"டூட்டி டைம்ல என்ன வெட்டி பேச்சு பேசிட்டு இருக்கீங்க.... இன்னொரு தடவை இப்படி கூடி நின்று ஏதாவது பேசுறது என் பார்வைக்கு பட்டது.... ரெண்டு பேரையும் வேலையை விட்டே தூக்கிடுவேன் மைண்ட் இட்" என்று எச்சரித்துவிட்டு நகர்ந்தான்.
பணியில் சேர்ந்த முதல் நாளே ப்ரியாவின் பெயர் கெடுவதை அவன் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தால் தான் தவறு. அதற்காகவே அந்த இரு செவிலியர்களையும் எச்ச்ரித்தான். அவனுக்கு தெரியும் இவை போன்ற புறணி பேச்சுக்கள் ஏராளம் என்று.... ஏன் இதே போல் நான்சி பணியில் சேர்ந்த அன்றும் பேச தானே செய்தார்கள்.... ஆனால் அப்பொழுதெல்லாம் அதை பற்றி பெரிதாய் எண்ணாதவன்... இன்று தன்னவளை பற்றிய பேச்சு என்றதும் கொதித்து விட்டானே.
ஏற்கனவே அவன் வீட்டிற்கு அவனுடன் செல்ல விருப்பமில்லை அவளுக்கு... மேலும் இவற்றையும் ப்ரியா அறிய நேர்ந்தால்... தன்னுடன் பேசும் ஓரிரு வார்த்தைகளை கூட பேசமாட்டாள் என்பதை நந்தன் நன்கு அறிந்திருந்தான். இவை எதுவும் அறியாத ப்ரியாவோ குட்டி கண்ணனை ஆசையாய் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவன் அவளிடம் சென்று "கிளம்பலாமா..???" என்று கேட்க அவளோ "எங்கே??" என்று பதில் கேள்வி எழுப்பினாள்.
"வீட்டுக்கு தான்..." என்று நந்தன் கூற "நீங்க கிளம்புங்க. நான் இவனை எடுத்துட்டு என்னோட வீட்டுக்கு போறேன்..." என்று பதிலளித்தவளை பார்த்து அதிர்ந்து நின்றான்.
"மறுபடியும் முதல்ல இருந்தா.... டேய் நந்து சமாளி டா சமாளி....." என்று தனக்கு தானே ஆறுதல் கூறியவன் "இதுக்கு முன்ன எத்தனை குழந்தையை வளர்த்த???" என்று கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு சுவற்றில் சாய்ந்து நின்றபடியே கேட்டான். எதுக்கு இந்த கேள்வி என்று புரியாத பார்வை ஒன்றை வீசியவள் ஏன் என்று கேட்டாள்.