“கை கொடு மாப்ள! நல்ல செலக்ஷன்டா” என தனது உண்மையான மகிழ்ச்சியுடன் கூறினான் ப்ரனிஷ்.
“தேங்க்ஸ் மச்சான். எங்கே உனக்கு சொல்லாமல் இருந்ததற்கு கோபப்படுவாய் என்று நினைத்தேன்டா”
“உனக்கு அந்த பொண்ணுமேல வந்தது உண்மையான காதல் என்பது சமீபத்தில் தான் தெரிந்திருக்கும். அதனால் தான் இன்னைக்கு சொல்ற. அதானேடா?” எனக் கேட்டு சாதாரணமாக சிரித்தவனை வியப்புடன் பார்த்திருந்தான் யாதவ்.
உண்மையிலேயே யாதவ் இத்தனை நாட்கள் ப்ரனிஷிடம் தனது காதலைப் பற்றி உரைக்காததன் காரணம் இதுதானே. தனது மனதில் இருப்பதைப் புரிந்துகொள்பவர் கிடைப்பது எவ்வளவு அரியது? அத்தகைய பேறு தனக்குக் கிட்டியதை எண்ணிப் பெருமை பூத்தான் யாதவேந்திரன்.
“என்ன மச்சான் அப்படி பார்க்கற?” என நண்பனின் சிந்தனையை கலைத்தான் ப்ரனிஷ்.
“இப்படி ஒரு நண்பன் கிடைக்க நான் கொடுத்துவைத்து இருக்கனும்டா” என உணர்ந்து கூறினான் யாதவ்.
“யாருகிட்ட” எனக் கேட்டு நண்பனின் செல்ல அடியை வாங்கினான் ப்ரனிஷ். (சீரியசா பேசும்போது காமெடி பண்றதோ இல்லை பிளேட் போதுவதே வேலையா போச்சு)
“நாம அப்புறமா ‘முஸ்தஃபா முஸ்தஃபா’ன்னு பாடுவோம், இப்போ உன் ஆளைத் தேடுவோம்” என அடுக்குமொழியாகக் கூறி அந்த டீ-சர்ட்டில் இல்லாத காலரைத் தூக்கிவிட்டவனை இழுத்துக்கொண்டு அமிர்தாவையும் ப்ரியாவையும் பின்தொடர்ந்தான் யாதவ். (உனக்கு உன் கவலை)
அவர்கள் இருவரும் ஏறி இறங்கும் அனைத்துக் கடைகளிலும் இவர்களும் நுழைந்து பொருட்களை அவ்விருவரைப் போலவே வாங்கிக் குவித்தனர். (அவங்களே வீட்டுல சும்மா இருக்க முடியாம window shopping வந்திருக்காங்க. மூன்று மணி நேரமா மால்-ஐ சுற்றி இன்னும் ஒன்றுமே வாங்கவில்லை. இதில் அவர்களைப் பின்பற்றி இரு ஜீவன்கள்!)
அலைந்து திரிந்ததில் கலைத்துப் போய் அமிர்தாவும் ப்ரியாவும் சென்று சேர்ந்த இடம், அந்த மாலின் உள்ளேயே இருந்த ஒரு உணவகம். அவர்கள் பின்னாலேயே சென்று அங்கே தஞ்சமடைந்தனர் ப்ரனிஷும் யாதவும். நால்வரும் சென்றது மதிய நேரமாதலாலும் அன்று விடுமுறை தினமாதலாலும் ஒரே ஒரு மேசை மட்டுமே காலியாக இருந்தது. அதில் சென்று அமர்ந்தனர் பெண்கள் இருவரும்.
அதனைப் பார்த்த ப்ரனிஷ், “மச்சான், இதுதான் நல்ல சமயம். உன் ஆளுகிட்ட லவ்வ சொல்லிரு. பட், அதுக்கு முன்னாடி ஒன்று கேட்கனும். அந்த பொண்ணு யாரையும் காதலிக்கலை அல்லவா? எதுவும் ப்ராப்ளம் வருமா?” அப்படி இருந்திருந்தால் யாதவே வர்ஷினியைப் பற்றி கூறியிருக்க மாட்டான் என்றாலும், அறிந்துகொள்வது அவசியமாதலால் கேட்டான்.
“அமிர்தா இதுவரைக்கும் யாரையும் லவ் பண்ணல மச்சான். எனக்குத் தெரிந்து அவளிடம் இதுவரை யாரும் காதலை கூறியதும் கிடையாது. நான் அவளிடம் பேசத் தயார்; தனியாக இருந்தால் பேசலாம். இப்போது அவள் ஃபிரண்ட் கூட இருக்காங்களே” என மொழிந்தான் யாதவ்.
“அந்தப் பெண்ணை நான் பாத்துக்கறேன். பேர் என்ன”
“ப்ரியம்வதா டா. கொஞ்சம் டெம்பர் வரும்” எனப் பெயரோடு கொசுறு செய்தியும் தந்தான் யாதவ். வர்ஷினியின் தோழியைப் பற்றிகூட அறிந்து வைத்திருக்கும் யாதவை சந்தேகமாகப் பார்த்தான் ப்ரனிஷ்.
“அமிர்தா கூட தான்டா அந்த பொண்ணு எப்பவுமே இருப்பா. இதுவரைக்கும் இருவரையும் தனியே நான் கண்டதில்லை. ஒருதடவை அவங்ககிட்ட வம்பு பண்ணுன பையனை ரோட்லையே வைத்து அடிச்சுட்டா. எப்படியாவது அமிர்தாவை மட்டும் தனியாக சந்திக்கனும்” என்றான் யாதவ்.
‘ஓஓஓஓ…. இவன் லவ்வுல இவதான் கரடியா???? ஆனாலும், தைரியமான பெண்தான்’ என நினைத்துக்கொண்டே, “எவ்வளவோ பண்றோம், இதப்பண்ண மாட்டோமா? நான் அந்த பெண்ணை டைவேர்ட் செய்யறேன். நீ அந்த கேப்புல உன் ஆளுகிட்ட பேசிரு” எனக் கூறி அழைத்துச் சென்றான் யாதவை, அமிர்தாவும் ப்ரியாவும் இருந்த இடத்தை நோக்கி.
ப்ரியாவும் வர்ஷினியும் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து, “ஹாய்” என கோரஸாக பாடினர் ஆடவர் இருவரும் மகளிரை நோக்கி.
“யார் நீங்கள்?” என்பதே அவர்களுக்கு பதிலாக வந்தது, ப்ரியாவிடமிருந்து.
‘கஷ்டம்’ என நினைத்துக்கொண்டு, “எக்ஸ்க்யூஸ் மீ! வேறு எங்கேயும் இடம் இல்லை. நாங்க இங்கே உட்காரலாமா?” என இருவரையும் பார்த்து கேட்டான் ப்ரனிஷ்.
சுற்றியும் பார்த்து, அமர்வதற்கு வேறு இடம் ஏதும் இல்லை என அறிந்துகொண்டு தலையசைத்தனர் இருவரும். அதே நேரம் அந்த விடுதிப் பணியாளர் வரவே, தேவையானவற்றைக் கூறிவிட்டு அமைதியாக அமர்ந்தனர் நால்வரும். ஆனால் ப்ரியாவாவது அமைதி காப்பதாவது?