வழக்கம் போல் தன் பணியினை செம்மையுற மேற்கொண்டாள் பிரியா. மதிய உணவு இடைவேளையில் சந்தியாவும், காவியாவும் எவ்வளவு வற்புறுத்தியும் உண்ண மறுத்தாள். மாலை வரை வார்டில் இருந்த மூவரும், அன்றுடன் பணி முடிவடைவதால் நிலுவையில்லா சான்றிதழை அலுவலகத்தில் சமர்ப்பித்து விட்டு அதே புங்க மரத்தை நோக்கி வர அவர்களுக்கு முன்பே அங்கு நின்றிருந்தான் நந்தன். காவியா, நந்தனிடம் “அண்ணா உங்க போன் சுவிட்ச் ஆப் னு வந்துச்சு” என்று சொல்ல, அவனுக்கு அலைப்பேசி என்று ஒன்று இருப்பதே அப்பொழுது தான் நினைவு வந்தது போல.
மதியம் நந்தன் உணவருந்தினானா என்று கேட்க காவியா அவனுக்கு அழைத்திருந்தாள். அப்பொழுது அது சுவிட்ச் ஆப் என்று வர அதற்கு பின் அதை மறந்தவளாய் அவளும் தன் வேளையில் மூழ்கிவிட்டாள். நந்தன் அலைப்பேசியை எப்பொழுதும் அணைய விடமாட்டான். மருத்துவன் என்பதால் எந்நேரமும் அழைப்பு வரும் என்று முன்னெச்சரிக்கையாய் இருப்பவன், அணைந்திருந்த அலைப்பேசியை பார்த்ததும் தன் மடத்தனத்தை நினைத்து அவன் மீதே கோபம் கொண்டான்.
தங்கள் மருத்துவமனைக்கு வந்த நந்தகோபாலன் அவரது அறைக்கு செல்ல அவர் வந்துவிட்டதை கேள்விப்பட்ட நான்சி உடனே அவரை காண ஓடினாள். “மே ஐ கம் இன்” என்று கதவை தட்டியவள் “யெஸ்” என்ற பதிலை கேட்டதும் உள்ளே நுழைந்தாள்.
“அங்கிள் நந்தன் வரலையா?”
“இல்ல நான்சி ஏன் நான் வந்ததுல உனக்கு ஏதும் கஷ்டமா”
“அச்சோ அங்கிள்… அப்படிலாம் இல்ல….. எப்பவும் நந்தன் தான் இருப்பான் இன்னைக்கு இல்லையேன்னு கேட்டேன் அங்கிள்”
“வேற எதுவும் சொல்லனுமா நான்சி?”
“ஆமா நந்தன் எங்கனு கேட்டா மட்டும் நீ சொல்லிடப்போறியா” என்று மனதில் அவருக்கு அர்ச்சனை செய்தவள் முகத்தில் எந்த வித மாற்றமுமின்றி சிரித்தபடியே “இல்ல அங்கிள்” என்றாள்.
“ஓகே போய் உங்க டூட்டியை பாருங்க” என்றவரை முறைத்தபடியே வெளியே சென்றுவிட்டாள் நான்சி.
அவரை பொறுத்தவரை நான்சியும் மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவர் மட்டுமே. தன் மகன், தோழி என்று அவளை அறிமுகப்படுத்தி பணியில் சேர அனுமதி பெற்றதிலிருந்து நான்சி யை பற்றி அவரும் அறிந்திருந்தார்.