எதையும் அளவாய் பேசியே பழகிய அவனுக்கு யாழினியின் மடைதிறந்த வெள்ளம் போன்ற பேச்சு எரிச்சலைத் தந்தது. அதனால் விட்டால் போதுமேன நினைத்தவன், கையில் இருந்த தனது விசிட்டிங் கார்ட்டை கொடுத்து ஏகவசனம் பேசி அங்கிருந்து நகர்ந்ததுமே, அவளிடம் தான் சொன்னதை மொத்தமாய் மறந்திருந்தான். ஆம், தற்பொழுது வேலை பரபரப்பில் அவன் யாழினியின் முகத்தை கூட சுத்தமாய் மறந்துவிட்டிருந்தான். ஆனால், “ அரை லூசு.. சோடாபொட்டி” என்று அவளுக்கு வைத்த பட்டப்பெயர் மட்டும் நினைவில் ஏதோ ஒரு ஓரத்தில் ஒட்டியிருந்தது.
ஒருவழியாய் மொத்த வேலையை முடித்துவிட்டு அவன் கிளம்பும்நேரம், நாளை அறுவை சிகிச்சை பெறவிருக்கும் சிறுவனின் பாட்டி தமிழை அணுகினார். அவரின் பேத்தியும், அச்சிறுவனின் அக்காவுமான “யமுனா” என்ற பெண் பெங்களூரில் இருப்பதாவும், இந்த அறுவை சிகிச்சையை பற்றி அவளுக்கும் கொஞ்சம் விவரம் கூற சொல்லியும் கேட்டார் அந்த பாட்டி. “ அவ்வளவு அக்கறை உள்ள அக்கா, இங்கயே வந்திருக்கலாமே!” என்று அவனுக்கு தோன்றினாலும், வயதில் முதிர்ந்தவர் தன்னிடம் கேட்கும்போது முடியாதென மறுக்கமுடியவில்லை அவனால்.!
மாலை மணி 5 ..! வீட்டிற்கு செல்லத் தயாராகிய தமிழ் தனது செல்ஃபோன் நம்பரை பாட்டியிடம் கொடுத்து உடனே தன்னை அழைக்கும்படி கூறிவிட்டு ஹாஸ்பிட்டல் வெளியே இருந்த பெஞ்சில் அமர்ந்தான். எவ்வளவு முக்கியமான விஷயமாக இருந்தாலும் காரோட்டிகொண்டே ஃபோன் பேச கூடாது என்பது “தமிழின் கோட்பாடுகளில்” ஒன்றாகும். அதே போல வேலை முடிந்து வீட்டிற்கு போன பிறகு முடிந்த அளவு செல்ஃபோனைத் தொடக்கூடாது என்பதுவும் அவனது கோட்பாடுகளில் அடங்கும்..இப்படி அவனின் வாழ்க்கைமுறைக்காக அவனே பல கோட்பாடுகளை வைத்துக்கொண்டான்.
“ அந்நியரோடு பேசும்போது அளவாக பேசவேண்டும்”
“ சத்தம் போட்டு சிரிக்கக்கூடாது”
“ இடம் பொருள் ஏவலுக்கு தோதாக உடை அணிந்து கொள்ளம்வேண்டும்”
“ தினமும் காரோட்டத் தொடங்கும்முன், அது பாதுகப்பாய் இருக்கிறதா என சரிப்பார்க்க வேண்டும்”
“ சரியான நேரத்தில் உணவு உண்டுவிட வேண்டும்”
“ பெண்களோடு பேசும்போது வார்த்தைகளில் மிகக் கவனமாய் இருக்க வேண்டும்”..இப்படி பற்பல விதிமுறைகளை தனக்குத்தானே போட்டுகொண்டு வாழ்பவன் தமிழ்.
