ஆண் கரம் ஒன்று அவள் மீது படுவது இதுவே முதல் முறை. நான் அவனை மன மாரக் காதலிப்பது போலவே, அவனும் தன்மீது அன்பு கொண்டிருந்தால் அவள் கவலைப்பட்டிருக்க மாட்டாள். இப்படி நடுங்கிப் பதறவும் நேர்ந்திருக்காது. கரையேறிய பிறகு அவனை ஏமாற்றி விட்டதாகக் கூறிச் சிரித்திருப்பாள். ஆனால் கல்யாணத்துக்குப் பவானியின் மீது இருந்த மோகம் அவளுக்கு நன்றாகத் தெரியும். அவன் தன்னைக் காப்பாற்றியது ஓர் உயிர் மற்றோர் மனித உயிரிடம் காண்பிக்கும் இயல்பான இரக்க உணர்வின் அடிப்படையில்தான். ஆனால் அவளோ அவனது ஸ்பரிசத்தை விரும்பிக் கள்ளத்தன மான முறையில் அதைப் பெற்றும் இருந்தாள். இந்தக் குற்ற உணர்வு காரணமாகத் தான் அவள் இப்போது நடுங்கிக் கொண்டிருந்தாள்!
கோயிலுக்குப் போயிருந்த காமாட்சி அம்மாளும் மாசிலாமணியும் திரும்பி வந்து சேர்ந்தார்கள்.
"கொல்லைப்புறம் ஏதோ சத்தம் கேட்கிறதே!" என்று சொல்லிக் கொண்டே காமாட்சி கிணற்றடிக்கு நடந்தாள்.
கமலா வெடவெடத்து நிற்பதோ கல்யாணம் ஈரம் சொட்ட நிற்பதோ அவள் கண்ணில் படவில்லை. முதலில் குடம்தான் அவள் கவனத்தைக் கவர்ந்தது!
"அடி பாவி! குடியைக் கெடுத்தியே! வேணுமென்றே நசுக்கினாயா? படிப்புத்தான் வரலை, வீட்டுவேலைகளையாவது உருப்படியாகச் செய்வாய் என்று பார்த்தால் அதிலும் பூஜ்யம்தானா?" என்றாள். கமலா அழ ஆரம்பித்தாள்.
கல்யாணத்துக்கு கோபம் கோபமாக வந்தது. பற்களை நறநறவென்று கடித்தான்.
இதற்குள் மாசிலாமணி, "இந்தா என்ன நடந்ததென்று விசாரியாமலேயே எதற்கு இப்படி எரிந்து விழுகிறாய்?" என்று கேட்டார். "கமலா ஏன் உன் உடம்பு நனைத்திருக்கிறது? எப்படி குடம் நசுங்கியது?" என்றார்.
"கிணற்றிலே விழுந்துட்டேன் அப்பா!"