தரிசனம்னு வர்ற கேஸ், தேசிகாமணிக்கு அதிலே எல்லாம் நம்பிக்கை கிடையாது."
"நம்பிக்கை இருக்கறதும் இல்லாததும் வேற விஷயம். அவரோட தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் அடங்கிய பகுத்தறிவுப் படிப்பகத்திலே போய்ப் பிரசங்கம் பண்றதுக்கு முந்திகூட ஏதோ கடவுள் வாழ்த்து மாதிரி ஒரு ஸ்தோத்திரத்தை முணுமுணுத்துட்டுத்தான் கமலி பிரசங்கம் பண்ணினாள்னு கேள்விப்பட்டேன். அப்படி அவள் செஞ்சதைத் தங்களுக்குப் பிடிக்காத விஷயமா இருந்தும் ஒரு நாகரிகம் கருதி அவர் யாரும் தடுக்கலேன்னும் கேள்விப்பட்டேன்."
"இருக்கலாம், ஆனா அது இந்தக் கேஸுக்கு எப்படிப் பிரயோஜப்படும்?"
"அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் சர்மா! நடந்ததைக் கோர்ட்ல வந்து அவர் சொல்லுவாரோ இல்லியோ?"
"தாராளமா வந்து சொல்லுவார். தேசிகாமணி நிஜத்தைச் சொல்றதுக்கு எங்கேயும் யார் முன்னாடியும் பயப்படறது இல்லே."
"அது போதும் எனக்கு."
"பாவம்! இந்தச் சீமாவையர் பண்ணுன அக்கிரமத்திலே வெட்டுக் காயம் பட்டு ஆஸ்பத்திரியிலே கெடந்துட்டு இப்பத்தான் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்திருக்கார் அந்த மனுஷன்."
"என்ன பண்றது சர்மா? விபூதிப் பூச்சு, தெய்வ நம்பிக்கைங்கிற வேஷம் எல்லாமாச் சேர்ந்து சீமாவையர் முதல் நம்பர் ஆசாரக்கள்ளனாயிருந்தும் அவரை நல்லவனா உலகத்துக்குக் காட்டிடறதே?"
"யாருக்கும் பயப்படாமே மனப்பூர்வமா உள்ளதைச் சொல்லணும்னாத் தேசிகாமணியை ஆஸ்திகனா ஒத்துக்கலாம். சீமாவையரைத்தான் உண்மையான நாஸ்தீகன்னு சொல்லணும். வேஷம் போடறவனை விட வெளிப்படையானவன் யோக்கியன். சீமாவையருக்குச் சாஸ்திரம்,