ஒளிஞ்சுண்டுடறதுதான் அவர் வழக்கம்."
"உதாரணம் பிரமாதம் சர்மா!... இந்த மாதிரிக் கையாலாகாதவனை நல்ல பாம்போட கூட ஒப்பிட்டு நல்ல பாம்பை அநாவசியமா அவமானப்படுத்த நீர் தயாராயில்லேன்னு தெரியறது."
"நல்ல பாம்புக்குக் கொஞ்சம் மானரோஷம் உண்டு. அதை அடிக்கக் கம்பை ஓங்கினா எதிர்த்துச் சீறும்; படமெடுக்கும். கடிக்கக் கூட வரும்..."
சர்மா சீமாவையரைச் சித்தரித்த விதத்தைக் கேட்டு வேணு மாமா இரசித்துச் சிரித்தார். அப்புறம் சர்மாவிடம் வினவினார்:
"கோயில் திருப்பணிக்குக் கமலி பேரிலே நன்கொடை கொடுத்து ரசீது வாங்கச் சொன்னேனே; அந்த ரசீதைப் பத்திரமா வச்சிருக்கேளா? அதுலே என்ன எழுதியிருக்குன்னு இப்போ நினைவிருக்கோ?"
"இந்து ஆஸ்தீகப் பெருமக்களே! இது உங்கள் திருப்பணி; உவகையோடு முன் வந்து உதவுங்கள்'ன்னு தலைப்பிலே அச்சிட்டிருக்கான்னு நினைப்பு. அப்புறம் தேதி, பணம் குடுத்தவங்களோட பேர், கீழே தர்மகர்த்தாக்களில் ஒருத்தரோட கையெழுத்து எல்லாம் அதிலே இருக்கு."
"பலே! அதைப் பத்திரமா எடுத்துண்டு வந்து எங்கிட்டக் குடுத்துடும்."
"கேஸ், விசாரணை, வாய்தான்னு ரொம்ப இழுபடுமோ? அப்படி இழுபட்டா நம்ம கல்யாணக் காரியங்களையே கவனிக்க முடியாம இதுக்குன்னே அலைய வேண்டியதான்னா போயிடும்?"
"இழுபடாதுன்னு தோன்றது. 'பப்ளிக் இன்ட்ரஸ்ட் உள்ள அவசர விஷயம்'னு வற்புறுத்தி அவா கேஸ் போட்டிருக்கா. கமலி நுழைஞ்சதாலே கோவில் சாந்நித்யம் கெட்டு முறைப்படி தினசரி வழிபட வருகிற எல்லா இந்துக்களுக்கும் பயன்படாததாகி விட்டதுன்னும், உடனே சம்ப்ரோட்சணம் செய்தாகணும்ன்னும் தான் வழக்கு. அதனாலே கேஸை எடுத்துண்டாச்சுன்னா உடனே விசாரணை நடந்து முடிஞ்சுடறதுதான் வழக்கம். எப்பிடியும் ரெண்டுலே ஒண்ணு சீக்கிரமா முடிவாயிடும்."
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
----------
தொடரும்...