சென்னை நகரின் ஜனத்திரளில் அரண்மனைக்காரத் தெரு வழியே செல்லும் ரிக்ஷாவில் ராதா உட்கார்ந்திருப்பது மூர்த்தியின் தீட்சண்யயான கண்களுக்குத் தெரிந்தது.
”கோபி ஒரு நிமிஷம். நான் தம்புச் செட்டித் தெருவில் ஒருவரைப் பார்க்கவேண்டும். இப்படியே பீச் ஸ்டேஷனுக்கு நடந்து போய்க்கொண்டிரு, வந்து விடுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே அவசரமாகச் சென்று அந்தக் கூட்டத்தில் மறைந்து போனான்
மூர்த்தி.
கச்சேரி ஆரம்பமாகிவிட்டது. அன்று ஏனோ அதிகக் கூட்டம் இல்லை. ராதாவுக்கு வெகு சமீபமாக மூர்த்தி ஒரு டிக்கெட் வாங்கிக் கொண்டுபோய் உட்கார்ந் தான். சங்கீதத்திலேயே கவனமாக இருந்த ராதா அவனைக் கவனிக்கவில்லை. அத்துடன் அங்கே அவளுக்குத் தெரிந்தவர்கள் அநேகம் பேர் இருந்தார்கள். பாகவதர் பாடும் ஒவ்வொரு ராகத்தைப் பற்றியும் கீர்த்தனங்களின் அர்த்த விசேஷத்தைப் பற்றியும் அருகில் இருந்தவர்களுடன் பேசிக் கொண்டே சங்கீதத்தை அனுபவித்தாள் ராதா.
அன்று, ராகம், தானம் பல்லவியை ஒன்றரை மணி நேரம் பாடினார் வித்வான், அதற்கப்புறம் சில்லறை உருப் படிகள் பாடப்பட்டன. 'மாயம் வல்லவன் கண்ணனென்று என் தாயும் வந்து சொன்ன துண்டு' என்கிற உருப்படியைப் பாடிய போது ராதா கல கல வென்று சிரித்து விட்டாள். அவள் மனத்திலே சிரிப்பை மூட்டிச் சிரிக்கச் செய்தவன் கண்ணன். ஆனால் மூர்த்தி அதை வேறுவிதமாகப் புரிந்து கொண்டான். ' உணர்ச்சிகளுக்கு சீக்கிரமாக அடிமையாகி விடுகிறவள் இந்தப் பெண், பாட்டைக் கேட்டுச் சிரிக்கிறாள்; பேசும் போது சிரிக்கிறாள். தெருவில் நடந்து செல்லும்போதும் சிரிக்கிறாள். இவளிடம் உறுதியும் கண்டிப்பும் இருக்காது. பவானியைப்போல் இவள் நெஞ்சழுத்தம் வாய்ந்தவள் இல்லை' என்பதை மூர்த்தி சுலபமாகப் புரிந்து கொண்டான்.
வித்வான் மங்களம் பாடி முடிக்கும் போது மணி சரியாக ஒன்பதே முக்கால்; கூட்டம் திமுதிமுவென்று வெளியே வந்தது. காரில் வந்தவர்கள் போய் விட்டார்கள்.
கோடம்பாக்கம் செல்லும் பஸ் போய் விட்டது என்று ரிக்ஷாக்காரன் ஒருவன் தெரிவித்தான்.