Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 13 - சரோஜா ராமமூர்த்தி
2.13. ராதாவுக்குத் தெரிந்தவர்
அன்றிரவு டாக்டர் ஸ்ரீதரன் வீட்டுக்கு வரும் போது இரவு ஒரு மணி ஆகிவிட்டது. அவரால் முடிந்த வரையில் சுப்புலட்சுமிக்கு வைத்தியம் செய்து பார்த்தார். தான் பிழைத்து எழ வேண்டும் என்கிற ஆசை அவள் மனத்தை விட்டுப் போய் பலகாலம் ஆயிற்று. ஊசிகளுக்கும் மருந்துகளுக்கும் அந்த மனத்தின் அபிப்பிராயத்தை எதிர்த்து நிற்கும் சக்தி இல்லை. ’குழந்தை குழந்தை!’ என்று வீட்டைச் சுற்றி வளைய வந்த ஒரு ஜீவன் மறைந்து போவதில் டாக்டர் காமாட்சிக்குத் தான் வருத்தம். தன் அம்மா இனிமேல் பிழைக்க மாட்டாள் என்பது தெரிந்திருந்தும் அவளைப் பிழைக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அந்த அறியாமையை நினைத்து அவள் மனத்துள் சிரித்துக் கொண்டாள்.
இரவு மூன்று மணிக்கு டாக்டர் காமாட்சி ஸ்ரீதரனுடன் 'போனில்' பேசினாள். "விளக்கு அணையும் தறுவாயில் இருக்கிறது. அம்மா ரொம்பவும் சிரமப்படுகிறாள். ஊசிகளையும், மருந்துகளையும் நிறுத்தி விட்டேன். அவள் இது வரையில் ஆராதித்து வந்த கற்பகாம்பிகை ஸ்தோத்திரங்களை மாத்திரம் சொல்லி வருகிறேன் ......." ’போனில்' பேசிய குரலில் தெளிவு இல்லை. துக்கமும் துயரமும் இழையோடின. அவள் டாக்டர் ஆனதால் சமாளிக்க முடிந்தது.
பொழுது விடிவதற்குள் சுப்புலட்சுமி போய் விட்டாள். நான் இனிமேல் ’தனி' என்று 'போன்' மூலம் வேதாந்தம் அறிவித்தார். அதிகாலையில் எழுந்து குளித்துக் காலைச் சிற்றுண்டிக்காக வரும் டாக்டர் ஸ்ரீதரன் தம் அறையிலேயே சிந்தனையில் மூழ்கி உட்கார்ந்திருந்தார்.
சுவாமிநாதன் வியப்புடன் மாடிப் படியேறி மேலே சென்று உள்ளே எட்டிப் பார்த்தார்.
“டாக்டர் உடம்பு சரியில்லையா என்ன?" என்று விசாரித்தார்.
"உடம்புக்கு ஒன்றுமில்லை. மனசுதான் சரியாக இல்லை" என்று சொல்லிக் கொண்டே, தம் கடமைகளில் நினைவு வந்தவராக அவர் கீழே இறங்கி வந்து தம் அலுவல்களில் ஈடுபட ஆரம்பித்தார்.
ராதா விழித்தெழுந்து உள்ளே வந்ததும் சுவாமி நாதன் "ஏனம்மா! அண்ணா ஒரு மாதிரியாக