நந்தன் மருத்துவமனை வழக்கம் போல் அன்றும் மிகுந்த பரபரப்புடன் தன் இயக்கத்தை தொடங்கியிருந்தது. பிரசவ அறையில் அனுமதிக்கப்பட்டிருந்த 20 வயது பெண் வானதி வலியால் துடித்துக்கொண்டிருந்தாள். அறை வாயிலில் வானதி நன்முறையில் மகவை ஈன்றிட வேண்டுதல் விடுத்துக்கொண்டிருந்தாள் கிருஷ்ணப்ரியா.
விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்று பயிற்சி மருத்துவராய் பணியாற்றும் கிருஷ்ணப்ரியாவின் கண்களிலும் வானதியின் நிலையை நினைத்து நீர் திரண்டிருந்தது... முன்னொரு முறை இதே போல் வானதிக்காக மருத்துவமனையில் அவள் நின்றுகொண்டிருந்த கோலம் அவளின் மனக்கண் முன் வந்து அவளை பயமுறுத்தியது. என்னதான் மருத்துவம் பயின்றிருந்தாலும் தன் உடனிருப்பவர்களுக்கு ஒன்றென்றால் மனம் துடிக்கத்தானே செய்யும்.
அதுவும் வானதியும் கிருஷ்ணப்ரியாவும் ஒரே ஆசிரமத்தில் வளர்ந்தவர்கள். கிருஷ்ண பிரியாவை விட வானதி மூன்று வயது இளையவள், அவர்களிருவருக்கும் இடையில் அக்கா தங்கை உறவே மேம்பட்டிருந்தது. ஒரு நாள் கல்லூரி முடிந்து தன் பகுதி நேர வேலையையும் முடித்து இரவு 7 மணி வாக்கில் வானதி ஆசிரமம் செல்கையில் நான்கு குடிமகன்கள் ஒன்று சேர்ந்து பாவையவளின் கற்பை சூறையாடிவிட்டு அவளது உயிரையும் மாய்க்க... ஒரு பெரிய கல்லையும் அவள் தலையில் போட்டுவிட... அவள் இறந்துவிட்டாள் என்று நினைத்த கயவர்கள் ஒன்றும் நடவாதபடி அவ்விடம் விட்டு சென்றுவிட்டனர்.
இரவு வெகுநேரமாகியும் வானதியை காணாத ஆசிரமாவாசிகள் அவளுக்கு அழைக்க அந்த அலைபேசி எடுக்கப்படாமலே ஓய்ந்தது. ஆசிரம நிர்வாகிகள் காவல்துறையில் வானதியை காணவில்லை என்று புகார் கொடுக்க... அதே சமயம் அரசு கலை கல்லூரியின் அருகில் ஒதுக்குபுறமான இடத்தில் ஒரு பெண் சடலம் இருப்பதாய் அவ்வழியே சென்றவர்கள் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்திருந்தனர்.
காவல் அதிகாரியின் உதவியுடன் அந்த இரவு வேளையில் ஆசிரம நிர்வாகியும் சிறு கலக்கத்துடனே அவ்விடம் சென்று அந்த பெண் யார் என்று பார்க்க அது வானதி தான் என்பது உறுதியானது. ஆனால் அவள் இருந்த நிலை தான் எந்த பெண்ணிற்கும் ஏற்பட கூடாதது....