கண்களில் மின்னிய காதலுடன் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் தன்னவனுக்கு என்னவென்று சொல்வாள் அவள் மனதில் அவன் என்றோ குடிபுகுந்ததை.
பேதையவள் தான் பேச்சற்று போனாள் மீரனவனின் அன்பால். எல்லையற்ற அன்பினால் தன்பால் ஈர்த்துக்கொண்டவனின் காதலை அவளும் ஏற்க தயாராக தான் இருந்தாள். இருப்பினும் மனதில் ஏதோ ஒரு நெருடல் அவன் அன்பிற்கு தான் ஏற்றவள் தானா என்று.
சுற்றி இருந்த இளவட்டங்களின் ஆர்ப்பரிப்பு அவளை சுயநினைவிற்கு கொண்டுவர, அவளது யோசனை தற்காலிகமாக தடைபட்டது. இன்னமும் ஒரு காலை மடக்கிய நிலையிலே தன் பதிலுக்காக காத்திருந்த நந்தனை கண்டவளின் முகம் அந்திவானமாய் சிவந்தது.
அவளது முகச்சிவப்பே ப்ரியாவின் மனதை நந்தனுக்கு தெளிவாய் உணர்த்தியது. நந்தன் அவளது மென்கரத்தினை பற்றி மோதிரம் அணிவிக்க அந்த காட்சியை அழகாய் படம்பிடித்தது யாழிடம் இருந்த நந்தனின் கைப்பேசி.
நந்தன் தன்னுடைய யோசனையை காலையிலே யாழிடம் கூறி அனைவரையும் அவன் நண்பனின் அந்த பீச் ரிசார்ட்க்கு அழைத்து வருமாறு கூறியிருந்தான். கை கோர்த்தபடியே மேடையை விட்டு இறங்கி வந்தவர்களை கண்ட அந்த மேகமும் தன் வாழ்த்தை சிறு சிறு தூறலாய் வெளிபடுத்தியது போல.
பிரியாவும் நந்தனும் சக்திவேல் தாத்தவிடமும், நந்தகோபாலன், அகல்யாவிடமும் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற அகல்யாவோ, பிரியாவை அணைத்துக்கொண்டு “எப்பவும் சந்தோசமா இரு டா, உனக்கு நாங்க இருக்கோம்” என்று பாசமாய் மொழிய பிரியாவின் கண்கள் கலங்கிவிட்டது.
அனைவரையும் இரவு உணவு உண்ண அகல்யா அழைக்க நந்தனோ “ம்மா நீங்க எல்லாரும் சாப்பிடுங்க நானும், பிரியாவும் ஒரு வாக் போய்ட்டு வரோம்” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு பிரியாவை அழைத்துக்கொண்டு அந்த பீச் மணலில் நடக்க ஆயத்தமானான்.
அதை கேட்ட ஆதியோ “நீ நடத்து டா நடத்து” என்று சிரித்தபடியே தமிழினியை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டான். “ஹே பிரியா, சீனியரை பிடிச்சு இருக்குனு எங்க கிட்ட கூட சொல்லவே இல்லல நீ” என சந்தியா கேட்க “அச்சோ சாண்டி அவளுக்கே இப்போ தான் அவ மனசு புரியுது போல. இதுல நீ நம்ம கிட்ட சொல்லலைனு வேற கேட்க்குற” என பதிலாய் காவியா பேச அவர்களின் கேள்விக்கு தான் என்ன பதில் சொல்வது என தெரியாமல் பிரியா விழித்துக்கொண்டிருந்தாள்.
“அட எதுக்கு இப்போ அவளை கிண்டல் பண்றீங்க அதெல்லாம் உங்களுக்கு நடக்கும் போது தெரிஞ்சுப்பீங்க. போங்க அந்த பக்கம்” என ஆபத்பாந்தவனாய் மொழிந்தான் நந்தன்.
“டேய் அண்ணா நேத்து நைட்டு அவ்வளோ புலம்பிட்டு இப்போ அண்ணி ஒகே சொன்னதும் ஓவரா ஆட்டம் போடுறியா” என யாழ் ஆரம்பிக்க “அம்மா தாயே, குட்டி சாத்தான் உன்கிட்ட சொன்னது என் தப்பு தான் மன்னிச்சுடுமா. இப்பொழுது நாங்கள் இருவரும் சற்று காற்றாட உலாவி விட்டு வர தங்களுக்கு சம்மதம் தானே” என இடை வரை குனிந்து நின்று கேட்ட நந்தனிடம் “அது அந்த பயத்தோடே இரு. இல்ல, அண்ணி கிட்ட எல்லாத்தையும் சொல்லி உன் மானத்தை கப்பல் ஏத்திடுவேன்” என்று மிரட்டிக்கொண்டிருந்தாள் யாழ்.
“அடிங்கு, என்ன மிரட்டுறியா” என யாழின் காதை பிடித்து திருகினான் நந்தன்.
“வலிக்குது, விடு டா விடு இல்லைனா அண்ணியை உன்கூட அனுப்ப மாட்டேன்” என யாழ், பிரியாவின் கைகளை பிடித்துக்கொண்டு கூறிய அடுத்த நொடி நந்தன் அவள் காதை திருகுவதை நிறுத்தியிருந்தான்.
“பாரா அண்னாக்கு கூட பயம் இருக்கு, யாழ் இனி நமக்கு என்ன வேணும்னாலும் அண்ணியை வைத்தே எல்லாம் சரிகட்டிடலாம் போலவே” என கொளசியும் யாழுக்கு ஹை ஃபை கொடுத்தாள்.
“ஒரு குட்டி சாத்தனையே சமாளிக்க முடியாது. இதுல இப்போ இன்னும் மூனு வேற சேர்ந்துடுச்சே, வினாயகா இந்த நாலு பேரையும் சமாளிக்க உன்னோட சக்தியை கொஞ்சம் எனக்கு கொடு பா” என வாய்விட்டே நந்தன் வேண்ட அவனுக்கு செவிசாய்த்தவர் அகல்யாவின் மூலம் அவனுக்கு உதவியும் புரிந்தார் போல.
“யாழ், நீங்க நாலு பேரும் இன்னும் என்ன பண்ரிங்க? வந்து சாப்பிடுங்க” என அகல்யா அழைக்க “இதோ வந்துட்டோம் மா” என கூறியவள் நந்தனிடம் “இப்போ தப்பிச்சுட்ட தம்பி கூடிய சீக்கிரம் மாட்டுவ” என மிரட்டிவிட்டு மற்ற மூவருடனும் உணவருந்த சென்றுவிட்டாள்.
இவை அனைத்துமே பிரியாவிற்கு புது அனுபவமாய் இருக்க அவர்களின் அரட்டையை ரசித்துக்கொண்டிருந்தாள்.
நால்வரும் அவ்விடம் விட்டு செல்ல “வா கிருஷ்ணா நாம நடந்துட்டே பேசலாம்” என நந்தன் கூற அவளும் அவனுடனே சேர்ந்து நடக்கலானாள்.