அவனுக்கு எதிர்மாறானவள் யாழினி. “ யாதும் ஊரே யாவரும் கேளீர்..” “தன்னுயிர் போலவே மண்ணுயிரையும் நினை”என்பதுதான் அவளின் தாரக மந்திரம். அந்நியருடன் பேசி பழகுவதற்கு தயங்கவே மாட்டாள் அவள். தவறான நோக்கத்துடன் யாரேனும் அணுகி அவர்களை நம்பி ஏமாந்து விடுவோமோஎன்ற பயம் அவளுக்கு கடுகளவும் இல்லை..! ஏமாறினால் என்ன?அதுவும் அனுபவம் தானே என்று நினைத்துக் கொள்வாள். கண்முன் என்ன தவறு நடந்தாலும் அதற்கென நேரம்செலுத்தி அதை சீர்செய்யவோ, அல்லது அதற்காக கொஞ்சமாவது வருத்தப்பட்டால் தான் அவளுக்கு நிம்மதி..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சிவாஜிதாசனின் "அமேலியா" - சர்வதேச காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
இதோ இப்போதும் இன்று சந்தித்த சிடுமூஞ்சியை பற்றித்தான் நினைத்துகொண்டிருந்தாள். “ ஏன் இவ்வளவு வேகம் இவனுக்கு ? இவன் தினமும் இப்படித்தான் போவானோ ? இது எவ்வளவு ஆபத்துன்னு புரியாதா? படிச்சவன் மாதிரி இருந்தும் இந்த சிடுமூஞ்சிக்கு அறிவே இல்லையே”என்று நினைத்தவள் அவனுக்கு இலவச அறிவுரை கொடுப்பதற்காக தன்னை தயார் படுத்திகொண்டு அவன் நம்பருக்கு ஃபோன் போட்டாள்.
“ ஹலோ”, தனக்கே உரிய கணீர் குரலில் ஃபோனை எடுத்தான் தமிழ்.
“ஹலோ நான் யாழி” என்று அவள் பேசும்முன்னே தனது தந்தை அறைக்குள் நுழைவது போல அரவம் கேட்கவும் தனது பெயரை பாதியாய் சொல்லி இருந்தாள் அவள். யமுனாவுக்காக காத்திருந்த தமிழ் யாழினியின் பெயரை சரியாய் தப்பாக புரிந்து கொண்டு பேசினான்.
“ யெஸ்சொல்லுங்க..உங்களுக்கு என்ன கேட்கனும் ?” நேரடியாய் விஷயத்திற்கு வந்தான் தமிழ்.
“ என்ன கேட்கனுமா? நான் இவனை நாக்கை பிடுங்குற மாதிரி கேள்வி கேட்கபோறேன்னு தெரிஞ்சு வைத்திருக்கானே!”என்று நினைத்தவள்,
“ நான் ஃபோன் பண்ணுவேன்னு தெரிஞ்சு காத்திருந்திங்களா?வாவ்” என்றாள். அவள் குரலில் இருந்த துள்ளல் அவனுக்கு எரிச்சலாய் இருந்தது. “என்ன இப்படி அலட்சியமாய் பேசுறா.. இவளுக்காகவா காத்திருந்தோம்?” என்று வெகுண்டவன்,
“ ஹலோ, என் கிட்ட பேசனும்ன்னு நினைச்சுத்தானே நம்பர் வாங்குனிங்க?”
“நான் வாங்கினேனா? நீங்க தானே சார் கொடுத்தீங்க?”- யாழினி.
“ஓ பாட்டியிடம் கொடுத்ததை சொல்கிறாள்” என்று நினைத்தபடி “ சரி கேட்கவந்ததை கேளுங்க”
“ என்னிடம் திட்டு வாங்க இவ்வளவு ஆசையா சிடுமூஞ்சி” என்று நினைத்தப்படி
“ சார், நீங்க பண்ணுறது சரியா?” என்றாள்.
“ம்ம் .. இது என் தனிப்பட்ட முடிவில்லை மேடம்.. இன்னும் சில டாக்டர்ஸ்கிட்ட டிஸ்கஸ் பண்ணித்தான் இந்த முடிவு எடுத்தோம்”என்றான் அவன் அறுவை சிகிச்சையை நினைவில் வைத்துகொண்டு.