அது மட்டும் அங்குமிங்கும் துள்ளிக் குதித்து ஏதேதோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
அடுத்தாற்போல் பெரிய முயல் குட்டிகளுக்கு விலங்குகளைப் பற்றிக் கூறியது.
இதோ இந்தச் சிறிய அடிச்சுவடுகள் அணிலின் சுவடுகள். கீறல் கீறலாக இருக்கும் இந்தச் சுவடுகள் காட்டுக் கோழிச் சுவடுகள். கலைமான்களின் சுவடுகளைப் பார்த்தீர்களா? பெரியவை. கலைமான்களும் பெரியவைதான். ஆனால் நமக்கு அவற்றால் துன்பமில்லை. குள்ள நரிகள் ஓநாய்கள் நமக்குத் துன்பம் தருபவை. ஏன் நம்மையே உண்டு வாழ்பவை. அவற்றின் சுவடுகளை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள். அவை சென்ற பாதையில் கூடச் செல்லக் கூடாது.
மூன்று முயல் குட்டிகளும் தாய் சொன்ன அந்தச் செய்திகளை நன்றாகக் கவனித்து மனத்தில் இருத்திக் கொண்டன. ஓநாய்கள், நரிகள் வாழக் கூடிய இடங்கள், அவை கையாளும் போர்த் தந்திரங்கள், மற்ற விலங்குகளை அவை வேட்டையாடும் முறைகள், உணவாகக் கொள்ளும் வழக்கம் எல்லாவற்றையும் விரிவாகக் கேட்டுத் தெரிந்து கொண்டன.
நான்காவது முயல் குட்டியோ, எந்தக் கவலையும் இல்லாமல் வெட்டுக் கிளிகளை விரட்டி விரட்டி விளையாடிக் கொண்டிருந்தது.
நாள்தோறும் தாயின் சொல்லைக் கவனித்துக் கேட்டுக் கட்டுப்பாட்டோடு வளர்ந்த முயல் குட்டிகள் பெரிதாக வளர்ந்தன. நான்காவது குட்டியும் பெரிதாகி விட்டது.
இனிமேல் நீங்கள் விருப்பம் போல் காட்டுக்குள் போய் வரலாம். என் துணை வேண்டியதில்லை. இனிமேல் நீங்களே உங்களைப் பாதுகாத்துக் கொண்டு வாழுங்கள்! என்று கூறி அவற்றைத் தனி வாழ்க்கை நடத்த அனுப்பியது