"ஐயய்யோ! கிணற்றிலே விழுந்து விட்டாயா?" என்று அலறினாள் காமாட்சி. " 'காலாகாலத்தில் கல்யாணம் செய்து கொடுக்காமல் பெண்ணை வீட்டிலே வைத்துக்கொண்டிருந்தார்கள். அவள் வாழ்க்கை வெறுத்துக் கிணற்றிலே விழுந்தாள்' என்று எங்களுக்குக் கெட்ட பெயர் வாங்கித் தரத் திட்டம் போட்டாயா? நீயாகவே வந்து விழுந்துவிட்டாயா?"
"இல்லை! அவளாக விழவில்லை; நான்தான் பிடித்துத் தள்ளினேன்!" என்றான் கல்யாணம் ஆத்திரத்துடன்.
இது என்ன அநியாயம்?" என்று தம்பதியர் இருவரும் ஏககாலத்தில் கேட்டனர்.
"அவர் விளையாட்டுக்கு அப்படிச் சொல்கிறார் அப்பா! இவர்தான் என்னைக் கிணற்றிலிருந்து கரையேற்றிக் காப்பாற்றினார்" என்றாள் கமலா.
கல்யாணம் நடந்த கதையை விவரித்தான். எல்லாவற்றையும் கேட்டு விட்டுக் காமாட்சி அம்மாள், "நல்ல வேளை சரியான சமயத்தில் வந்து காப்பாற்றினாய். இல்லாதபோனால் எப்பேர்பட்ட அபாண்டமெல்லாம் எங்கள் மேல் ஊரார் சுமத்தி யிருப்பார்களோ! இவளுக்கு கல்யாணமாகாததால் மனக் கசப்படைந்து நானே இவளைக் கிணற்றில் பிடித்துத் தள்ளிவிட்டதாகக்கூடக் கதை கட்டி விடுவார்கள்" என்றாள்.
'பெண் கிணற்றில் விழுந்து சாகாமல் பிழைத்தது பெரிதாகப் படவில்லை. தன்மீது அபவாதம் விழாமல் தப்பியதுதான் முக்கியமாகத் தோன்றுகிறது இந்த அம்மாளுக்கு!' - கல்யாணத்துக்குக் காமாட்சியின் பேச்சு வியப்பளித்தது; கமலாவின் மீது அவனுக்குப் பரிவு அதிகரித்தது.
இந்தச் சமயம் வீட்டுக்கார ரங்கநாத முதலியார் வந்து சேர்ந்தார். வரும்போதே "இரண்டு மாத வாடகை பாக்கி. கொடுக்க முடியவில்லை என்றால் வீட்டைக் காலி பண்ண வேண்டியதுதான்" என்று கூறியபடியே வந்தார்.
"நல்ல ஆளய்யா நீர்! கூரை பற்றி எரியும் போது பீடிக்கு நெருப்புக் கேட்ட கதையாக இருக்கிறது உமது போக்கு" என்றான் கல்யாணம்.