“சோ…. நீ வர்ஷினியின் பெஸ்ட் ஃப்ரெண்ட்டாக இருப்பதால், உன் ஃப்ரெண்டிடம் நான் சொல்வதை சொல்லிவிடு. என் ஃப்ரெண்ட் உன் ஃப்ரெண்ட் அமிர்தவர்ஷினியை எங்கேயோ பார்த்திருக்கான், அதிலிருந்து பித்து பிடித்து அலைகிறான். (இன்னும் பல நல்லவன், வல்லவன், நாளும் தெரிஞ்சவன் முதலானவற்றை சேர்த்து சொன்னான். அவை மிகவும் பெரியதாக இருப்பதால் சுருக்கமாக சொல்லிவிட்டேன்.) வர்ஷினியை மிகவும் பிடித்திருப்பதாக கூறுகிறான். உங்களுக்கும் பிடித்திருந்தால் உங்கள் முடிவை சொல்லுங்கள். நல்லா யோசிச்சு சொன்னா போதும். ஆனால் ஒன்று! என் ஃப்ரெண்ட்ன்னு சொல்லலை, உண்மையிலேயே ரொம்ப நல்லவங்க” என ஒரு வழியாக கூறிமுடித்தான் ப்ரனிஷ்.
ப்ரனிஷ் சொல்லியவற்றைக் கேட்டவுடன் ப்ரியாவின் மனதில் தோன்றிய முதல் எண்ணம், ‘இவன் மெண்டல் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி வந்த கேஸா? என்னென்னமோ உளருகிறான்? அதுவும் வர்ஷினியிடம் கூறவேண்டியதெல்லாம் என்னிடம் சொல்கிறான்?’
(உனக்கு என்ன தெரியும்? எங்கே வர்ஷினியிடம் மேலுள்ளவற்றை உன்னை அருகில் வைத்துக்கொண்டு சொல்லப்போக, நீ உடுக்கை இல்லாமலேயே ஆடினால்? உன் அடிதடியைத் தான் யாதவ் விளக்கிவிட்டாரே! அதனால் தான் உன்னை இப்படி ஆஃப் செய்துவிட்டார் ப்ரனிஷ். கூடவே கொஞ்சம் உளரி காமெடியும் செய்துவிட்டார். உங்களுக்குப் போய் பில்ட் அப் குடுத்துட்டேனே!!!)
“என்ன?” என்று குழப்பமாக கேட்டாள் ப்ரியா. அவளால் இன்னும் நம்ப முடியவில்லை. இப்படி யாராவது காதலை உரைப்பார்களா?
“நான் சொன்னது எல்லாமே உண்மை. வாழ்வில் முதல்முறையாக இவன் ஒரு பெண்ணிடம் தன் மனதை பறிகொடுத்தான், ஏரெடுத்துப் பார்த்தான் என்றால் அது வர்ஷினி மட்டுமே. I know him for years and I can guarantee you about him.”
ப்ரனிஷின் முகத்திலிருந்து தன் பார்வையைப் பிரித்து வர்ஷினியை ஏறிட்டாள் ப்ரியா. கண்டவுடன் காதலில் விருப்பம் இல்லாதவள் ப்ரியா. வர்ஷினியோ, காதலிலேயே பிடிப்பு இல்லாதவள். அது ஏனோ, இன்று வரை காதலிப்பதைப் பற்றி அவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை.
யாதவ் பார்ப்பதற்கு நல்லவனாகத் தெரிந்தாலும், இதில் முடிவு செய்ய வேண்டியவள் வர்ஷினியல்லவா? மற்ற இருவரும் கூட வர்ஷினியைத் தான் பார்த்துக்கொண்டிருந்தனர்.
ப்ரனிஷுக்கு இனி ப்ரியா ஒன்றும் சொல்லமாட்டாள் எனப் புரிந்து போனது, இதுவரை இருந்துவந்த பதட்டத்தைப் போக்கி சிறு நிம்மதியையும் தந்தது. அவனிடம் இருந்த பயமும் பதட்டமும் லாங் ஜம்ப் செய்து யாதவிடம் தஞ்சம் புகுந்தன.
