"குட்டி பையன் இங்கவே இருக்கட்டும். ஆனா நான் என்னோட வீட்டுக்கு போறேன்... நீங்க கிளம்புங்க" என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.
"நில்லு கிருஷ்ணா.... உன்னை தனியாலாம் விட முடியாது. உன்னோட பாதுகாப்பும் எனக்கு முக்கியம் பிடிவாதம் பிடிக்காமல் என் கூட வா" என்று அவனும் விடாப்பிடியாக அவள் செல்லும் வழியை மறித்துக்கொண்டு நின்றான்.
"இவ்வளவு நாளும் நான் தனியா தான இருந்தேன்.... அப்போ எங்க போச்சு உங்களோட இந்த அக்கறை... நான் எந்த ஒரு தப்பான முடிவும் எடுக்க மாட்டேன்.... அதை நினைச்சு நீங்களும் உங்க குடும்பமும் பயப்படவேண்டிய அவசியம் இல்ல" என்று வழியை மறித்து நின்றவன் கையை தட்டிவிட்டு வேகமாய் சென்றுவிட்டாள். அவனோ அவளுக்காக மட்டுமே பார்க்க.... அவளோ தான் ஒன்னும் கோழை இல்லை என்பதை போல பேசிக்கொண்டிருக்கிறாள்.
நந்தன் தான் செய்வதறியாது நின்றிருந்தான். "இவ இருக்காளே... தான் புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு நிக்க வேண்டியது... ச்சை....." என்று தரையில் காலை உதைத்தவன் தன்னறைக்குள் சென்று அமர்ந்துக்கொண்டான்.
ப்ரியா எப்படி பேருந்தில் ஏறி தன் வீட்டிற்கு வந்தாள் என்பது அவளது நினைவிலே இல்லை. வந்தவளோ எதையும் யோசிக்க மறுத்து அமைதியாய் படுத்துவிட்டாள். அவள் இதுவரை யாரிடமும் இத்துணை கோபமாய் நடந்துக்கொண்டது இல்லையே.... ஆனால் நந்தனிடம் தான் கொள்ளும் கோபம் எதற்கு என்பதை அவள் யோசித்திருந்தாள் அதற்க்கான விடையும் கிடைத்திருக்குமே....
உரிமையுள்ள இடத்தில் தானே கோபத்தையும் வெளிப்படுத்தமுடியும். அதை அவள் முழுதாய் உணரும் பொழுது அவளது எதிர்வினை என்னவாக இருக்கும்??
இரவு தனியே வீட்டிற்கு வந்தவனிடம் அகல்யா, ப்ரியாவை பற்றி கேட்க அவள் வீட்டிற்கு சென்றுவிட்டாள் என்று சுருக்கமாய் சொல்லிவிட்டான் நந்தன். தன் மகனின் சோர்ந்திருந்த முகம் அவரை மேலும் கேள்விகள் கேட்க்காமல் தடுத்துவிட்டது. பெயருக்கென இரண்டுவாய் உண்டவன் அவனது அறைக்கு சென்றுவிட்டான்.
நாட்கள் அதன் போக்கில் செல்ல ப்ரியாவும் தன் ஒரு மாத பயிற்சியை முடித்திருந்தாள். நந்தனே சென்று அவளிடம் பேசிய பொழுதும் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் அவள் பேசியதில்லை. காலை எட்டு மணிக்கு வருபவள் இரவு 8 மணிவரை மருத்துவமனையில் தான் இருப்பாள். மூன்று வேளை உணவும் அங்குள்ள கேன்டீனில் தான்.