மணநாள் - முத்துலெட்சுமி
நெற்றியின் தசைகளை கிழித்து
துருத்தி நிற்கிறது
ஒன்றிரண்டு பருக்கள்,
என் கேள்விகளுக்கு வேனலென
பொய் உரைகிறாயே
எனக்கா தெரியாது?
நம்மிடை மலர்ந்த
காதலின் அறிகுறி அதுவென்று.
எனை விலகி நடப்பதாய்
அர்த்தங்கள் செய்துகொண்டு
விழிபாராமல் கடந்து செல்கிறாய்,
எனக்கா தெரியாது
உன் உணர்வு மெய்
முழுவதும் எனை சுற்றுகின்றதென்று.
என் விழி தீண்டலில்
திண்டாடி நிற்கும்
உன் மௌன மொழி
உரைகாமல் உரைகின்றது
என்மீதான உன் காதலை.
ஒரு கணம் என் காதல்
உரைத்து
உன் வளைக்கரம் பற்றி
என் விரல்களுக்குள்
புதைத்து கொள்ள விரும்புகிறேன்,
மறுகணம் சொல்லவும் தயங்கி
மறைக்கவும் மருகி
மயங்கிநிற்கும் உன் ஏக்கம்
காண விழைகிறேன்.
புன்னகையில் மலர்ந்து
தோழமை திருடி
இதயத்தில் கனிந்துவிட்ட
நம் காதல்
முடிவு செய்யட்டுமே
என்று நம் மணநாள் என்று!
{kunena_discuss:779}