இருக்கிறார்? டாக்டர் காமாட்சியின் தாய் போய் விட்டாளாம். பாவம் அந்தப்பெண்ணுக்கு இனிமேல் யார் ஆதரவு? தகப்பனாருக்கும் வயசு ஆயிற்று. பாவம், அவளுக்கும் சிறு வயசு. தனியாக இருக்க வேண்டும்........."
ராதாவுக்கு இந்த விஷயங்களெல்லாம் ஒன்றும் சுவாரசியப்படவில்லை. ’தனியாக வாழ்வது என்றால் இவருக்கு ஏன் பிடிக்கவில்லை?' என்றுதான் அவளுக்குத் தெரியவில்லை . சலிப்புடன் எழுந்து அவள் தோட்டத்துக்குப் போய் விட்டாள். ஸ்ரீதரன் தம் காலை அலுவல்களை முடித்துக் கொண்டு ’டிஸ்பென் ஸரி'க்குப் போய் விட்டார்.
அதற்கப்புறம் பல நாட்கள் வரையில் அந்த வீட்டில் எதுவுமே நடக்கவில்லை. பதினைந்து தினங்களுக்கு அப்புறம் ஒரு நாள் மாலை. ராதா கோகலே ஹாலில் நடக்கவிருந்த சங்கீதக் கச்சேரி ஒன்றுக்கு புறப்பட்டாள்.
"உன்னோடு யார் வருகிறார்கள்?" என்று விசாரித்தார் சுவாமிநாதன்.
”ஏன்?" என்று புருவத்தை சுளித்துக் கொண்டே கேட்டாள் ராதா.
”தனியாகவா நீ திரும்பி வருவாய் என்று கேட்கிறேன்?"
’இதென்ன அசட்டுக் கேள்வி? தனியாகத் திரும்பி வந்தால் என்னவாம்’ என்று கேட்டு விட ராதா துடித்தாள் . ஆனால் அவளை அப்படிக் கேட்க விடாமல் ஏதோ ஒன்று தடுத்து விட்டது.
"எனக்குத் தெரிந்தவர்கள் யாராவது வருவார்கள். அவர்கள் கூட வந்து விவேன்" என்று கூறிவிட்டு அவர் பதிலை எதிர்பாராமல் ராதா வெளியே சென்று விட்டாள்.
தெரு வழியே நடந்து சென்று கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை அடைந்தாள். ரயில் வந்ததும் அதில் ஏறி உட்கார்ந்து கோட்டை நிலையத்தில் இறங்கி ஒரு ரிக்ஷா வைத்துக் கொண்டாள். அப்பொழுது மாலை சுமார் நாலரை மணி இருக்கலாம். ஹைக்கோர்ட்டுக்கு எதிரில் இருந்த ஹோட்டல் ஒன்றிலிருந்து மூர்த்தியும், கோபியும் வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.