“ஐயோ! ஆத்திரத்தில் அறிவிழந்து என்ன செய்து விட்டேன் நான்”.
“அனிக்காமா, ஸாரிடா”..அலறியவனாய் அவள் கீழே விழும் முன் அவளைத் தாங்கிக் கொண்டான்.
விதிர் விதிர்த்து தூக்கத்தினின்று எழுந்து அமர்ந்தான் ரூபன்.மனதில் பதிந்துப் போன விஷயங்கள் தான் அடிக்கடி கனவுகளாய் வெளிப்படுமாம். அன்றையக் கனவு அது உண்மைதான் என்று அவனுக்கு மெய்ப்பிப்பது போலத் தோன்றியது. பெருமூச்சை வெளியேற்றியவனாக கனவின் தாக்கத்தில் வியர்த்து வழிய உட்கார்ந்திருந்தவனை அருகில் இருந்தவன் கவனித்துக் கொண்டிருந்தான். அவன் கைகள் ரூபனின் முதுகை ஆதூரமாய் வருடி விட்டன.
“தூங்குண்ணா, சும்மா அதையே நினைச்சுகிட்டு இருக்காதே எல்லாம் சரியாகிடும்” அவனை மறுபடி படுக்க வைக்க முயன்றான் ஜீவன். தம்பியை திரும்பிப் பார்த்தவன் அவனுடைய சொல்லுக்காக படுத்துக் கொண்டாலும் அவனால் அப்போது தூங்க இயலவில்லை எனவே விட்டத்தை வெறிக்க ஆரம்பித்தான்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல், நகைச்சுவை கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
ரூபன் யோசிச்சிட்டு இருக்கும் போதே கதையில் ஒரு திருப்பம், அது வேறு ஒண்ணுமில்லை சிறப்பு தோற்றமாக ஒரு செலிபிரட்டியோட என்ட்ரி.. ஹி ஹி அது வேறு யாருமில்லை நான்தான்.உங்களுக்கு கதையின் மற்ற கதா பாத்திரங்களை அறிமுகப் படுத்துவதற்காகவே வந்திருக்கிறேன்.
முதலில் ரூபன் ஃபேமிலியைப் பார்ப்போம். ரூபனின் பெற்றோர் ராஜ் & இந்திரா தம்பதிக்கு ஜாக்குலின், தீபன், ரூபன் & ஜீவன் என்று நான்கு குழந்தைகள், ராஜின் தங்கைதான் சாரா.
ராஜ் & சாராவின் குடும்பம் கிராமத்தில் செல்வ வளம் மிக்கவர்கள். தங்கள் பிள்ளைகளுடைய எதிர்காலம் , நல்லப் படிப்பை முன்னிட்டு தங்கள் நிலபுலன்களை குத்தகைக்கு விட்டு விட்டு அவர்கள் குடும்பம் நகரத்திற்கு குடியேறினர். அவர்கள் தந்தை அடிக்கடி ஊருக்குச் சென்று எல்லாவற்றையும் மேற்பார்வையிட்டு வந்தார். எதிர்பாராத விதமாக ராஜின் பள்ளியிறுதியின் போது அவர் இறந்து விட்டார். குடும்பத் தலைவரை இழந்த துன்பம் அவர்கள் குடும்பத்தின் மகிழ்வைக் குறைத்த போதும் அவர்களது குடும்பம் வளமையில் குறையற்று இருந்ததால் இருவரின் படிப்பும் தடைப் பெறாமல் நடந்தது, படிப்பை முடித்து ராஜ் ஒரு பன்னாட்டு அலுவலகத்தில் பணி புரிய ஆரம்பித்தார். சாராவின் படிப்பு முடிய சில வருடங்கள் இருந்ததால் தங்கையின் திருமணத்திற்காக காத்திருக்க வேண்டாம் உடனே திருமணம் செய்துக் கொள் என்ற அவரது தாயின் ஆலோசனைக்கேற்ப இந்திராவுடனான அவரது திருமணம் நடைப் பெற்றது.
அவர்கள் குடும்பம் மிகவும் அன்பான குடும்பம் ஆதலால் இந்திரா தன் மாமியார் நாத்தனாரிடம் முரண்பாடாக நடக்கும் விதமான சூழ்நிலை எப்போதும் ஏற்படவேயில்லை என்றே கூற வேண்டும். அதிலும், சாரா அவர்கள் மகள் ஜாக்குலினை மிகவும் கண்ணும் கருத்துமாக கவனிப்பதும், தனக்கு உதவி தேவைப் படும் போது தன் படிப்பையும் கூட ஒதுக்கி வைத்து விட்டு உதவுவதையும் பார்த்து நெகிழ்ந்துதான் போயிருந்தாள்.அவர்களுக்கிடயே அழகான நட்புறவு தோன்றியிருந்தது.
