தொண்டன் திரைப்படம் - ஒரு பார்வை
வணக்கம் நண்பர்களே! ரொம்ப நாளைக்கு அப்புறம் மனதில் பதிவது மாதிரியாக ஒரு படம் பார்த்தேன்.உங்களிடம் நான் பார்த்த கோணத்தில், அப்படத்தைப் பற்றி பல வார்த்தைகள் அல்லது சில வரிகள்...
இது விமர்சனம் என்று சொல்லிவிட முடியாது,ஏனெனில் விமர்ச்சிப்பவர் நடுநிலையில் இருந்து செயல்பட வேண்டும்.நான் நடுநிலையில் இருப்பதாய் எனக்கு தோன்றவில்லை அதனால் இப்பதிவை நீங்கள் ஒரு பார்வையாளரின் கருத்தாய் பாருங்கள்.
படம்: தொண்டன்
இதில் நடித்தவர்கள் மற்றும் அவர்களின் நடிப்புத் திறனைப் பற்றி சொல்லப் போவதில்லை.ஒவ்வொருவரும் திரைப்படத்தைப் பலவகையான காரணத்திற்குப் பார்க்கப் பிடிக்கும்.உதாரணமாக நடிகர்களின் நடிப்புத்திறன், காட்சியமைப்பு ,இசை, சில கட்டத்தில் மட்டும் வரும் காட்சி என்று அவை நீண்டு போகும். நான் கதைக்காகத் திரைப்படம் பார்ப்பவள்.பெரும்பான்மையாக கதைப் பிடித்தால் மட்டுமே எனக்கு அத்திரைப்படம் பிடிக்கும் ( இதற்குத்தான் சொன்னேன் நான் நடுநிலையில் இல்லையென்று)
தலைப்பு இப்படத்திற்கு மிகவும் பொருந்தியுள்ளது.இப்படம் சாதாரண மனிதனின் வாழ்க்கையை மையப்படுத்தி போகிறது.நம் அனைவரிடமும் உலவும் ஒரு சொற்றொடர்,”தனிமனிதனால் என்ன செய்ய முடியும்?” ஏன் முடியாது,நாம் மனம் வைத்தால் முடியும் என்று கதையின் முக்கிய கதாப்பாத்திரம் கூறுகிறது.இப்படம் பல சமுக அவலங்களை சாடுகிறது.
எனக்கு பிடித்த இடங்களைப் பட்டியலிடுகிறேன்.
- 1.தங்கைக்குத் தொல்லைக் கொடுப்பவனை,நேர் மனிதனாக மாற்றும் இடமும் அவனை வழிப்படுத்தும் இடமும் புதிதாய் இருந்தது.
- 2.ஆம்புலன்ஸ் ஓட்டும் நபர்களை, நாம் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. இப்படம் பார்க்கும்போது உங்கள் மனதில் அவர்களுக்கு ஒரு இடம் கிடைக்கும்.
- 3.தன் தோழியை ஒருவன் காயப்படுத்த,அதற்கு பதிலடியாய் அனைத்து மாணவிகளும் திரண்டு அக்கயவனைக் காயப்படுத்தும் இடம் அருமை. எப்பொழுதும் ஒருவன் பொதுஇடத்திலோ அல்லது மக்கள் அதிகம் உள்ள இடத்தில் தப்பு செய்யும்போது அமைதியாய் இருப்பதுப்போல் காட்டி மனிதனின் மனித தன்மையை அழிக்கும் இடமாய் இல்லாமல், அனைவருக்கும் உள்ள கடமையைக் காட்டுகிறது.
- 4.ஜாதியை மையப்படுத்தி வாக்கிடும் முறையினை பற்றி முக்கிய கதாப்பாத்திரம் பேசும் இடம் அருமை.அவ்விடத்தில் தமிழகத்தின் தற்போதையப் பிரச்சினைகள் சொல்லப்படுகின்றன.
- 5.மேலே சொன்ன அதே இடத்தில் பலவகையான மாடுகளின் பெயர்கள் பட்டியலிடப்படுகின்றன,கேட்கும் பொழுது ஒருசேர நமக்கு ஆச்சரியமும் வருத்தமும் ஏற்படும்.
இவை எனக்குப் பிடித்த இடங்கள், இதைத் தாண்டியும் பல நல்ல விஷயங்கள் சொல்லப்படுகின்றன.
சில இடங்களில் நடிப்புத்திறன் இயல்பாய் இல்லாத மாதிரி இருக்கும். மற்ற திரைப்படங்கள் போல் இதிலும் குறைகள் உள்ளன.ஆனால் குறைகளை விட சமுகத்திற்குத் தேவையான நிறைகள் இதில் பல உள்ளன.
இப்படத்தைப் பார்க்கும்போது நமக்கு தோன்றலாம், இவையெல்லாம் திரைப்படத்திற்குத்தான் பொருந்தும்,நடமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராது என்றெல்லாம். ஆனால், திரைப்படத்தில் வருகின்ற நடைமுறை வாழ்க்கைக்கு சரியில்லாத பலதையும் நம் மக்கள் பின்பற்றும் பொழுது இதையும் பின்பற்றலாமே!
{kunena_discuss:943}