Flexi Classics தொடர்கதை - துளசி மாடம் - 26 - நா. பார்த்தசாரதி
கமலி ரவி கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போதே ஸ்ப் கோர்ட்டிலிருந்து ஸம்மன் சர்மாவுக்கும் கமலிக்கும் வந்து சேர்ந்திருந்தது. கமலி போய்த் தரிசனம் செய்திருந்த சங்கரமங்கலம், பூமிநாதபுரம் கோவில்களின் தூய்மை கெட்டு விட்டதால் அவற்றுக்கு மறுபடி உடனே சம்ப்ரோட்சணம் செய்ய ஆகிற செலவு என்று ஒரு கணக்குப் போட்டுப் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் கோரி வழக்குத் தொடுத்திருந்தார்கள். வழக்குத் தொடுப்பதற்கான செலவு, தூண்டுதல் எல்லாம் சீமாவையர், அகமத் அலிபாய் ஆகியோருடையது என்றாலும், ஒவ்வொரு கோவிலுக்கும் சம்ப்ரோட்சணம், யாகசாலை, கும்பாபிஷேகம், மண்டலாபிஷேகச் செலவுகளுக்கு நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடர்ந்திருந்தவர் பாதிக்கப்பட்ட உள்ளூர் ஆஸ்திகர் என ஒருவராகவோ சிலராகவோ முன் வந்திருந்தார்கள். கோவில் கமலி நுழைந்ததனால் தூய்மை கெட்டுப் போய் ஆஸ்திகர்களும் முறையான இந்துக்களும் தொழுவதற்குப் பயன்படாமற் போய் விட்டதென்றும், எவ்வளவு விரைவில் கும்பாபிஷேக ஏற்பாடு செய்ய முடியுமோ அவ்வளவு விரைவில் செய்தாக வேண்டுமென்றும் வழக்குத் தொடுத்தவர்கள் கோரியிருந்தார்கள். எனவே சர்மாவுக்கும், கமலிக்கும் வந்திருந்த கோர்ட் நோட்டீஸில் விரைவாக விசாரணைக்கு ஒரு தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. முன்பு செய்தது போலவே கோர்ட் நோட்டீஸுடன் வேணு மாமாவிடமே கலந்தாலோசித்தார் சர்மா. வேணு மாமா சிறிதும் கலங்காமல் யோசனை சொன்னார்.
"கலியாணத்துக்கு ஒரு வாரம் இருக்கறப்போ பார்த்து நீரும், கமலியும் கோர்ட்லே வந்து நிற்கிற மாதிரி நோட்டீஸ் அனுப்பிச்சிருக்கா, பரவாயில்லே, கவலைப்படாதேயும். ப்ராக்டீஸ் பண்ணாததாலே எனக்கு வக்கீலுக்குப் படிச்சதே மறந்து போச்சு, ஆனா இந்தக் கேஸுலே உமக்கும் கமலிக்கும் நானே வக்கீலா இருந்து கவனிச்சுக்கறேன். பைத்தியக்காரத்தனமா இந்தக் கேஸைப் போட்டவங்க மூஞ்சியிலே கரியைப் பூசிண்டு போறாப்ல பண்றேனா இல்லையா பாரும்!"
"இப்போ நீங்க எதுக்குச் சிரமப்படணும்? வேறு யாராவது வக்கீல்கிட்ட விட்டுடலாமே? இதுனாலே கல்யாண ஏற்பாடுகளை நீங்க கவனிச்சுண்டிருக்கிறது தடைப்படுமே?"
"ஒண்ணும் தடைப்படாது. இந்தக் கேஸுலே சில நுணுக்கமான ஆர்க்யுமெண்டுகள் இருக்கு. அதை எல்லாம் பத்தி நான் ஏற்கெனவே யோசிச்சு வச்சிருக்கேன். ஃபூன்னு உள்ளங்கையாலே ஊதி விடறாப்ல ஊதி விட்டுடலாம். கவலைப்படாதேயும் சர்மா..."