குழந்தைகள் சிறப்பு சிறுகதை - பச்சைக்கிளி பவழம் - நாரா நாச்சியப்பன்
கண்ணப்பன் தொலைவில் உள்ள ஓர் ஊருக்குச் சென்றிருந்தார்.
அந்த ஊரின் பெயர் ஆலங்காடு. பெயர்தான் காடு என்று உள்ளது. உண்மையில் அந்த ஊர் ஒரு பெரிய நகரம்.
தான் சென்ற வேலை முடிந்து ஊர்த் தெரு வழியாகப் போய்க் கொண்டிருந்தபோது, "அய்யா வாங்க! அய்யா வாங்க என்று யாரோ அழைப்பது கேட்டுத் திரும்பினார். யாரையும் ஆட்களைக் காணவில்லை.
மறுபடி திரும்பி நடந்தார்.
”அய்யா வாங்க ! அய்யா வாங்க” என்று ஒரு மழலைக் கீச்சுக் குரல் கேட்டது.
கேட்ட திசையை உற்றுப் பார்த்தார்.
ஆம், அவரை அழைத்தது ஒரு பச்சைக் கிளி.
ஒரு கடையில் தொங்கிய கூட்டுக்குள் இருந்த பச்சைக் கிளி தான் அப்படி அழைத்தது.
கண்ணப்பர் அந்தக் கடைக்குச் சென்றார். அந்தக் கடையில், பச்சைக் கிளி, மைனா, சிட்டுக் குருவி , மயில், புறா, கொக்கு போன்ற பறவைகளும், மான், முயல், நாய், பூனை, ஆடு, வெள்ளெலி போன்ற சிறு விலங்குகளும் விற்பனை செய்யும் கடை யாக இருப்பதைக் கண்டார்.
கடைக்காரர் "அய்யா அந்தக் கிளி உங்களுக்கு வேண்டுமா? நூறு ரூபாய்தான் ! மிக மலிவான விலை. வாங்கிக் கொண்டு செல்லுங்கள்'' என்றார்.
கண்ணப்பர் மகள் இன்பவல்லி ஐந்தாம் வகுப்புப் படிக்கும் சிறு பெண்.