வர்ணத்தில் மெல்லிய கரை போட்ட கைத்தறிப் புடவையை உடுத்தி, வெள்ளைச் ’சோலி' அணிந்திருந்தாள் அவள். அலை அலையாகப் படிந்து வளர்ந்திருந்த கூந்தலை முடிச்சிட்டி ருந்தாள் பவானி.
நீண்ட அவள் கண் இமைகள் இரண்டும் மை தீட்டப் பட்டவை போலக் கருமையுடன் விளங்கின. அவள் வேண்டுமென்று கண்களைச் சுழற்றுவது இல்லை. ஆனால், மனத்திலே குமிழியிடும் துயரம் அவள் கண்களில் தேங்கி அவைகளைச் சஞ்சலத்தில் ஆழ்த்தி அங்கும் இங்கும் சுழல வைத்தன.
'யாருடன் பேசினால் என்ன தவறு நேர்ந்து விடுமோ? யாரைப் பார்த்தால், ஏதாவது களங்கம் வந்து விடுமோ' என்றெல்லாம் அவள் மனம் தவித்துக் கொண்டிருந்தது. அழகாகப் பிறந்தது அவளுடைய குற்ற மில்லை. அழகை ஒரு பெண்ணுக்கு அள்ளி அளித்த ஆண்டவன் அவள் வாழ்க்கையைச் சூன்யமாக்கி விட்டானே. அவனுடைய குற்றம்தானே அது?
தண்ணீர் கொண்டு வருவதற்குக் குளத்துக்குப் போனால் அறுபது வயசான சேஷாத்ரி ஏதாவது காரணத்தை வைத்துக் கொண்டு அவளிடம் பேச வருகிறார்.
”பையன் நன்றாகப் படிக்கிறானா? வாசு போன அப்புறம் உன் அண்ணா இந்தப் பக்கமே வரவில்லையே? கூடப் பிறந்தவர்களே அப்படித்தான் அம்மா" என்று ஏதாவது பேசிக் கொண்டு நிற்பார் குளத்தங் கரையில்.
”என்னோடு பேசாதீர்கள். இதெல்லாம் என்ன அனாவசியமான பேச்சுக்கள்!" என்று அவரிடம் சொல்லி விட வேண்டும் என்று பவானி துடிப்பாள். ஆனால் ஊரில் நாலு பெரியவர்களுடைய உதவி தனக்குத் தேவையாக இருக்கும் என்று எண்ணி ஒரு பரிதாபச் சிரிப்புச் சிரித்து விட்டு அங்கிருந்து வீட்டுக்கு வந்து விடுவாள்.
தலையைக் குனிந்து கொண்டு அவள் உட்கார்ந்திருந்தாலும் அவளுடைய சிந்தனை பூராவும் பாலுவின் வருங்காலத்தை எப்படி உருவாக்குவது