திடீரென்று பார்வதியைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். அவள் இவளை விலக்க முடியாதபடி கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, அவள் மார்பில் தலை சாய்த்துக் கொண்டு புரண்டு, “என்னை அங்கே அனுப்பிடாதீங்கம்மா... அனுப்பாதீங்க... அம்மா... அம்மா” என்று அரற்றினாள். விம்மினாள்.
பார்வதிக்கு என்னவோ போலிருந்தது. அவள் தாய்மைப் பேறு அடையவில்லையானாலும், இப்போது அது பெயர் சொல்லும்படி விழித்துக் கொண்டது. மல்லிகாவின் தலைமுடியை கோதிவிட்டுக் கொண்டே, “அழாதடி... நானிருக்கையில ஏண்டி அழுவுறே? ராமன் உனக்கு ஒரு குறையும் வைக்கமாட்டான்...” என்றாள்.
இப்போதும் மல்லிகா அழுதாள். ‘என்னை ராமன்கிட்ட அனுப்புறதை விட ‘அவங்க’ வீட்டுக்கே அனுப்பிடுங்கம்மா’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே, வெளியே மறுமொழி கூறாமல் தனக்குள்ளேயே அழுதாள்.
--------------
தொடரும்