நந்தன் மருத்துவமனையில் ஒரு சிறப்பு அம்சம் இருந்தது. இவர்களது மருத்துவமனையில் பிறக்கும் எடை குறைவான குழந்தைகள்,ஏதேனும் நோயினால் தாய்ப்பால் கொடுக்கமுடியாத தாய்மார்களின் குழந்தைகள், பிரசவத்தில் தாய் இறந்துபோன குழந்தைகள் என சில நிபந்தனைக்குட்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கிமூலம் அவர்களே தாய்ப்பால் வழங்கி வந்தனர். அதற்கான தொகையையும் மருத்துவ செலவில் சேர்த்துவிடுவர்.
குழந்தைகளின் ஆரோக்கியம் அவசியம் அல்லவா வானதியின் மகவிற்கும் அவ்வாறே தாய்ப்பால் வழங்கிவந்தனர். இதை நந்தன் கூற கேட்டவள் அவனை நன்றியுணர்வுடன் நோக்கினாள். பின் இருவரும் தத்தமது பணியினை மேற்கொள்ள சென்றுவிட்டனர். ப்ரியா மட்டும் அவ்வப்போது அந்த குட்டி கண்ணனை பார்த்துவிட்டு சென்றாள்.
தன் பணியில் மூழ்கியிருந்தவன் மதிய உணவு இடைவேளையில் தான் நான்சி பணிக்கு வரவில்லை என்பதை அறிந்தான். அப்பொழுதே நான்சிக்கு அழைக்க ரிங் போய் கொண்டே இருந்தது... இரண்டு முறை முயற்சித்தவன் மறுபுறம் எடுக்கப்படாமல் இருக்க, அவளாக அழைப்பாள் என்று விட்டுவிட்டான். அமைதியாய் சென்றுகொண்டிருந்த நாளில் புயலடிக்க மாலையும் செவ்வனே வந்து சேர்ந்தது.
மாலை ஐந்து மணிபோல ப்ரியாவையும் வீட்டிற்கு அழைத்துச்செல்ல அவள் இருக்கும் இடம் நோக்கி சென்றான். அவளை நெருங்கியவனின் காதுகளில் இரு செவிலியர் பேசிக்கொண்டிருப்பது விழுந்தது.
"ஹே விமலா நம்ம நந்தன் சார் எந்த பொண்ணுக்கிட்டவாது இப்படி பேசி பார்த்து இருக்கியா..... ஆனா இந்த ப்ரியா மேடம இங்க பார்த்ததுல இருந்து ரெண்டு நாளா அவரு ஆளே மாறிட்டாரு டி...."
"ஆமா வசு... நானும் பார்த்தேன் காலைல கூட ரெண்டு பேரும் ஒண்ணா ஒரே கார்ல தான் வந்து இறங்குனாங்க.... ரெண்டு பேருக்கும் நடுவுல என்னவா இருக்கும்....???" என்று இருவரும் புறணி பேசிக்கொண்டிருக்க அவ்வழியே வந்த நந்தனோ இருவரையும் நெருங்கி வர அவனை பார்த்த இருவருக்கும் நா வறண்டு தொண்டை அடைத்தது.