடன் அவன் அவரையே பார்த்திருக்க....
'ரிஷி நீ என் பிள்ளைடா' மறுபடியும் ஜானகி அம்மாவின் உலர்ந்த உதடுகள் தாண்டி ஒவ்வொரு வார்த்தையாக வந்து வெளியே விழ அதிர்ச்சி கடலில் மொத்தமாக விழுந்து எழுந்தான் ரிஷி. இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.
அதன் பின் சில நிமிட மௌனம் மட்டுமே நிலவியது .சில நொடிகள் மூச்சு கூட விட முடியவில்லை ரிஷியால். அவரையே பார்த்திருந்தான் கொஞ்ச நேரம். பின் ஒரு ஆழமான மூச்சுடன் தன்னை நிதான படுத்திக்கொண்டான்.
'சுய நினைவு இல்லாமல் தனது சொந்த மகனை நினைத்து புலம்பிக்கொண்டிருப்பாராக இருக்கும்.' அவன் தன்னைத்தானே சமாதான படுத்திக்கொண்ட நொடியில்
ரி....ஷி ......நீ நான் பெத்த பிள்ளைடா...' மறுபடியும் ஒரு திடுக்கிடல் அவனிடம் உயிர் வரை சென்று ஊசி போட்டன அவர் வார்த்தைகள்.
அதன் பிறகு சில நிமிடங்கள் அவரிடம் அசைவே இல்லை. இமை தட்ட வில்லை ரிஷி. நிஜமாகவே என்ன இது??? யோசித்தான் ரிஷி .கொஞ்ச நேரம் தலைக்குள் பிரளயம். தன்னை உரித்து வைத்திருக்கும் தீக்ஷா கண் முன்னே வந்து போனாள்.
உடல் மொத்தமும் குலுங்கும் உணர்வு. அவள் எனது வேர்களின் ஒரு பகுதியில் இருந்து உதித்தவளாக இருக்குமோ??? அப்படி என்றால்????
'இல்லை... இல்லவே இல்லை...' தனக்குதானே தலை அசைத்துக்கொண்டான் ரிஷி. 'நான் எதற்கு இப்படி எல்லாம் யோசிக்கிறேன்??? அதெல்லாம் எதுவும் இருக்காது. இவர் மயக்கத்தில் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்.' ஏற்றுக்கொள்ள முடியவில்லை தான் அவனால். தான் ராமன் சந்திரிக்காவின் மகன் இல்லை என்ற எண்ணத்தை கூட அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை தான்.
அது சற்றே பெரிய அறை. அதை ஒட்டி சின்னதாக இன்னொரு அறை. அங்கே உறங்கிக்கொண்டிருந்தாள் அருந்ததி. இவரின் புலம்பல் அவள் காதில் விழுந்திருக்க நியாயம் இல்லை.
'தீ...க்ஷா... பாட்டிகிட்டே வாம்மா...' ஜானகியிடமிருந்து வார்த்தைகள் எழ அவனுக்குள்ளே ஏதோ ஒன்று சட்டென முறிந்த உணர்வு. சஞ்சா எந்த ரகசியத்தை மூடி மூடி வைத்தானோ அது அவன் விமானம் ஏறிய சில மணி நேரங்களிலேயே மெல்ல திறந்துக்கொள்ள துவங்கி இருந்தது.
'ரிஷி பத்து வார்த்தைகள் பேசினால் அதில் ஒரு வார்த்தை 'அம்மா' வாக இருக்கும். அவளை பார்த்து ஐந்து நிமிடங்கள் தாண்டி விட்டால் போதும் மீண்டும் ஒரு முறை அவள் முக தரிசனம் வேண்டும். பள்ளிக்கு, கல்லூரிக்கு சென்றால் கூட வீட்டுக்கு வந்த இரண்டாவது நொடி அம்மாவின் மடியில் தஞ்சம் அடைவான் ரிஷி.' சந்திரிக்காவிடம் இப்படிதான் வளர்ந்தான் ரிஷி.
அதற்கு மேல் ராமன். அவர்தான் அவனுடைய மிகப்பெரிய பலம். அவனை சரியாக செதுக்கிய சிற்பி அவர். இருவருமே அவனது உயிரின் இரு பகுதிகள். இருவருமே அவனுக்கு சொந்தமில்லை என்றால்???
இருந்தாலும் இன்னமும் கொஞ்சம் நம்பிக்கை மிச்சம் இருந்தது அவனிடம்.. நான் சந்திரிக்காவின் வயிற்றில் பிறந்தவன் தான். இது ஏதோ தேவை அற்ற குழப்பம். தனது பர்ஸில் இருந்த அவர்கள் இருவரின் புகைப்படத்தை எடுத்து பார்த்துக்கொண்டான்.
'இதுதான் நிஜம். இதுதான் நிஜம்' சொல்லிக்கொண்டான் தனக்குள்ளே.