சரியாக அந்த நேரத்தில் ஜானகி அம்மாவிடம் கொஞ்சம் அசைவு. எல்லா கண்களும் அந்த பக்கம் திரும்பியது. சில நொடிகளில் மெதுவாக விழி திறந்தார் ஜானகி அம்மா. அந்த அறையில் இருந்த கடிகார முள் நகரும் சத்தத்தை தவிர வேறெந்த ஒலியும், ஏன் அசைவுமே கூட இல்லை.. உண்மைகளை அறிந்திருந்த நால்வரிடமும் இறுக்கமான மௌனம்.
அங்கே நிற்பவர்கள் யார் யாரென புரிந்துக்கொள்ளவே ஒரு நிமிடம் ஆனது ஜானகிக்கு. அடுத்த நொடி சடக்கென எழுந்து அமர முயல,
'பார்த்து மெதுவா...' அவருக்கு உதவி செய்தாள் மருமகள்.
எல்லாரும் எப்படி இங்கே வந்தார்கள்??? என்ன நடக்கிறது இங்கே??? புரியாத பார்வை தான் பார்த்தார் ஜானகி.
'ஜானகி... எப்படிம்மா... இருக்கே...' ------ இது அப்பா.. ஜானகி அம்மாவிடம் சின்ன தலை அசைப்பு. ரிஷியின் புருவங்கள் ஒரு முறை உயர்ந்து இறங்கின
'இவங்களை உங்களுக்கு முதலிலேயே தெரியுமா???' அப்பாவை பார்த்து நிதானமாக கேட்டான் ரிஷி.
'தெரியும்பா.... இவங்க நம்ம வீட்டிலே வேலை செஞ்சாங்க...' அவன் தோள் அணைத்தபடியே அப்பா மெதுவாக சொல்ல
'வேலை செஞ்சாங்களா???' அவனுக்குள்ளே உயிர் உடைந்தது. மெல்ல திரும்பி அப்பாவை பார்த்தான் ரிஷி. ஏனோ எல்லாமே சட்டென தூரமாக போய்விட்ட உணர்வு. அப்பாவின் அணைப்பே அந்நியமாக போய்விட்ட ஒரு உணர்வு.
'இவன் தான் ரிஷி தெரியும் இல்லையா...' அப்பாதான் ஜானகியை பார்த்து கேட்டார். இது தான் உன் மகன் என்ற செய்தி அதற்குள்ளே.
'தெ... ரியும். நான் இவர் படம் பார்த்திருக்கேன்.' உலர்ந்த உதடுகள் தாண்டி மெதுவாக வந்தன வார்த்தைகள். நான் அவனிடம் எந்த உண்மையையும் சொல்லவில்லை என்ற மறைவான பதில் அதனுள்ளே.
பேசவில்லை. பேசவே இல்லை சந்திரிக்கா. நாற்காலியில் சென்று அமர்ந்துக்கொண்டார் அவர். அடுத்த நொடி என்ன நடக்கும்??? என் சுவாசக்காற்று எப்போது என்னை விட்டு பிடுங்கப்படும்???? எதுவுமே புரியவில்லை !!!! என்ன தோன்றியதோ????? சட்டென நிமிர்ந்து..
'ரிஷி...நீ... வேணும்னா வீட்டுக்கு போயிட்டு ரெஸ்ட் எடேன் நாங்க இங்கே இருக்கோம்...' தனது சுவாசக்காற்றை தன்னோடு தக்க வைத்துக்கொள்ளும் கடைசி கட்ட முயற்சி அது. ரிஷி திரும்பி அம்மாவை ஒரு ஆழமான பார்வை பார்க்க...
'இல் ...ல... பா ' தலை வலி...க்கு...துன்னு சொன்.....னியே... அதான்...' உடைந்து உடைந்து தான் வெளிவந்தன வார்த்தைகள்.
'தலை வலிக்குதா??? நீங்க வீட்டுக்கு போங்க தம்பி. எனக்கு ஒண்ணும் இல்லை...' இது ஜானகி அம்மா.
'இறைவா இது நரகமடா இறைவா...' கைகளுக்குள் முகத்தை புதைத்துக்கொண்டு அமர்ந்தான் ரிஷி. இவை எல்லாவற்றையும் இமைக்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தது அந்த சின்னஞ்சிறு பிஞ்சு.
அந்த நொடியில்... சரியாக அந்த நொடியில் தட்டப்பட்டது அறையின் கதவு.. இங்கே அனைவரும் மாறி மாறி கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்க வாசலில் நின்றிருந்தது உண்மை. அதே நேரத்தில் அந்த மருத்துவமனையின் வாசலில் பத்திரிகையாளர்கள் கூட ஆரம்பித்திருந்தனர்.
1/2 episodes to go.
My dear friends. அடுத்த அத்தியாயத்துடன் மனதோர மழைச்சாரல் முடிக்க முயற்சி செய்யறேன். கொஞ்சம் open ends இருக்கு எல்லாத்தையும் ஒரே எபிசொட்லே சேர்த்திட்டேன்ன்னா முடிச்சிடுவேன். பார்க்கலாம். பையனுக்கு எக்ஸாம் அப்படிங்கறதுனாலே கொஞ்சம் அவசரமா எழுதின எபிசொட். எப்படி எழுதி இருக்கேன்னு தெரியலை. எல்லாரும் படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. Thanks a lot.
மழைச்சாரல் தொடரும்......
{kunena_discuss:886}