சாரதியும் ஒன்றுக்கு இரண்டுமுறை நல்ல நாளை சரிபார்த்து,இருவரின் ஜாதகமும் பொருந்தி வருகிற நட்சத்திர தினத்தை குறித்துக் கொடுக்க,அடுத்த இருபது நாளில் திருமணம் என்பது உறுதியானது.
நிச்சயதார்த்தம் எல்லாம் வேண்டாம் என்று யஸ்வந்த்தின் பெற்றோர்கள் சொல்லிவிட,அதற்கான ஏற்பாடு பண்ண வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று.
இவர்கள் பேசி முடித்திருக்கும் போது,அவந்திகா சமையலை முடித்திருந்தாள்.
சிம்பிளாக சாம்பார்,ரசம்,பொறியல்..கூடவே மாமியார் மாமனாரை ‘ஐஸ்’வைக்க அல்வா என்று நன்றாகவே சமைத்திருந்தாள்.
உணவை உண்ட பெரியவர்களின் பார்வையிலும்,அதற்கான பாராட்டுதல் தெரிந்தது.
குமார் அசைவப் பிரியர் என்பதால்,”அசைவம் செய்ய தெரியுமாமா..இல்ல சாப்பிடவே மாட்டியா..முன்னாடியே சொல்லிட்டா,நாங்க எல்லாரும் சைவத்துக்கே மாறிக்குவோம்”என்று உலகத்திலையே நல்ல மாமனாராக தன்னைக் காட்டிக்கொண்டார்.
“செய்ய தெரியும் மாமா..ஹாஸ்டல் பிரண்ட்ஸ்க்காக அடிக்கடி செய்வேன்.அப்போ அப்போ அத்தைக்கு தெரியாம,சாப்பிடறதும் உண்டு”என்று மல்லிகாவை பார்த்துக்கொண்டே சொல்ல,
“அடிக்கழுதை..எத்தனை நாளா இது நடக்குது”என்று தலையில் செல்லமாக கொட்டு வைக்க,
“சரண் தான் சாப்பிட வைச்சான் அத்தை”என்று வழக்கம் போல,அவனையும் கோர்த்துவிட,
“கூட்டுக்களவானிங்க! எல்லா விஷயத்திலையும் ஒண்ணாவே இருங்க.கல்யாணத்தில மட்டும்”என்று சொல்லிவிட்டு,பாதியில் நிறுத்த,யஸ்வந்தின் பெற்றோர்களுக்கு முன்பே இவர்களது விஷயம் தெரியும் என்பதால்,
“நாங்க எல்லா ஏற்பாடும் செய்துட்டு நாளைக்கே சொல்றோம்”என்று சொல்லிவிட்டு விடைபெற்றார்கள்.
சரண்-அவந்திகா திருமண பிரச்சனை எழுந்ததினால் தான்,திருமணத்தை இவ்வளவு சீக்கிரம் நடத்த தாமரை நினைத்தார்.
ஏற்கனவே திருமணம் தள்ளிப்போகிறது.இருந்து இருந்து இப்போது தான் ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது என்று கை காட்டியிருக்கிறான்.திடீரென்று காதலர்களுக்குள் சின்ன பிரச்சனை நடந்து,அவந்திகாவின் வீட்டில் அவசரமாக அவளுக்கு சரணுடன் திருமணத்தை வைத்துவிட்டால் என்ன செய்வது என்று தாமரை பயந்து போனார்.
“ஒரே ஒரு பையன பெத்துட்டு நான் படற கஷ்டம் இருக்கே..அய்யையய்யோ”சந்தானம் ஸ்டைலில் தாமரை புலம்பவும் தான் இந்த அவசர ஏற்பாட்டுக்கு குமார் சம்மதித்தார்.
யஸ்வந்த்திற்கு அவந்திகா தன்னுடன் இருந்தாலே போதும் என்ற மனநிலை.எல்லா விஷயத்திலும் அதிக தீவிரம் காட்டுபவன் தான்.அவளிடம் மட்டும்,தீவிரம் மறந்து,மற்ற நினைவுகள் மறந்து,அவள் மட்டுமே கண்ணுக்குள் நிற்கிறாள்.
அவன் தன்னை டேமேஜ் செய்வதற்கு அனுமதிப்பது அவனது குடும்பத்தை மட்டும் தான்.மற்றபடி அனைவரிடமுமே ‘கஞ்சி சட்டை’தான்.
இப்போது அவந்திகாவையும் தன்னுடைய குடும்பத்தில் ஒருத்தியாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டான் என்பதால் தான் அவள் அடிக்கடி நோஸ் கட் கொடுப்பதை ஆர்வமாகவே வரவேற்கிறான்.
திருமண நாள் குறித்துவிட்ட செய்தி கேட்டதிலிருந்து போனும் கையுமாக தான் அலைகிறான்.அவளையும் அலைய வைக்கிறான்.
‘இவருக்கு இப்படியெல்லாம் பேசத்தெரியுமா’என்று அவள் சிந்திக்கும் வகையில் அவனது பேச்சு இருந்தது.
காரணமே இல்லாமல் இருவருக்குள்ளும் எந்த தகவலும் பகிரப்படவில்லை.பேசுவதற்கென்று அவனுக்கு ஆயிரம் காரணம் இருந்தது.சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் ஆராய்ந்து அவளிடம் கேட்டுக்கொண்டான்.
அவளுக்குத்தான் இப்படியெல்லாம் தன்னை நோட்டமிட்டானா என்று வெட்கமாகிப் போனது.
அவன் என்னவோ,”சாதத்திற்கு உப்பு குறைவு..காப்பிக்கு சர்க்கரை அதிகம்”என்ற தினுசில் தான் கேட்டு வைப்பான்.அதிகமாக அதில் உள்ளர்த்தம் எல்லாம் பொதிந்து கிடக்காது.கேட்கும் பெண்ணவளுக்கு தான் எண்ணம் திசை மாறிப் போகும்.
“படிக்கற பொண்ணு மனசில கல்ல எறியாதடா யஷூ”என்று மகனை தாமரை கண்டிக்கும் அளவுக்கு போனையும் சேர்த்து சூடாக்கிக் கொண்டிருந்தான்.
இடையில் சரணையும் கடுப்பேற்றும் வேலையையும் செவ்வனே செய்தான்.அதன் விளைவாய் சரண் வீட்டுக்கே வந்து சண்டை போட்டான்.
“அவனவன் காதலிக்க ஆரம்பிச்சு ஒரு மாசம் கூட ஆகலை.கல்யாணத்துல வந்து நிக்கறான்..நான் நாலு வருஷமா லவ் பண்றேன்.வீட்டுல போய் பொண்ணு பார்க்கறதுக்கு கூட வழியக் காணோம்”என்று அவந்திகாவிடம் சண்டையிட,அவளுக்கும் பாவமாகத்தான் இருந்தது.