Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 60 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 60 -- தப்பியோடத் திட்டம்.
பவானி பற்றி அவதூறாகப் பேசியதாகக் கருதி அதற்காகத் தன்னைச் சுடுவதற்காகத் தான் துப்பாக்கி கொண்டு வருகிறார் கோவர்த்தனன் என்று முதலில் கல்யாணம் நினைத்தான். ஆனால் அவரோ, "கல்யாணம்! இன்புளூயன்ஸாவை ஒழித்துக் கட்டினால்தான் பவானிக்கு நல்லது. ஏன், உலக மக்கள் எல்லோருக்கும் நிம்மதி. அதனாலே நான் போய் மிஸ்டர் இன்புளூயன்ஸாவை விரட்டி விட்டு வருகிறேன், ஓகே?" என்று கூறியபடியே தம் காரில் ஏற ஷெட்டை நோக்கி நடந்தார். "அவன் தகராறு பண்ணினால் ஐ வில் ஷூட் ஹிம்!"
குடிபோதையில் இருக்கும் அவரிடம் போய்த்தான் பவானி வீட்டில் பார்த்ததைக் கூறியே இருக்க வேண்டாம் என்று கல்யாணத்துக்கு இப்போது தோன்றியது. 'என்ன விபரீதம் இதனால் நிகழப் போகிறதோ?' என்று பயந்தான். 'ஏதாவது தாறுமாறாக இவர் செய்யாதிருக்க வேண்டுமே' என்று எண்ணியபோது தானும் பின்னோடு செல்வது உசிதம் என்று கருதினான்.
ஷெட் பக்கமாகப் போய்க் கொண்டிருந்த அவர் பின்னோடு நடந்தபடியே, "இப்போது என்ன அவசரம்? காலையில் பார்த்துக்கொள்ளலாமே?" என்றான்.
"என்ன! நீதிக்குக் குறுக்கே நிற்கிறாயா? சட்டம் தன் கடமையை ஆற்ற விடாமல் முட்டுக்கட்டை போடுகிறாயா?" என்று முடிந்த மட்டில் குரலில் கம்பீரத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டார் கோவர்த்தனன். "இதற்குத் தண்டனை என்ன தெரியுமா? ஐ வில் ஷூட் யூ!"
"அட பாவமே! எல்லாவற்றுக்கும் ஒரே தண்டனை தானா? எதற்கெடுத்தாலும் 'ஐ வில் ஷூட் யூ' தானா?" என்று முணு முணுத்துக் கொண்ட கல்யாணம், அவரைத் தனியே அனுப்ப அஞ்சியவனாக, "அப்படியானால் நானும் பின்னோடு வருகிறேன்; ஐ வில் ஹெல்ப் யூ" என்றான்.
காரோட்ட அவரை அனுமதிக்கக் கூடாது என்று முடிவு கட்டியவனாக, "நான் ஓட்டிக் கொண்டு வருகிறேன், நீங்கள் இப்படி உட்காருங்கள்" என்று அவர் காரின் பின் கதவைத் திறந்து பிடித்தான்.
"தாங்க் யூ மை ஃபிரண்ட்!" என்றார் கோவர்த்தனன். ஆனால் துப்பாக்கி மட்டும் கல்யாணத்தின் தலையைக் குறி பார்த்த படியே இருந்தது. "இன்னும் இரண்டே நிமிஷத்தில் நாம் பவானி வீட்டில் இருக்கணும். இல்லாதபோனால் ஐ வில் ஷூட் யூ" என்றார்!