” ஆராரோ ஆரரிரோ" என்று தாலாட்டுப் பாடுகிறோம். ராகமும், தாளமும் தெரிந்துவைத்துக்கொண்டா பாடுகிறோம்?. குழந்தை அந்தப் பாட்டைக் கேட்டுத் தூங்கவில்லையா? ஸரஸு பாடி முடித்ததும் உனக்குத் தெரிந்தது ஏதாவது பாடு பார்க்கலாம். ரகுபதியும் ஒரு சங்கீதப் பைத்தியம்!" என்றாள்.
சாவித்திரியின் முகத்தில் சொல்லொணாத துக்கமும், பொறாமையும் நிரம்பியிருந்தன. சாவித்திரி தன் பிள்ளையின் மனமறிந்து நடந்து கொள்ள வேண்டும் என்று ஸ்வர்ணம் விரும்பியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஸ்வர்ணத்துக்குச் சாவித்திரி பதில் எதுவும் கூறாமல் தலையைக் குனிந்து தரையில் விரலால் கீறிக்கொண்டிருந்தாள்.
இதற்குள்ளாக வெளியே சென்றிருந்த ரகுபதி அழகிய வீணையுடன் ஸரஸ்வதி பாடும் இடத்துக்கு வந்து வீணையைப் படத்தருகில் வைத்துவிட்டு ஸரஸ்வதியின் எதிரில் உட்கார்ந்தான், சிறிது நேரம் அங்கு ஒருவரும் பேசவில்லை. பாட்டு முடிந்ததும் ஸ்வர்ணம் ரகுபதியைப் பார்த்து, "ரகு! ஸரஸு ஏன் பாடுகிறதில்லை என்று கேட்டாயே? அவள் பாடும்போது நீ இல்லையே என்று நினைத்துக் கொண்டேன். சமயத்தில் வந்துவிட்டாய்" என்று அன்புடன் கூறினாள்.
ஸரஸ்வதி தன்னுடைய வீணையை உறைக்குள் போட்டு மூடிவிட்டுப் புது வீணையை ஸ்ருதி சேர்ப்பதற்காக அதைக் கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். தனக்கும், அந்த வீட்டில் நடக்கும் விஷயங்களுக்கும். எவ்வித சம்பந்தமும் இல்லை போல் பாவித்திருக்கும் சாவித்திரி, வீணையைப் பார்த்துக் கொண்டிருந்த ஸரஸ்வதியின் பக்கம் திரும்பி அவளை வெட்டுவது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு மறுபடியும் நிலத்தில் கோலமிட ஆரம்பித்தாள். யாராவது ஒருவர். 'இந்த வீணை எதற்கு வாங்கினாய்?" என்று கேட்பார்கள் என்று ரகுபதி எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தான். அந்த வீணை எதற்காக, யாருக்காக வாங்கப்பட்டது என்கிறதை அவனாகவே சொல்லித்தான் ஆகவேண்டும் என்கிற நிலைமை ஏற்பட்டவுடன் ரகுபதி தன் தாயைப் பார்த்து, " அம்மா! இன்று நல்ல நாளாக இருப்பதால் டவுனுக்குப்போய் இந்த வீணையை வாங்கி வந்தேன், சாவித்திரிக்கு இருக்கட்டு மென்று. வெள்ளிக்-கிழமையாகவும் இருக்கிறது. இன்றே பாடமும் ஆரம்பிக்கலாம். என்ன ஸரஸு?" என்று ஸரஸ்வதியைப் பார்த்துக் கேட்டுவிட்டுத் தன் மனைவியை நோக்கிப் புன்னகை புரிந்தான்.
சாவித்திரி கோபம் பொங்கும் முகத்துடன் கணவனைத் ’துரு துரு' வென்று விழித்துப் பார்த்துவிட்டு அசட்டையுடன் முகத்தைத் திருப்பிக்கொண்டு பதில் எதுவும் கூறாமல் உட்கார்ந்திருந்தாள். கையில் வைத்திருந்த வீணையைக் கீழே வைத்து விட்டு ஸரஸ்வதி நிதானமாக, "இன்றைக்கே என்ன அவசரம் அத்தான்? ஆகட்டுமே; இன்னொரு நாள்