"என்ன அம்மா சொல்லுகிறாய்? நமக்கு ஏதாவது உறவா? அப்படி யாரும் இதுவரையில் இங்கு வந்ததே யில்லையே?...."
”உறவு என்று சொன்னேனா. தெரிந்தவர் என்று தானே சொல்கிறேன்!"
ராதாவுக்கு அவர் ஏதோ சந்தேகமாகக் கேட்கிறார் என்பது விளங்கிவிட்டது. கோபம் வர, அவள் பெரு மூச்சு விட்டுக் கொண்டே சாப்பிட்டு முடித்தாள்.
சுவாமிநாதனுக்கோ சரிவரப் பேசத் தெரியாமல் ’இருந்த பொழுதிலிருந்து வளர்த்த குழந்தை என்னிடமே மறைத்துப் பேசுகிறாளே’ என்று கோபம் வந்தது. 'இருக்கட்டும். அவளும் வயசு வந்த பெண், படித்தவள். நல்லது கெட்டதை ஆராயும் திறமை படைத்தவள் நாமும் அவசரப்படக்கூடாது' என்று நினைத்து அவர் அத்துடன் அன்று விட்டு விட்டார்.
ஸ்ரீதரனுடைய போக்கே அலாதியாக இருந்தது. வீட்டிலே அவர் மனத்தைக் கவர மனைவி இல்லை. ஒரே பெண் குழந்தை. ஸ்ரீதரன் வீட்டில் இருக்கும் சமயங்களில் ஜெயஸ்ரீ பள்ளிக்கூடம் போய் விடுவாள்.
இரவில் ஸ்ரீதரன் வீட்டுக்கு வரு முன்னே படுத்துத் தூங்கிப் போவாள் ஜெயஸ்ரீ.
ராதா பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டாள். அவளை நன்றாகப் படிக்க வைத்து விட்டார் அவர். தகுந்த இடமாகப் பார்த்துக் கலியாணம் பண்ணிக் கொடுத்து விட்டால் அவள் புருஷன் வீட்டுக்குப் போய் விடுவாள்; வீட்டைச் சுற்றிச் சுற்றி வரும் பொறுப்புகள் அதிகம் இல்லை. ஆகவே தன் சகோதரியைப் பற்றித் தெரிந்து கொள்ளவோ அவள் சுதந்திரத்தில் தலையிடவோ ஸ்ரீதரனுக்கு அவகாசம் இல்லை. ஆசையும் இல்லை .
தாமரை இலைத் தண்ணீரைப் போல இருந்தது அவர் வாழ்க்கை . அத்துடன் இந்த விஷயங்களிலெல்லாம் பெண்களுக்கு இருக்கிற அனுபவம் ஆண்களுக்குப் போதாது. சுவாமிநாதன் நாலும் தெரிந்தவர். உலசு விவகாரங்களில் அடிபட்டவர். ஆகவே, அவர் தான் ராதாவைப் பற்றி அதிகமாகக் கவலைப்பட்டார். *சமயம் வாய்க்கும்போது ஸ்ரீதரனிடம் சொல்லி