Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (முதல் பாகம்) - 12 - சரோஜா ராமமூர்த்தி
1.12. பெண்களின் சம உரிமை!
திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த மூர்த்தி விழித்துக் கொண்டு சமையலறையில் இவர்கள் பேசுவதை அரை குறையாகக் கேட்டுக் கொண்டிருந்தான் . இடையில் வந்து சடாலென்று பேச்சில் கலந்து கொள்வதைவிடச் சற்றுப் பொறுத்திருந்து எழுந்து போகலாம் என்று நினைத்து அங்கேயே படுத்திருந்தான்.
பாலு புதுப் பள்ளிக்கூடத்தில் சேர இருப்பது அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அடுத்த வீட்டுக்குள் போய் பவானியுடன் பேசுவதற்கு ஏதாவது ஒரு சாக்கு வேண்டாமா?
பாலு கூறியதைக் கேட்டதும் கல்யாணம், ”அதற்கென்ன அப்பா டவுனில் இருக்கும் முனிசிபல் ஹைஸ்கூலில் சேர்த்தால் போச்சு. நாளைக்குப் போய் ரைட்டரைக் கேட்டு டி.ஸி. வாங்கி வந்துவிடு" என்றார் .
"அவனை ஏன் போகச் சொல்ல வேண்டும்? நானே போய் வாங்கி வருகிறேன்" என்றாள் பவானி.
திண்ணையிலிருந்த மூர்த்தி மெதுவாகக் கூடத்தை அடைந்தான். பேச்சு சுவாரஸ்யமான கட்டத்துக்குத் திரும்புகிறது என்பதை அறிந்ததும் அடுத்தாற்போல் இருந்த சமையலறைக்குள் அவன் நுழைவதற்கு அதிக நேரம் பிடிக்கவில்லை .
இது வரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பவானி தயக்கத்துடன் எழுந்து நின்றாள்.
”நோ, நோ -- நீங்கள் பேசாமல் உட்கார்ந்து கொள்ளுங்கள் இந்தக் காலத்தில் -- அதுவும் ஈக்வாலிட்டி ஏற்பட்டிருக்கும் இந்த நாளில், ஒரு ஆணைப் பார்த்துப் பெண் எழுந்து நின்று மரியாதை செய்வது எல்லாம் எனக்குப் பிடிக்காது.