கவிதை - நம் கூடு - ராஜலக்ஷ்மி
உன்னோடு நான் வாழும் இடம்
வீடு அல்ல...
நம் அன்பெனும் இழைகளால் பின்னபெற்ற சிறு
கூடு அது ...
ஆளில்லா பெருங்காட்டில்
அழகான சிறு கூடு
அது ...
அதில் ,
மலர் மகள் தன் மகரந்தத்தால்
மணம் பரப்புவாள். . .
வானவில் நண்பனிடம் வண்ணங்களை
கடன் வாங்கி
வண்ணத்துப் பூச்சிகள் தம் சிறகுகளால்
நிறம் சேர்க்கும். . .
மின்சார தட்டுப்பாடு அறவே இல்லை
மின்மினி பூச்சிகளேனும்
விளக்குகள் உண்டாம். . .
மழை நீர்த் துளிகளிலே நம்
தாகம் தீர்ப்போம்
மனிதர்களின் நாசியையே சந்தித்திரா
மாசற்ற காற்றினையே
சுவாசித்திருப்போம்
மலையன்னையின் மடியினிலே
மூலிகைக் குளியல்
மறவாமல் தலை துவட்டுவாள்
தென்றலும் மெல்ல
சிட்டுக்குருவிகளோடு சேர்ந்து
சிறகுலர்த்திடுவோம்
தேனீக்கள் நம் பசியாற்றும்
சிப்பந்திகளாம் - அவற்றின்
ரீங்கார இசையோடு
இரவுறக்கமாம்
பொருள் தேடல், புகழ் கூட்டல்
இனி தேவையில்லை
இயந்திர வாழ்வின் சிறு சுவடும்
இங்கு நமக்கில்லை
இயற்கையோடு இயைந்த நம் புது வாழ்வில்
இறப்பென்பது இனி எப்போதும் இல்லை. . .