கையில் குதிரைப் பொம்மையை எடுத்து வந்து கூடத்தில் வைத்து, ”அப்பா! இங்கே பாருங்கள்? இது எப்படியெல்லாம் ஆடுகிறது?" என்று அவரை அழைத்துக் காண்பித்தாள்.
வேதாந்தம் அவளையும் குதிரையையும் மாறி மாறிப் பார்த்தார். அவர் மனத்தை வேதனை பிழிந்தெடுத்தது. இப்படியெல்லாம் நாலு குழந்தைகளைப் பெற்றெடுத்து விளையாட்டுச் சாமான்கள் வாங்கிக் கொடுத்து மகிழ வேண்டிய பெண் அல்லவா இவள்? பாவி! அவள் வாழ்க்கையை நான் எப்படிப் பாழாக்கி விட்டேன்!' என்று இடிந்து போய் கூடத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார் அவர்.
”ஏனப்பா பேச மாட்டேன் என்கிறீர்கள்?" என்று ஒரு குழந்தையைப் போலக் கேட்டாள் காமாட்சி குதிரையை இப்படியும் அப்படியும் ஆட்டிக்கொண்டே.
”யாருக்காக அம்மா இதை வாங்கி இருக்கிறாய்?"
”நமக்குத் தான் இருக்கட்டுமே! நாலு நாளைக்கு வைத்துக்கொண்டிருப்பது. அப்புறம் எங்கள் ஆஸ்பத்திரியில் குழந்தைகள் விடுதிக்குக் கொடுத்து விடுகிறேன்..."
தகப்பனாரை இப்படி யெல்லாம் மகிழ்விக்க வேண்டும் என்று மகள் ஆசைப்பட்டாள். பெண்ணின் மனசிலே இப்படியெல்லாம் ஆசைகள் எழுகின்றனவே அந்த ஆசைகளை அவள் எப்படி நிறைவேற்றிக்கொள்ள முடியும்?' என்று தகப்பனார் மனத்துக்குள் குமைந்தார்.
அந்தக் குதிரை கூடத்திலேயே ஐந்தாறு நாள் கிடந்தது. ஒரு தினம் காமாட்சி அதை எடுத்துத் தன் கார் டிரைவரின் குழந்தையிடம் கொடுத்து விட்டாள்.
"என்னம்மா இது? பொம்மையை வாங்கி வந்தாய்? ஏன் திரும்பக் கொடுத்து விட்டாய்" என்று கேட்டார் வேதாந்தம்.
”எந்தெந்தப் பொருள் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருந்தால் தான் அதன் தரம் உயரும் அப்பா. நான் என்ன விளையாட்டுக் குழந்தையா?"