"என்ன? எங்கே? எப்போது?" என்று பதறினாள் கமலா.
"நிஜக் கல்யாணம் இல்லை, அக்கா. நீ பயப்படாதே. நாடகத்திலேதான்!" என்றான் விசு.
"ஓ! ஏதோ பர்மா அகதி, அது இது என்றார்களே."
"ஆமாம், ஆமாம்! அந்த அது இதுக்காகத்தான் நாடகம்!" என்று கூறி எழுந்த விசு, புத்தகப் பையை இடது கரத்தில் தூக்கிக் கொண்டு, ஓடினான். "இரண்டு நிமிஷம் லேட்டானால்கூட அந்த இரட்டை மண்டை பெஞ்சு மேலே ஏற்றி விடுகிறது!" என்று அவன் தன் உபாத்தியாயரை முற்றத்திலிருந்து வாழ்த்துவது கமலாவின் காதுக்கு எட்டியது.
"பர்மா அகதி, பர்மா அகதி!" என்று முணு முணுத்துக் கொண்டாள் கமலா. "பர்மாவிலிருந்து வந்த அகதிகளுக்குத் தான் மவுசு. உள்ளூர் அகதியாக இருந்தால் யார் லட்சியம் பண்ணுகிறார்கள்?" என்று தன்னைத் தானே கோபத்துடன் கேட்டுக் கொண்டு குடத்தை எடுத்து இடுப்பில் வைத்துக் கொல்லைப்புறம் நடந்தாள். அதைப் புளி போட்டுத் தேங்காய் நாரினால் அழுந்த அழுந்தத் தேய்த்தாள். "பர்மா அகதி களாம், நாடகமாம், நாடகத்தில் ஒரு கல்யாணமாம். இந்த ஏழையின் ஞாபகம் அவ ருக்கு எங்கே வரப் போகிறது!"
அவளுக்குக் கோபம் வந்தது. குடத்தைக் கழுவியதோடு தண்ணீர் தீர்ந்து விட்டது. தாம்புக் கயிற்றில் குடத்தை மாட்டி, விருட்டென்று சுருக்கை இழுத்து ஆத்திரத்துடன் சரேலென்று கிணற்றில் இறக்கினாள். அந்த வேகத்தைச் சமாளிக்க முடியாமல் கயிறு ஜகடையிலிருந்து நழுவிச் சிக்கிக் கொண்டது.
"தரித்திரம்! நான் பெண்ணாய்ப் பிறந்ததே அடுப்புப் புகையுடனும் கிணற்று ஜகடையுடனும் போராடத்தான்" என்று அலுத்துக் கொண்டு கயிற்றைச் சரி செய்ய முயன்றாள்; எட்டவில்லை. கிணற்று மதில்மீது ஏறினாள். சாய்ந்தாள்.
அதே சமயம் வாசலில், "ஸார்! ஸார்!" என்ற குரல் கேட்டது. அது கல்யாணத்தின் குரல்தான் !
'ஐயோ! அவர் என்னை இந்தக் கோலத்தில் பார்த்துவிடக் கூடாதே' என்று எண்ணிய