"என்னம்மா உடம்புக்கு? தலை வலியா? ஜுரமா?" என்று பதறியவாறு கேட்டுக் கொண்டே சமையல் அறையை விட்டு வெளியே நடந்தார் வேதாந்தம். அவசரமாக மாடிப் படிகளில் ஏறி அவர் உள்ளே போவதற்குள் காமாட்சி அவர் முன்னால் வந்து நின்றாள்.
"அதெல்லாம் ஒன்றுமில்லை அப்பா. அவருக்கு காசமாம். கல்யாணத்துக்கு முந்தியே இருந்ததாம்....."
வேதாந்தம் முகத்தைச் சுளித்துக் கொண்டார். தலையில் பெரிய கல் ஒன்று விழுந்து விட்டது என்பது அவருக்குத் தெரிந்து போயிற்று. பெற்றோருக்கு ஒரே பிள்ளை . பணங்காசு அதிகம் கிடையாது. நமக்கு அடங்கிய மருமகனாக வீட்டோடு இருப்பான். தள்ளாத வயசில் அவனும், மகளும் ஆதரவாக நம்மைப் பார்த்துக் கொள்வார்கள் என்று எண்ணியிருந்த எண்ணமெல்லாம் ஒரு விநாடியில் மறைந்து போயின.
பாதிப்படி ஏறியவர் திரும்பி விட்டார். டாக்டர் ஸ்ரீதரனுக்கு போன்' செய்தார். அப்பொழுது டாக்டர் ஸ்ரீதரன் இளைஞன். வைத்தியக் கல்லூரியிலிருந்து பட்டம் பெற்று வெளியே வந்து ஆறு மாதங்கள் ஆகி யிருந்தன. இவர்கள் குடும்பத்தில் சில்லறை வியாதிகளுக்கு வைத்தியம் பார்த்து வந்தான்.
அவனுக்குத் தெரிந்த பிரபல வைத்தியர்களை அழைத்துவந்து நல்ல முறையில் வைத்தியம் செய்து பார்த்தான் ஸ்ரீதரன்.
பலன் பூஜ்யமாகி விட்டது. காமாட்சி விதவை யானாள். அவர்கள் கல்யாணத்தை ஆமோதித்து நடத்திய அதே சமூகம், இந்தச் சம்பவத்தையும் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தது.
”அதிர்ச்சி வைத்தியம்' என்று வைத்திய முறையிலே ஒன்று இருப்பதாகப் படிக்கிறோம். வேதாந்தம் அடியோடு மாறிப் போனார். அவரிடம் இருந்த பழைமை எண்ணங்கள், அசட்டுத் தனங்கள். அதைரியம் யாவும் மறைந்து போயின. காமாட்சியை மேலும் 'இண்டர் மீடியட்' வரை படிக்க வைத்து. வைத்தியக் கல்லூரியில் சேர்த்தார். மருமகனின் மறைவு. மகள் நிற்கும் நிலைமை, சமூகத்தின் சுயநலம் யாவும் சேர்ந்து அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்தன.