"டாட் ஒரு குட் நியூஸ் அந்த சாஸ்தா கம்பனி ஆர்டர் நமக்கு கிடைச்சு இருக்கு" என நான்சி, உடலில் ஒரு பக்கம் செயலிழந்து, பேச முடியாமல், வாய் ஒரு பக்கம் கோணி இருக்கும் தன் தந்தை ஜார்ஜிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். ஒரு மாதத்திற்கு முன் திடீரென வேலை செய்து கொண்டிருக்கும் போது மயங்கிய தந்தையை அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக நான்சிக்கு அழைப்பு வர அக்கணமே தான் பணிபுரியும் நந்தன் மருத்துவமனையில் இருந்து கிளம்பிவிட்டாள். அன்று கிளம்பியவள் தான் இன்று வரை நந்தனுக்கு அழைத்து எதை பற்றியும் கூறவும் இல்லை.
உயர் ரத்த அழுத்தமும், தொழிலில் பின்னடைவினால் ஏற்பட்ட மன அழுத்தமும் ஒன்று சேர்ந்து மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் கசிவு உண்டாகி அதனால் அவருக்கு உடலில் ஒரு பாகம் செயலிழந்தும் போனது. இவர்களது தொழிலில் பின்னடைவிற்கான காரணம் நான்சி அறிந்ததே. சக்திவேல் சில்க் ஹவுஸ் ஆதிநந்தனின் கைகளில் வரும்வரை ஜார்ஜ் சில்க் ஹவுஸ் தான் தொழிலில் உச்சத்தில் இருந்தது.
ஆதிநந்தனை சாதாரனமாய் நினைத்த ஜார்ஜ் அவனின் அசுர வளர்ச்சியை எதிர்பார்க்கவில்லை. அதன் பிரதிபலனே இன்று அவரது நிலை. தந்தையின் சுமையை குறைக்க தன்னுடைய மருத்துவ பணியை விடுத்து தன்னாலான உதவிகளை செய்ய துவங்கினாள் நான்சி. மீராநந்தன் அவளுக்கு நல்ல நண்பன் தான் ஆனால் தன் தந்தையின் இந்நிலைக்கு அவனின் அண்ணன் ஆதிநந்தனே முழு காரணம் என உறுதியாக நம்பினாள்.
தாயாய், தந்தையாய், ஒரு உற்ற தோழனாய் தன்னை வளர்த்த தந்தையின் தற்போதைய நிலை நான்சியை ஆதிக்கு எதிராய் செயல்பட வைத்தது. அதற்கான முதல் அடி தான் சாஸ்தா கம்பனி யின் ஆர்டர். எப்பொழுதும் பண்டிகை காலங்களில் தங்களது இருபது கிளைகளுக்கும் தேவைப்படும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உடுத்தும் படியான பட்டு பாவாடை சட்டை முதல் புடவை, வேட்டி, துண்டு என அனைத்தும் ஒரு வருடத்திற்கு இவ்வளவு என ஒவ்வொரு பெரிய பெரிய பட்டு சாம்பிராஜ்யங்களும் டெண்டர் எடுப்பர். இதுவரை sv சில்க் ஹவுசிற்கு வழங்கி வந்த டென்டர் முதல்முறையாய் கைமாறியது நான்சியின் கைங்கர்யத்தினால்.
நான்சி கூறிய செய்தியில் மகிழ்ந்த ஜார்ஜ் தன் கண்களிலே உற்சாகத்தை வெளிக்காட்ட அந்த உற்சாகம் அவளையும் தொற்றிக்கொண்டது. “இனிமேல் தான் டாட் நாம யாருனு அவங்க புரிஞ்சிக்க போறாங்க. உங்களுக்காக அதை நான் செய்வேன். உங்களோட இந்த நிலைக்கு காரணமானவங்களை நான் சும்மா விட மாட்டேன் டாட். இந்தாங்க நீங்க மெடிசின் சாப்டுட்டு தூங்குங்க” என தன் தந்தைக்கு தைரியமும் கொடுத்து மருந்தையும் கொடுத்து உறங்க வைத்துவிட்டு தன்னறைக்கு சென்றாள் நான்சி.
ப்ரியாவின் மீராவும், நந்தனின் கிருஷ்ணாவும் நந்தன் மருத்துவமனையில் இருந்து கிளம்பவே மணி 5 ஆகிவிட்டது. காரில் இருவரும் அமர்ந்து பயணப்பட அவ்விடம் ஒருவித அமைதியே வரமாய் பெற்றிருந்தது. “இன்னைக்கு இவ என்ன சொல்ல போறாளோ” என்ற பதட்டத்தில் நந்தனும், நந்தனுடன் தான் செல்வதாய் எடுத்த தன் முடிவில் தனக்குள்ளே மீண்டும் ஒரு சுய அலசலில் ஈடுபட்டிருந்த ப்ரியாவும் மொளனம் என்ற ஒன்றையே குத்தகைக்கு எடுத்திருந்தனர் போலும்.
ஒரு மணி நேர பயணத்திற்கு பின் ஒரு இடத்தில் காரை நிறுத்திய நந்தன் ப்ரியாவை இறங்குமாறு சொல்ல தன்னுடைய யோசனையை அப்பொழுது தான் அவள் கைவிட்டாள். நந்தனோ யாருக்கோ அழைத்து “எல்லாம் ரெடியா தான இருக்கு, நாங்க வந்துட்டோம்" என கூறி அழைப்பை துண்டித்தான். காரிலிருந்து இறங்கியவள் நந்தன் இநங்காமல் இருக்கவும் அவனை பார்க்க “நீ போய்ட்டே இரு நான் கார் பார்க் பண்ணிட்டு வரேன்” என அவனே சென்று காரை பார்க் செய்யும் அவசியம் இன்றியும் அதை செய்வதாய் கூறி சற்று முன் சென்றான்.
அதற்குள் ஒரு ஆள் அவளிடம் வந்து “நீங்க தான ப்ரியா?” என கேட்க அவளோ ஆமென தலையாட்டினாள். “நந்தன் சார் அங்க வர சொன்னாங்க” என புல்வெளி சூழ்ந்த சற்று இருட்டிய ஒரு வழி பாதை ஒன்றை கைகாட்டினான். அந்த பாதையை பார்த்துவிட்டு திரும்ப, அந்த ஆளை அங்கு காணவில்லை. இதுவரை வெளி உலகை அதிகம் பார்த்திராத ப்ரியாவிற்கு அது எந்த இடம் என்பது புரிபடவில்லை. ஏதோ திக்கற்றவளாய் அந்த ஆள் காட்டிய திசையில் நடந்தாள். இருபுறமும் அழகாய் வெட்டப்பட்ட புல்வெளிக்கு நடுவே போடப்பட்டிருந்த கற்பாதையில் நடக்க துவங்கினாள்.