ஓரிரு வருடங்களில் சாராவின் படிப்பும் நிறைவு பெற அவளுக்கு ஏற்ற விதமான மணமகன் தேட ஆரம்பித்தார்கள். அவர்கள் எதிர்பார்ப்பிற்கேற்ற மணமகனாக அரசாங்க வேலையில் இருக்கும் தாமஸ் அமைந்து விட வெகு விமரிசையாக அவர்களுக்கு திருமணம் நடைப் பெற்றது. அதிலும் தங்கையின் வீடு ஐந்து நிமிடத் தொலைவிலேயே அமைந்து விட்டது குறித்து அவருக்கு மிகவும் நிறைவாக இருந்தது. சாராவுக்கு கிறிஸ் பிறந்த ஓரிரு வருடங்களிலேயே அவரது தாயும் மறைந்தார்.
கிறிஸ்ஸிற்கும் தீபனுக்கும் ஏறத்தாழ ஒரே வயது, ஒரே வகுப்பு. இரண்டு குடும்பங்களும் அருகருகே இருந்ததால் அவர்களுக்கிடையே உறவை விட நட்பே அதிகமாக காணப் பட்டது. இரண்டு குடும்பத்தினரும் அவர்களை உறவு முறைகளைச் சொல்லியே அழைக்க பழக்கியிருந்தார்கள். ஆனால், அவர்களுக்கிடையே எந்த வித விகல்பமான எண்ணமும் ஒரு போதும் அவர்கள் வர விட்டதில்லை.அத்தான் என்னும் அழைப்பிற்கும் அண்ணன் என்னும் அழைப்பிற்கும் அது ஒரு உறவு முறையைக் குறிக்கும் சொல் எனச் சொல்வதைத் தவிர வேறு எந்த அர்த்தமும் கற்பிக்கப் படவில்லை.
ஜீவன் பிறந்த ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு ராஜிற்கு அவர்களது அலுவலகத்திலிருந்து வெளி நாட்டுக் கிளை ஒன்றில் பணி புரியும் வாய்ப்பு வந்தது, ஆரம்பத்தில் தற்காலிகமாக ஒரு சில மாதங்களுக்காகச் சென்ற அவருக்கு அங்கேயே தங்கி பணி புரிய வாய்ப்புக் கிட்டியது. அவர் தன் மனைவி, குழந்தைகளை அங்கே கூட்டிச் செல்லும் வாய்ப்பு இல்லாததனால் முதலில் தயங்கினாலும் தான் அனைத்தையும் சமாளித்துக் கொள்வதாக மனைவிக் கொடுத்த தைரியத்தினாலும், தங்கையின் கணவர் தாமஸ் சாராவும், தாமும் அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வதாகவும் கூறியதன் காரணத்தினாலும், கூடவே தமது குடும்பத்திற்கான வருவாயைப் பெருக்கும் நல்லதொரு வழியாகத் தோன்றியதால் அந்த வாய்ப்பை விடாதுப் பற்றிக் கொண்டார்.
தம் குடும்பத்தின் நன்மைக்காக குடும்பத்தைப் பிரியும் தியாகம் நம் நாட்டில் பலபேரும் செய்யும் தியாகமல்லவா?. கணவனைப் பிரிந்து வீட்டை நிர்வகிக்கும் பெண்ணின் தியாகமும் அதற்கு இணையானதே.
கணவன் நின்றுச் செய்ய வேண்டிய பல செயல்களை அது வீடு கட்டுவதானாலும், பிள்ளைப் படிப்பிற்காக அலைவதானாலும் தான் ஒருவளாக சமாளிக்க வேண்டும். "உனக்கென்னம்மா வெளி நாட்டுச் சம்பாத்தியம்" என்றுப் பொருமும் சுற்றத்திற்கு தெரியுமா? அவள் ஒவ்வொன்றையும் யோசித்து யோசித்துச் செய்ய வேண்டிய சூழ்நிலை.
வெளி நாட்டிலிருந்து திரும்பும் போது கட்டாயமாக குடும்பத்தினர், தெரிந்தவர்களுக்காக வாங்கி வர வேண்டிய வாசனை திரவியம், வாட்ச், இத்தியாதி இத்தியாதி இன்னபிற பொருட்களில் அவர்கள் சேமிப்புக் கரைவதை பிறர் அறிவார்களா?
ஆண் பாலினர் யாருடனாவது பேசினால், சிரித்தால் இல்லை யாராவது வீட்டிற்கு வந்துச் சென்றால் கணவன் இல்லாத நேரத்தில் என்னச் செய்கிறாள் பார்த்தாயா? எனக் கதைக் கட்டி விடும் சுற்றத்திற்கு பயப் பட வேண்டும்... இப்படி எத்தனை எத்தனையோ?