அங்கே யெல்லாம் பலதரப்பட்ட பெண்களுடன் அவனுக்குப் பழக்கம் உண்டு. ஊரிலே நல்ல சினிமாவாக வந்தால் அவன் தனக்குத் தெரிந்த குடும்பப் பெண்களை அழைத்துப் போகத் தவற மாட்டான். முதல் வகுப்பு டிக்கட வாங்கி சினிமா பார்த்த பிறகு டாக்சியில் அவர்களை வீட்டுக்கு அழைத்து வருவான். சிரிப்பும் வேடிக்கையுமாக அவர்களுடன் பொழுது போக்குவது ஒரு நாகரிகம் என்று அவன் கருதினானோ என்னவோ!
மூர்த்திக்கு மங்கள தாஸ் என்கிற குஜராத்தி வியாபாரியின் மகள் தமயந்தி நினைவுக்கு வந்தாள். செக்கச் செவேல் என்று செவ்வாழைத் தண்டு மாதிரி வாளிப்பான கைகளும், உருண்டை முகமும் உடைய அவளோடு எத்தனை இடங்களுக்குப் போயிருக்கிறான்? 'மரீன' கடற்கரையிலே அந்த நீண்ட பாலத்தில் அவனும் அவளும் எத்தனை பெளர்ணமி இரவுகள் கை கோத்து உலாவி இருக்கிறார்கள்!
பெண்களை விளையாட்டுப் பொம்மைகளாகவும் அலங்காரப் பொருள்களாகவும் தன் உல்லாச வாழ்க்கைக்கு ஒரு கருவியாகவும் நினைத்து இறுமாந்திருந்த மூர்த்தியின் மனம், பவானியின் உதாசீனத்தை நினைத்துப் பொருமியது.
ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டுவிட்டு மூர்த்தி மறுபடியும் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான். அங்கிருந்து பஸ் ஒன்று புறப்பட்டுக் கொண்டிருந்தது. அடுத்த ஊர் வரையில் அவன் ஓர் அலுவலாகச் செல்ல வேண்டியிருந்ததால் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான். பஸ் முனிசியல் கட்டிடத்தின் மணிக் கூண்டைச் சுற்றிக் கொண்டு, முனிசிபல் ஹைஸ்கூலுக்கு வந்து சேர்ந்தது. பள்ளிக்கூடத்தின் தாழ்வாரத்தில் போட்டிருந்த பெஞ்சில் பவானியும் பாலுவும் உட்கார்ந்திருந்தனர். மூர்த்தி ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தான். அங்கே கூடியிருந்த பல பேரை விட்டு அவன் பார்வை பவானியின் மேல் சென்றது. அடக்கமே உருவாக அமர்ந்திருந்த அவளது கவர்ச்சி-கரமான தோற்றம், அவன் மனத்தில் பல எண்ணங்களை எழுப்பிவிட்டது.
"அந்த உருண்டை மூஞ்சி தமயந்தியும், பள்ளக் கண்களையுடைய ரோகிணியும் இந்தப் பவானியின் முன்பு எம்மாத்திரம்?" என்று மூர்த்தி நினைத்தான்.
இவள் விதவையானால்தான் என்ன? விதவைக்கு வாழ்வே இல்லையா? அவர்கள் மறுமணம் செய்து கொண்டு வாழத்தான் சட்டமும், சமூகமும் இடங் கொடுக்கிறதே! ஆனால் பவானியின் உள்ளத்திலே என்ன இருக்கிறது? மென்மையான உடலையும் கவர்ச்சி கரமான