"இரண்டு ரூபாய் கொடுங்க அம்மா. வீட்டிலேயே கொண்டு போய் இறக்கிடறேன்" என்று வேறு அவன் யோசனை கூறினான்.
இந்த அகாலத்தில் ரிக்ஷாவில் போனால் சுவாமிநாதன் கோபிப்பார் என்பது ராதாவுக்குத் தெரியும். அவளுக்குப் போவதற்கு தைரியம் உண்டு. நடுவில் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் 'ஓ' வென்று கத்தலாம். ’உதவி- உதவி' என்று கூக்குரல் போடலாம். முடிந்தால் அருகில் சாலை ஓரத்தில் இருக்கும் வீட்டில் போய் உதவி கேட்கலாம் - என்றெல்லாம் அசட்டுத் தைரியம் அவள் மனதில் நிறைந் திருந்தது. பட்டப் பகலைப்போல் விளக்குகள் எரியும் போது என்னதான் நேர்ந்து விடுமென்று வேறு தோன்றி யது. ஆனால் சுவாமிநாதன் அன்றே சொன்னார்: அகாலத்தில் அப்படி எல்லாம் தனியாக வரக்கூடாதும்மா என்று. அந்தக் கிழவருக்கு யார் பதில் சொல்ல முடியும்?
தயங்கியபடி நின்ற ராதாவின் அருகில் மூர்த்தி வந்து நின்றான். கைகளைக் குவித்து வணக்கம் செலுத்தினான்.
"என்னை நினைவிருக்கிறதா?" என்று கேட்டான். ராதா தன் பெரிய விழிகளைச் சுழற்றியவாறு ஒருகணம் யோசனை செய்தாள்.
"அன்று நீங்கள் மியூஸியம் தியேட்டரில் போட்ட நாடகத்துக்கு நான் வந்திருந்தேனே........"
"எஸ்... எஸ்" என்றாள் ராதா. பிறகு . "நீங்கள் எதுவரைக்கும் போகிறீர்கள்!" என்று விசாரித்தாள்.
”நானா? கோடம்பாக்கத்தில் இருக்கிறேன். ஆமாம். நீங்கள் டாக்டர் ஸ்ரீதரனின் தங்கைதானே? உங்கள் வீட்டுக்கு அருகிலேயே இருக்கிறேனே. ஏன் கேட்கிறீர்கள்? உங்களோடு யாரும் வரவில்லையா?......"
ராதா தலையைக் குனிந்து கொண்டு நின்றாள். பிறகு மெதுவாக. ”எனக்கு பாட்டுப் பைத்தியம் அதிகம் உண்டு, என்னவோ இந்தக் கலைகளில் ஒரு அலாதி ஆசை எனக்கு. திரும்பி எப்படி வருவது என்று யோசிக்காமல் வந்து விட்டேன்."
அருகில் சென்று கொண்டிருந்த 'டாக்ஸி'யைக் கை தட்டி அழைத்தான் மூர்த்தி.