தோரணையில் அல்லவா கடிதம் எழுதி இருக்கிறான் அவன்? இன்னும் கொஞ்ச காலம் போனால் 'சாவித்திரி யார்?' என்றே கேட்டு விடுவான் போல் இருக்கிறது! "ஹும்" என்று கூறிவிட்டுச் சற்றுக் கோபம் அடங்கியவராகத் தன் முகவாயைத் தடவிக்கொண்டே யோசித்தார் ராஜமையர்.
“நான் சொல்கிறேனே என்று கோபித்துக் கொள்ளாதீர்கள். விரோதத்தை வளர்த்துக்கொண்டே போனால் அப்புறம் குழந்தையின் கதி என்ன ஆகிறது? யோசித்துப் பாருங்கள். நாளைக்கே சந்துருவுக்குக் கல்யாணம் ஆகவேண்டும். அப்புறம் சீதா வளர்ந்துவிட்டாள். அவளுக்கும் உடனே கல்யாணம் பண்ணி ஆகவேண்டும். கணவனுடன் வாழ வேண்டிய பெண் பிறந்த வீட்டில் இருந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்குமா? இந்தச் சந்தர்ப்பத்தையே ஒரு சாக்காக வைத்துக்கொண்டு சாவித்திரியை அழைத்துக்கொண்டு போங்கள். அவர்கள் சரக்கை அவர்களிடம் ஒப்பித்துவிட்டு வந்துவிடுங்கள். அப்புறம் எல்லாம் சரியாகிவிடும்'- மங்களம் இவ்விதம் கூறி விட்டு, ஆவலுடன் கணவன் முகத்தைப் பார்த்தாள்.
"மனைவியை ஏதோ கோபத்தில் அடித்துவிட்டான். நான் கூட உன்னை அடித்திருக்கிறேன் அந்தக் காலத்தில்! இவளும் கோபித்துக்கொண்டு வந்துவிட்டாள். என்னை மதித்து எப்போது வரச்சொல்லிக் கூப்பிட்டிருக்கிறானோ, எனக்கு இதைப் பற்றி அவன் ஏதாவது எழுத வேண்டுமோ இல்லையோ? அவ்வளவு கர்வம் பிடித்தவனிடம் என்னைப் போய்ப் பல்லைக் காட்டச் சொல்லுகிறாய். ”உம்மைத்தானே வரச் சொன்னேன்? இவளை ஏன் கூட்டி வந்தீர்?' என்று கேட்டால் முகத்தை எங்கே திருப்பிக்கொள்கிறதடீ?"
கோபத்தில் இப்படி இரைந்துவிட்டு அவசர அவசரமாக வெளியே போய்விட்டார் ராஜமையர், மங்களம் கண்களில் நீர் தளும்ப பிரமித்துப்போய் நின்றிருந்தாள். வெளியே செல்வதற்காக அங்கு வந்த சந்துரு தாயின் குழப்பமான நிலையை அறிந்து, அவள் அருகில் வந்து நின்று. " என்னம்மா விஷயம்?" என்று கேட்டான். மேஜைமீது கிடந்த அழைப்பிதழில் கொட்டை எழுத்துக்களில், 'ஸ்ரீமதி ஸரஸ்வதி-வாய்ப்பாட்டும் வீணையும்' என்று எழுதி இருந்தது பளிச்சென்று தெரிந்தது.
"அம்மா! ஸரஸ்வதி முதன் முதலாகக் கச்சேரி செய்யப் போகிறாளாமே. நன்றாகப் பாடுவாள் அம்மா" என்றான் சந்துரு சந்தோஷம் தாங்காமல்.
ஸரஸ்வதியின் பெயரைக் கேட்டாலே அகமும் முகமும் மலர்ந்து நிற்கும் சந்துருவின் மனதை ஒருவாறு புரிந்து கொண்டாள் மங்களம். இருந்தாலும் அதை வெளிக்குக் காட்டிக்கொள்ளாமல், “எல்லாம் ரொம்ப விமரிசையாகத்தான் நடக்கும்போல் இருக்கிறது. நாம்தான் ஒன்றுக்கும் கொடுத்து வைக்கவில்லை" என்றாள் மங்களம்.
இதுவரையில் தோட்டத்தில் ஏதோ அலுவலாக இருந்த சாவித்திரி உள்ளே வந்தபோது,