உட்காருங்கள்" என்றான் மூர்த்தி .
பவானி தயங்கிக் கொண்டே உட்கார்ந்தாள்.
"நீ பாட்டுக்கு உட்கார் பவானி. அவன் உன் உடன் பிறந்தவன் மாதிரி" என்றாள் பார்வதி.
”சே! சே! சுத்தத் தவறு! உடன் பிறந்தவன் எதிரில் உட்காரலாம்; அன்னியன் எதிரில் உட்காரக் கூடாதாக்கும்! - பெண்கள் சுதந்திரம், சம உரிமை எல்லாம் சும்மா பேச்சளவிலே இருக்கிறதே தவிர, நடை முறையில் வரக் காணோமே" என்று அலுத்துக் கொண்டான் அவன்.
"அதெல்லாம் நடைமுறையில் வருவதற்கு முன்பு வாலிபர்களின் மனம் நன்றாகப் பண்பட வேண்டும். அது தெரியுமா உனக்கு மூர்த்தி? பேச்சிலே ஒழுங்கு இருந்தால் மட்டும் போதாது. செய்கையிலும் நடத்தையிலும் ஒழுக்கமும் பண்பாடும் நிரம்பி இருக்க வேண்டும். அது எல்லோரிடமும் இருக்கிறதா அப்பா? பெண்களை நிமிர்ந்து பார்க்காமல் போகிறவனை அசடன் என்றும், அப்பாவி என்றும் கேலி செய்கிறகாலம் ஆயிற்றே இது?" என்றார் கல்யாணராமன் .
மூர்த்தியின் முகம் சட்டென்று வாடிப் போயிற்று. "என்ன மாமா இது? நான் ஏதோ பேசப் போக நீங்கள் என்னவோ சொல்லுகிறீர்களே" என்று பேச்சை மாற்றினான்.
பவானிக்கு இந்தப் பேச்செல்லாம் பிடிக்கவில்லை. பஞ்சாயத்துப் பள்ளிக்கூடத்து ரைட்டரிடமிருந்து டி.ஸி வாங்குவது ’சிவனை நேரில் தரிசித்து வரம் வாங்கும் விஷயமாகவல்லவா இருக்கிறது?' என்று கவலைப்பட்டு உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
தலையைக் குனிந்து சிந்தனையில் மூழ்கி இருந்த பவானியின் தோற்றத்தை மூர்த்தி தன் ஒரக் கண்களால் அளவெடுத்துக் கொண்டான். கனகாம்பர