வர்ஷினியின் முகத்தில் திகைப்பு, பயம், குழப்பம் என பலவகையான உணர்ச்சிகள் தோன்றின. சிறிது நேரம் அமைதியாக இருந்த வர்ஷினி எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.
வர்ஷினி வெளியேறத் தொடங்கியவுடன் அவளைப் பின்தொடரப் போன ப்ரியாவை வழிமறித்து சிறை பிடித்திருந்தான் ப்ரனிஷ். யாதவை வர்ஷினியிடம் போகமாறு சைகை செய்துவிட்டு ப்ரியாவிடம் திரும்பினான்.
“என்னை விடுங்க. நான் போகனும்” (‘ஆத்தா வையும். வீட்டுக்கு போகனும்’ டோன்லயே வருது. சப்பானி ரசிகையாம்மா நீ?)
“போகலாம். அதற்கு முன் என் ஃப்ரெண்ட் உன் ஃப்ரெண்ட் கிட்ட பேசிட்டு வரட்டும். நாம் எல்லோரும் சேர்ந்தே போகலாம்”
ப்ரியா இவனை மீறி செல்ல முயற்சி செய்து பார்த்து தோற்றுப்போயிருந்தாள். வந்து அமரும்பொழுது அருமையாக இருந்த அந்த ஒதுக்குப்புறமான ஒரே வழி உள்ள இடம் இப்போது சிறையாகத் தெரிந்தது அவளுக்கு. குரல் கொடுத்து யாரையேனும் அழைக்கப் பார்த்தால், யாருமே அந்தப் பரந்த உணவகத்தில் அவர்களது அருகில் இல்லை. அந்த மேசை அமைந்துள்ள அமைப்பானது அவர்கள் இருவரையும் பார்ப்பதற்கான வாய்ப்பையும் முழுமையாக அடைத்திருந்தது. வேறு வழியில்லாமல் இதழ் அவிழ்த்து ப்ரனிஷிடமே மீண்டும் கேட்டாள்.
“வழி விடுங்க. இது எல்லாம் நல்லா யோசிச்சு முடிவு செய்கிற விஷயம். இன்னைக்குத் தான் நாங்க அவரைப் பார்த்திருக்கோம். வர்ஷினியும் கொஞ்சம் யோசிக்கட்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம்” எனப் ப்ரியா ப்ரனிஷிடம் தன்மையாகக் கூறினாள். என்னதான் முதலில் கோபப்பட்டாலும், ப்ரனிஷ் உரைத்த கண்ணியமான விதம், யாதவின் நன்னடத்தை, இவை யாவும் ப்ரியாவுக்குப் பிடித்தே இருந்தது.
ப்ரியாவின் கூற்றும் ப்ரனிஷிற்குப் புரிந்தது. யாதவ் பல நாட்களாக வர்ஷினியை அறிந்திருந்தாலும், வர்ஷினி அவனை அறிவாள் என்பது போல எந்த அறிகுறியும் அவள் முகத்தில் தெரியவில்லையே!
“நீங்க சொல்வதும் சரிதான். ஆனால் யாதவ் உங்க ஃப்ரெண்டிடம் பேச வேண்டும். அதனால், நாம் தொலைவிலேயே இருந்து அவர்களைப் பேச விடுவோம்” எனக் கூறினான்.
ப்ரியாவுக்கும் ப்ரனிஷ் கூறியது சரியெனப் பட்டதாலும், அவனது வார்த்தைகளின் மேல் உள்ள நம்பிக்கையால் தலையசைத்து அவனுடன் நடந்தாள், வர்ஷினியும் யாதவும் சென்ற திசையை நோக்கி. (அடடா….. இப்போவே நம்பிக்கை… நடத்துங்க)
வர்ஷினி அந்த உணவு விடுதியின் எதிரே இருந்த இடத்தில் நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தாள். உள்ளேயே இருந்தால் எதுவும் யோசிக்க முடியாது என்று தோன்றியது அவளுக்கு. தனிமையில் அமர்ந்து சிந்திக்கும்போது தான் சில விஷயங்களை தெளிவுடன் சிந்திக்க முடியும் அல்லவா?