Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 22 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 22 -- கிணற்றில் கமலா!
கமலா அடுப்பு ஊதினாள். புகை வந்ததே தவிர நெருப்புப் பற்றவில்லை. "சனியனே! இரு, இரு! சண்டித்தனமா பண்ணுகிறாய்? என்றாவது ஒரு நாள் என்னிடம் நாலு நோட்டுக் கிடைக்காமல் போகாது. அப்போ கள்ளச் சந்தையிலே பாட்டில் கிரசின் வாங்கி அத்தனையையும் உன் தலையிலே அபிஷேகம் பண்ணி நெருப்பு வைக்கிறேன்" என்று கருவிக் கொண்டாள் கமலா, கண்களைக் கசக்கியபடியே.
"பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சே, சாப்பாடு ரெடியா?" என்று கேட்டுக் கொண்டே வந்தான் விசு.
"விரட்டறதிலே ஒண்ணும் குறைச்சல் இல்லே. காலமே வந்து கொஞ்சம் கூடமாட ஒத்தாசை பண்ணப்படாதோ?" என்றாள் கமலா.
"எனக்கு 'ஹொம் ஒர்க்' இருந்தது."
"இல்லாட்டா உதவி பண்ணிக் கிழிக்கிறாயாக்கும்?"
"நான் ஏன் உதவணும்? நீ இழுக்கிற இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்க நான் என்ன கல்யாணம் மாமாவா? உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறேனா?"
"தடி ராஸ்கல் ! உனக்குச் சோறு கிடையாது, போ! பழையதுதான்" என்று பொய்க் கோபத்துடன் சீறினாள் கமலா. அவன் கூறியதை அவள் மனம் வருடித் தந்து கொஞ்சியது.
"பழையதுதான் உடம்புக்கு நல்லது; அதோடு சட்டித் தயிரையும் வடுமாங்காயையும் எடு."
அவனை மகிழ்விக்க ஆடைத் தயிராக எடுத்துப் போட்ட கமலா, "ஏண்டா, கொஞ்ச நாளா கல்யாணம் மாமாவையே காணுமே? ஏன் வரதேயில்லை?" என்று கேட்டாள்.
"அவருக்குக் கல்யாணம்!"