தன் கணவனுக்கு காபி கொடுத்து எழுப்பி தானும் அவர் அருகிலே அமர்ந்து அமைதியாய் காபியை அருந்தி முடித்தார் அகல்யா. "என்ன டா அதிசயம்.... அகல்யாவா இவ்வளவு அமைதியா இருக்குறது?" என்று கேலி பேசினார் நந்தகோபாலன்.
அவரது கைகளில் கிள்ளிய அகல்யா "உண்மை தான் மாமா நான் அதே அகல்யா தான்" என்றார்.
"ஆ..... வலிக்குது குட்டிமா...." என்றபடியே அகல்யா கிள்ளிய இடத்தில் தேய்த்துக்கொண்டார்.
ரொம்பவே பேசிட்டோம் சீக்கிரம் போய் குளிச்சுட்டு வாங்க சாப்பிடலாம் என்று சொல்லி விட்டு சமையலறை நோக்கி சென்றுவிட்டார் அகல்யா. அதற்குள் வேலையாட்களின் உதவியுடன் அனைவருக்குமான காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு தன் மகளின் அழுகுரல் கேட்க அவளை காண சென்றுவிட்டாள் முத்தமிழ்.
அறையினுள் நுழைந்த தமிழ் அங்கு கண்ட காட்சியில் வாய்விட்டு சிரித்துக்கொண்டிருந்தாள். தன் மகள் அழுதுகொண்டிருக்க அவளை சமாதான படுத்தவென ஆதி மகளின் முன் மண்டியிட்டு ஒரு நாய்க்குட்டியை போல குரைத்துக்கொண்டிருந்தான்.
தன் மனைவியின் சிரிப்பு சத்தம் கேட்டு ஆதி திரும்பி தமிழை செல்லமாய் முறைக்க அப்பொழுதும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் வாய்க்குள்ளேயே வெகுவாய் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டிருந்தாள்.
"உனக்கு என்ன டி சிரிப்பு? என் பாப்பாவை நான் சமாதான படுத்துவேன்...." என்று கோபம் போல் கேட்டான் ஆதி.
"நீங்க ரொம்ப நல்ல சமாதான படுத்துறீங்களா அது தான் சிரிப்பு வந்துடுச்சு...." என்றவள்
"ஏன் அதிப்பா நீங்க எழுந்த உடனே.... உங்க முன்னாடி ஒரு நாய் குரைச்சுட்டு இருந்தா நீங்க என்ன பண்ணுவீங்க.....?" என்று கேள்வியாக அவனை பார்த்தாள்.
"அடிப்பாவி... உனக்கு ஏன் டி இந்த கொலவெறி... எழுந்ததும் குரைச்சுட்டு இருக்க நாயை பார்த்தா லைட்டா பயமா கூட இருக்கும்..." என்று அவள் எதற்கு கேட்கிறாள் என்பது புரியாமலே பதிலளித்தான் ஆதி.