பார்வதி சற்று காரமாகவே பதில் சொன்னாள்; “இப்போ நான் உன் கண்ணுக்குப் பிடிக்குமா? என்னைப் பார்த்தால் உனக்கு மனுஷியாய்த் தெரியுமா? எல்லாம் தலைவிதி.”
பார்வதி சொல்லிவிட்டு, சமையலறைக்குள் போய் விட்டாள். மல்லிகா, அவளை விரோதமாகப் பார்த்தாள். ஏன் இப்படிப் பேசுறாங்க? அவள் உள்ளே போய் அவளின் கையைப் பிடித்துக் கொண்டு, “உடம்புக்கு எதுவும் பண்ணுதாம்மா?” என்று கேட்டாள்.
அவளையே பார்த்தாள் பார்வதி. அண்ணன் சொன்னதை எல்லாம், அவளிடம் சொல்லலாமா என்று கூட நினைத்தாள். பிறகு அந்த அருமை அண்ணன், “எனக்கென்னமோ மல்லிகா பசப்புக்காரியா தெரியுது” என்று சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது.
பார்வதி எதுவும் பேசாமல், அவளுக்கு இடியாப்பத்தைக் கொடுத்தாள். மல்லிகாவும் மறுபேச்சுப் பேசாமலே, எந்திரம் போல் தந்ததை வாங்கிக் கொண்டாள்.
இரவு சொக்கலிங்கம் வந்தார். மல்லிகாவால் தன் வெற்றி விவரத்தை அடக்கி வைக்க முடியவில்லை. அப்பாவிடம் கட்டுரைப் போட்டியின் விவரத்தை விவரமாகச் சொன்னாள். அவள் சொல்லிக் கொண்டிருந்த போதே, பார்வதி தன் தாம்பத்ய அறைக்குள் போய் விட்டாள்.
முன்பெல்லாம் காது விரியக் கேட்கும் அம்மா இப்படிப் போவதில் மல்லிகாவிற்கு வருத்தந்தான். தன்னையே ஆறுதல் படுத்திக் கொண்டாள். அம்மாவுக்கு உடம்புக்குச் சுகமில்லை போலும். உடம்பு சரியில்லன்னா மனசும் சரியா இருக்காது. அம்மாகிட்ட போய் பேசலாமா? வேண்டாம், எரிச்சல் இருக்கிற சமயத்தில் போனால் தப்பு. காலையில் பார்த்துக்கலாம்.
சொக்கலிங்கம் மகளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு மனைவியிடம் வந்தார்.
“என்னடி ஒரு மாதிரி இருக்கே?”
“ஒண்ணுமில்ல.”
“ஓ... உன் அண்ணன் வந்துட்டுப் போனாரோ... இன்னும் ஒரு வாரத்துக்கு அப்படித்தான் இருப்பே. அடுத்துக் கெடுக்குறதுல்ல நிபுணனாச்சே.”
“ஆமாம்... அவரு அடுத்துக் கெடுக்கவரு. நீங்க அரிச்சந்திர பிரபு. ஒரு பவுன் மோதிரம் வாங்குனதை சொன்னீங்க பாருங்க.”
“தற்செயலாய் வாங்குனேன்டி. அதுல அர்த்தம் பார்க்காதே.”
“நான் நடக்கிறதை எல்லாம் கவனிச்சிட்டுதான் பேசுறேன். மல்லிகா மேல் உங்களை விட எனக்குப் பாசம் அதிகம். அதனால்தான் கேக்குறேன். என் அக்காள் மகன் ராமனுக்கு நம்ம மல்லிகாவை கல்யாணம் பண்ணலாமுன்னு நினைக்கேன்.”
“என்னடி இது. காது கொடுத்தால், எதையும் பேசலாமுன்னு நினைக்கிறியா? பேசறதுக்கும் ஒரு